உலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும் இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன. ஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும் 90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10% க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” என்பதை புரிந்து கொள்வான்.




எப்போதும் வயிற்று வலியால் ஒருவன் துடித்துக் கொண்டிருப்பதில்லை. எப்போதாவது அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுவலி ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் பசியோடு இருப்பதில்லை. எப்போதாவது ஓரு மனிதன் வியாதியிலேயே உழல்வதில்லை. எப்போதாவது சில சமயம் மருத்துவரைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வது இல்லை. எப்போதாவது சில நேரங்களில் வக்கிலைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்பட்டு விடுகின்றது.



ஆக மனிதன், தன் வாழ்க்கையில் 90%க்கும் அதிகமாக அல்லாஹ்வின் அருளையே அனுபவிக்கிறான். ஒரு 10% துன்பமும் வரம் என்பதை மறுப்பதற்கில்லை. சில நேரங்களில் அவனையும் மீறி இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு சான்றாக அவனது விருப்புக்கு அப்பாற்பட்டவைகளும் நடந்து விடுகின்றன.



அதனால் அவன் தன்னை அர்ரஹ்மான் அர்ரஹீம் என்று அறிமுகப்படுத்துகிறான். படைப்பினங்களுக்கு கருணை செய்வதை தன் மீது அவனே கடமையாக்கிக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான்.அப்படியானால் வியாதி எதற்காக ஏற்படுகிறது? கஷ்டங்கள் எதற்காக ஏற்படுகிறது இயற்கையின் விபத்துகளால் நாங்கள் எதற்காக அழிக்கப்படுகிறோம்? பல்வேறு துன்ங்களுக்கும், கொடுமையான சித்திரவதைகளுக்கும் எதனால் நாங்கள் உள்ளாக்கப்படுகிறோம்? என்று கேட்கும்போது அறிவு குறைந்த, இறைவனைப் புரிந்து கொள்ளாதவன் தான் இவற்றை எல்லாம் இறைவன் தன் மீது கொண்ட கோபத்திற்கு எடுத்துக் காட்டு என்று கொள்வான். ஒரு புத்திசாலி, அல்லாஹ்வை நன்கு புரிந்து கொண்டவன் ‘இந்த சோதனையும் அல்லாஹ்வின் கருணையில் ஒன்றுதான் என்று புரிந்து கொள்வான்.



ஒரு தாய் தன்னுடைய குழந்தையின் ஒருகைகளையும் பிடித்துக் கொண்டு, அவனுடைய கால்கள் மீது தன்னுடைய கால்களை வைத்து அழுத்திக் கொண்டு அவனுடைய வாயைப் பலவந்தமாக திறந்து, அவனுக்கு பிடிக்காத விளக்கெண்ணையை ஊற்றும் போது, அந்த உலகம் தெரியாத குழந்தை “இப்படி சித்திரவதை செய்கிறாளே, கொடுமைப்படுத்துகிறாளே, இவளும் ஒரு தாயா? நம்மைக் கொடுமைப்படுத்துவதுதான் இவளது வேலையா என்று எண்ணிக் கொள்ளும்.



ஆனால் உலக அனுபவமும், முதிர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் பெற்றவர்கள். இது தாய் நிகழ்த்தும்கொடுமை” என்று சொல்ல மாட்டார்கள். என்ன சொல்வார்கள்? “குழந்தைக்கு அஜீரணக் கோளாறு, குழந்தையின் உள்ளிருந்து சிறுகச் சிறுக, கொன்று கொண்டிருக்கும் வியாதிக்கு இவ்வளவு சிரமத்தோடு இந்த மருந்தைத் தரத்தான் வேண்டும், அந்தக் குழந்தை பொறுமையோடு இல்லாவிட்டாலும், அது தாங்கவியலாமல் துடித்தாலும் இந்தக் காரியம் முதிர்ச்சி பெற்றவாகள் விளங்கிக்கொள்ாாகள். ஆக அந்தக் குழந்தைக்கு வெளித்தோற்றத்தில் வேதனையாகத் தெரிவதும், சித்திரவதையாக படுவதும் அந்தக் குழந்தையின் நலனுக்குத்தான் என்பதை அறிவுடையோர் உணர்ந்து கொள்வர்.



கல்விக் கூடத்திற்கு செல்ல மறுக்கும் குழந்தையை தாய் அடிக்கிறாள் துன்புறுத்துகிறாள். அவனுக்கு உணவு தராமல் அவனைப் பட்டினி போடுவதாய் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் குழந்தையின் வருங்கால நலன்தான். அந்தக் குழந்தை இந்த உலகத்து பிரச்சினைகளில் எதிர்நீச்சல் போட்டு, இந்த உலகத்தின் சவால்களை சமாளிக்கின்ற அளவுக்கு தன்னுடைய சந்ததி வளர வேண்டும் என்கிற தூர நோக்குத்தான், அந்தத் குழந்தைக்கு இவ்வளவு துன்பத்தையும் தருவதற்கு காரணம் என்பதை யாரால் மறுக்க துடியும்?



நமக்கு காரும், பங்களாவும், நல்ல ஆடம்பரமான வாழ்வும் சுகபோகங்களும், ஒரு நாள் கூட காய்ச்சல், தலைவலி என்று படுக்காத ஒரு வாழ்க்கையும் நமக்குக் கிடைத்து விடுவதுதான், “நம்முடைய இறைவன் நம்மீது வைத்திருக்கும் கருணைக்கு எடுத்துக்காட்டு.” என்று நீங்கள் நினைத்தீர்களானால், நீங்கள் இன்னமும் ஞான முதிர்ச்சி பெறவில்லை. இன்னமும் போதிய விழிப்புணர்வு பெறவில்லை. நீங்கள் இன்னமும் அந்த இறைவனைப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள்.



அதே நேரத்தில் சற்று தூர நோக்கோடு, “இது எவனால் தரப்பட்டிருக்கின்றது? இந்தச் சோதனையில் நாம் எப்படி நடந்து கோள்ள வேண்டும் என்ற சிந்தனையின் பாற்பட்டு நீங்கள் இறைவனைச் சிந்திக்க தலைப்பட்டு விடுவீர்களானால் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் மிகச் சுலபமாக விடை கிடைத்துவிடும்.



மனிதா! இந்த உலக வாழ்க்கையில் உனக்கு மனிதனாக இருக்கலாம். அல்லது அந்த துன்பங்களுக்கு நானே நேரடிக் காரணமாக இருக்கலாம். உன்னைப் போன்ற மனிதன் உனக்கு துன்பங்கள் தரும்போது உதாரணமாக உன்னை அடிக்கிறான், அல்லது உன்னை ஏசுகிறான் அல்லது உன்னிடமிருந்து திருடுகிறான் எனும்போது அதற்காக நீ கவலைப்படாதே! ஏனென்றால்



ரஹ்மானும், ரஹீமாகவும் இருக்கின்ற அதே நேரத்தில் நான் மாலிகி யவ்மித்தீனாக – நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியாக இருக்கின்றேன். என்னுடைய சன்னிதானத்தில் “உனக்கு ஒரு அணுவத்தனை துன்பம் விளைவித்தவனும் உனக்கு தந்த துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.” என்ற கருத்தில் இறைவன் கூறுகிறான்.



மனிதர்கள் எந்த வகையிலும் துன்பத்திற்கு காரணமாக ஆகவில்லை, “என் இறைவா! நீயே சில சந்தர்ப்பங்களில் எனது துன்பத்திற்கும் காரணமாக இருக்கின்றாயே! எனக்கு பசியைத் தருகிறாய். அந்த பசிக்கு காரணம் மனிதர்கள் இல்லை. இயற்கையின் சீற்றத்தால் சேதம் விளைவிக்கிறாய், அதற்கு காரணம் நிச்சயமாக மனிதர்களில்லை. என்னுடைய விவசாயம், பொருளாதாரம் இன்ன பிறவற்றில் சேதத்தை ஏற்படுத்துகிறாய்! இதற்கு நூற்றுக்கு நூறு நீயேதான் முழுக் காரணம். இந்த இறைவனிடம் கேட்கும் போது எல்லாம் வல்ல அல்லாஹ் பதில் கூறுகிறான். “நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலூம் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே நீர்) நன்மாரயங் கூறுவீராக! (2:155)



(பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படம் போது ,” நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156.



நீ சற்று முன்பு என்னிடம் புகார் கொடுத்தாயே, பசியால் சோதிக்கிறாயே! அச்சத்தால் சோதிக்கிறாயே! விவசாயத்தில் அழிவை ஏற்படுத்துகிறாயே! என் குலம் தழைக்க ஒரு சந்ததி இல்லாமல் என்னை ஒரு தனிமரமாக்கி விட்டாயே! இப்படிப்பட்ட சோதனைகளுக்கெல்லாம் நான் என்னைப் போன்ற ஒரு மனிதனை எப்படி பொறுப்பாக்க முடியும்? ரஹ்மான், ரஹீம் என்று சொல்லிக் கொள்ளும் நீ தானே முழுக்க, முழுக்க காரணம் என்று அவன் அவனைப் பார்த்துக் கேட்டால் ” உன்னுடைய இந்தச் சோதனைகளுக்கு, உன்னுடைய இந்த வேதனைகளுக்கு, உன்னுடைய இதயம் சுக்கு நூறாகி துன்பப்படுவதெற்கெல்லாம் எவ்வளவு பெரிய சுவனத்துச் சுகபோகங்களை நான் பரிசாக வைத்திருக்கிறேன் என்று” மேற்சொன்ன வசனத்தில் சுபச்செய்தி சொல்வதின் மூலம் நம்மை திருப்பிக் கேட்கின்றான்.



அதே நேரத்தில் உன் வாழ்வு முழுவதும் துன்பம், சோதனை, வேதனை தான் என்று உன்னால் துணிச்சலாக சொல்ல முடியுமா? 90% சதவிகிதம் இறைவனின் கருணைக்கே உட்பட்டிருக்கிறாய் ஒரு 10% சதவிகித துன்பத்தைத் தரும்போது உன்னிடமிருந்து ஏற்பட வேண்டிய பண்பு நிலை என்ன? என்றால் பொறுமை



இந்தப் பொறுமையை நீ கடைபிடித்து எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள்வதற்கு பாத்தியப்பட்டது போல் நம்மிடமிருந்து தந்ததை பறிப்பதற்கும் உரிமை உள்ளவன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை இன்பத்திற்கு உள்ளாக்கியதைப் போல், சல சமயங்களில் துன்பத்திற்கும் உள்ளாக்கவும் உரிமை உள்ளவன்.



இன்பத்திற்கு உள்ளாகும் போது ஷுக்ரு என்ற நன்றிக்கடனை வெளிப்படுத்தும் பண்பு உன்னிடத்தில் குடிகொள்வதை எதிர்பார்க்கும் அல்லாஹ், துன்பத்தில் சில சமயம் உன்னை சிக்க வைக்கும்போது உன்னிடம் பொறுமை இருக்கிறதா? உன்னிடம் கசிப்புத் தன்மை, அந்த இறைவனைப் பற்றிய நல்லெண்ணம் இருக்கின்றதா? அல்லது அந்த இறைவனை கொடுரமானவனாக, கொடியவனாக, இரக்கமற்றவனாக கற்பனை செய்து கொள்கிறாயா? அல்லது அளவற்ற அருளாளன் என்று நாம் தானே சொன்னோம்; அவனது அருளை நாம் தானே அனுபவித்தோம், ஓராண்டு நம்முடைய வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டுவிட்டால் என்ன? பத்து குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து விட்டால் என்ன? என்று நீ பொறுத்துக் கொள்கிறாயா என்பதை இறைவன் சோதிக்கும் போது பொறுமையை கடைபிடித்த இப்படிப்பட்ட பொறுமையாளர்களை பார்த்து நபியே! நீர் சுபச் செய்தி கூறும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.



துன்பம் ஏற்பட்டவுடன், அந்த துன்பத்திற்கு ஒரு வகையில் இறைவனே காரணமாக ஆகும்போதும், தனக்கு பிடிக்காதவைகளை மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் போதும் பொறுமையோடு அதை சகித்துக் கொள்வதோடு மட்டும் நில்லாது இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்கிறார்களே அத்தகைய பண்பு நெறி கொண்டோருக்கு நபியே! நீர் சுபச் செய்தி கூறும் என்று அல்லாஹ் கூறுகிறான்.



இந்தக் குழந்தை மாத்திரம் தான் இறந்து அல்லாஹ்விடத்தில் சேர்ந்து விட்டதா? நான் என்ன இங்கேயே இருக்கப் போகிறேனா? என்னுடைய கடை மாத்திரம் தான் தீப்பிடித்து எரிந்து அழிந்து போய் விட்டதா? நான் இங்கேயே அழியாமல் இருக்கப் போகிறேனா? என் மனைவி தான் என்னை என் குழந்தையோடு விட்டு விட்டு இறந்து விட்டாளா? நான் இங்கேயே இருந்து என் குழந்தைகளை சாகும்வரை காக்கப் போகிறேனா? என்னுடைய விவசாயம் மட்டும் தான் அழிந்து விட்டதா? நான் இங்கேயே நின்று நீடித்து நன்றாக செழித்து வளர்ந்து இந்த உலகத்தில் இருக்கப் போகிறேனா? நானும் இந்த விவசாயம் அடைந்த நிலையை, நானும் கடை அடைந்த நிலையை, நானும் என் மனைவி அடைந்த நிலையை இந்த மரணத்தை அடைய போகும் ஒருவன் தானே தவிர நான் மாத்திரம் இங்கேயே நிலைத்திருக்கக் கூடியவன் அல்லவே! நிலைத்திருக்காத எனக்கு எல்லாமே நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி நியாயமாகும்?



எனவே அது போன்று நானும் அங்கே தான் போகப் போகிறேன். நானும் இதே போன்ற சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவேன். அது இந்த நிமிடமாகக் கூட இருக்கலாம். நான் அப்போது பதறி பரிதவித்து போகக் கூடாது. அப்போது நான் தடுமாறி விடக்கூடாது. அப்போது பொறுமை எனக்கு இல்லை என்றாகி விடக் கூடாது.



துன்பம் வரும்போது இறைவனையே நொந்து கொள்கின்ற பண்பு கொண்ட மனிதனை அல்லாஹ் கண்டிக்கின்றான். அவனுக்கு (மனிதனுக்கு) அவனுடைய வாழ்க்கைப் பிரச்சினையை அக்கட்டுக்குள் கொண்டு வந்து, துன்ப நிலைக்கு உள்ளாக்கி சற்று அவனை அவனுடைய ரப்பு சோதிக்க முற்பட்டாலோ என்மீது என் இறைவனுக்கு கருணையே இல்லை. என்னை அவன் மிகவும் கொடுமைப்படுத்துகின்றான். என்னை மக்கள் மத்தியில் தலை குனியச் செய்து விட்டான், என்னை கேவலப் படுத்தி விட்டர் என்று மனிதன் சொல்கிறான். இந்த எண்ணம் சரி அல்ல அப்படி நீ எண்ணாதே! இந்த எண்ணத்தை நீ தூக்கி எறிந்து விடு.



இப்படி இறைவனை நீ நம்பக் கூடாது, உன் தாய் உனக்கு அமுது படைக்கும் போதும் தாய் தான்! உனக்கு தேவையான நேரத்தில் உனக்கு மருந்து தரும் போதும் தாய் தான் என்று எப்படி தாயின் தரத்தை தலைக்கு மேல் வைத்து பேசுகிறாயோ அதுபோல் உனக்கு இன்பம் தரும் போதும் அவன் தான் உன் கடவுள். உன்னை அவன் துன்பத்திற்கு உள்ளாக்கும் போதும் நீ அவனை மறந்திடக்கூடாது. இது தான் உண்மையான முஃமினுக்குரிய இலட்சியமாக பண்பாக இருக்க வேண்டும்.



இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.



தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)



உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)



அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)



ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)



உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)



பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)



உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :



நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.



அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.



பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.



சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.



எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.



நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்



நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்



நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்



நபி லூத்(அலை) அவர்கள் - விவசாயம்



நபி யஸஃ (அலை) அவர்கள் - விவசாயம்



நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்



நபி ஹாரூன்(அலை)அவர்கள் - வியாபாரம்



நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்



நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்



நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் - வேட்டையாடுதல்



நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்



நபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்



நபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல



நபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்



நபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்



சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி



ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்



1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.



2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.



3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.



4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.



5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.



6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.



7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.



8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.



9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.



10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.



11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.



எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.



மேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)



இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)



ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், “இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்” எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.



ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.



ஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ(ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:



நான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.



ஆம்! ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. ஆதாரம்: கல்யூபி, பக்கம்:37



ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. “பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)



ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்” என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)



சூரா அல்பாத்திஹா




இது திருக்குர்ஆனின் முதலாவது அத்தியாயமாகும். இந்த அத்தியாயத்தை விளங்கிக் கொள்ள ஏராளமான ஹதீஸ்கள் இருந்தாலும் அவற்றிலிருந்து ஒரு ஹதீஸை இங்கு காண்போம்.



‘தொழுகையில் ஓதுவதை எனக்கும் என் அடியானுக்கும் இடையில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்பவை அவனுக்கு உண்டு. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அகில உலகங்களையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று ஒருவன் கூறும் போது, ‘என்னை என் அடியான் (புகழ வேண்டிய விதத்தில்) புகழ்ந்து விட்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.



அவன் அர்ரஹ்மா னிர்ரஹீம் (அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்) என்று கூறும் போது, ‘(என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில்) என் அடியான் பாராட்டி விட்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.



‘மாலிக்கி யவ்மித்தீன்’ (நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி) என்று கூறும் போது, ‘என்னைக் (கௌரவப் படுத்த வேண்டிய விதத்தில்) கௌரவப் படுத்தி விட்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.



‘இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன்’ (உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம்) என்று கூறும் போது, ‘இது தான் எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.



‘இஹ்தி னஸ்ஸிராத்தல் முஸ்தகீம்’ (எங்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக!), ‘ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம்’ (எவருக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக் காட்டு), ‘கைரில் மஃலூபி அலைஹிம் வலல்லால்லீன்’ (வழிகெட்டவர்கள், உன்னால் கோபிக்கப்பட்டவர்களின் வழியை அல்ல!) என்று கூறும் போது’ என் அடியானின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள்.



(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம், நஸயீ, அஹ்மத், திர்மிதி, அபூதவூது)



கல்கி



ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.






இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.


ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.


பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.





இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.






1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.






2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.






3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.






ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.






4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.






5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.






6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.






7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?






8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.






9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.






பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.






தமிழ் மொழி பெயர்ப்பு: சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)


பிரபல பாப் இசைப் பாடகரான முன்னாள் கேட் ஸ்டீபன்ஸ், தாம் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை இதோ விவரிக்கிறார்:




நான் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை நீங்கள் அனைவரும் அறிந்துள்ள செய்தியின் மூலம் துவக்குகின்றேன். அது யாதெனில்.. எல்லாம் வல்ல இறைவன் இந்த பூமியில் நம்மை வழித்தோன்றல்களாக ஆக்கி நமக்கு தூதர்களை அனுப்பியுள்ளான். குறிப்பாக நமக்கு சீரான பாதையைக் காண்பிப்பதற்காக இறுதித்தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களைத் தெரிவு செய்துள்ளான். எனவே இதற்காக நன்றி செலுத்த வேண்டும் என்பதை மனிதன் கருத்தில் கொள்ள வேண்டும். இனி வரவிருக்கும் நிரந்தர வாழ்க்கைக்காக தம்மைத் தயார்படுத்துவதற்கு முயற்சி செய்யவும் வேண்டும். ஏனென்றால் இன்றைய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவன் அதை மீண்டும் பெறவே இயலாது. அல்லாஹ் கூறுகிறான்:



இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், ‘எங்கள் இறiவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டுக் கொண்டோம். ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை! நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்’ என்று சொல்லும் போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).



மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம். ஆனால் ‘நான் நிச்சயமாக நரகத்தை – ஜின்களையும், (தீய) மனிதர்களையும் – ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்’ என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது. ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததன் (பலனை) அனுபவியுங்கள், நிச்சயமாக நாமும் எங்களை மறந்து விட்டோம். மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்!’ (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்). 32:12-14



இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள் ‘எங்கள் இறiவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும், ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்வோம்’ என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) ‘சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார். ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்! ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை’ (என்று கூறுவான்). 35:37



சிறு பிராயம்:



தொழில் நுட்பத்துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பகுதியில் நான் பிறந்து வளர்ந்தேன். எனது குடும்பம் கிறிஸ்துவ குடும்பம். குழந்தை பொதுவாக இயல்பான நிலையில்தான் பிறக்கிறது. அதன் குடும்பத்தினர் தாம் அதை நெருப்பு வணங்கியாகவோ யூதனாகவோ கிறிஸ்தவனாகவோ மாற்றுகின்றனர் என நாம் அறிந்திருப்பதைப் போல, எனது தந்தை கிறிஸ்துவர் என்பதால் அவரது பராமரிப்பில் வளர்ந்த நானும் அந்த வழியிலேயே மாறிவிட்டிருந்தேன். அப்போது இறைவன் இருப்பதாகவும் அவனை நாம் ஈஸா (அலை) மூலமாகத்தான் அணுக இயலுமே அல்லாது நேரடியாக தொடர்பு கொள்ளவியலாது. அவர்தாம் கடவுளை அடைவதற்கான வாயில் என்பதாகவும் அறிந்து வைத்திருந்தேன். இந்தக் கருத்தை ஓரளவுக்கு நான் ஏற்றிருந்தாலும் எனது அறிவு முழுமையாக இதை ஏற்றிருக்கவில்லை.



ஈஸா (அலை) அவர்களின் சிலையை நான் உற்று நோக்கினேன். அது ஒரு கல், வாழ்க்கையைப் பற்றி எதுவும் அறியாது. அது போல திரித்துவ கொள்கையும் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆயினும் இந்தக் கோட்பாடுகள் எனது தந்தையின் மதம் சார்ந்தவையாக இருந்ததால் அவரது மரியாதையைக் கருதி அவற்றைப் பற்றிய தர்க்கத்தில் என்னை நான் ஈடுபடுத்தவில்லை.



பிரபல பாப் இசைப்பாடகராக…



நான் கொஞ்சங் கொஞ்சமாக மதக்கோட்பாட்டிலிருந்து தூரமாகி இசை மற்றும் பாடல் துறைக்குத் தாவினேன். ஒரு பிரபல பாடகனாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தது. அந்த வேகமான வாழ்க்கையின் அலங்காரங்களும் ரசனைகளும் என்னை ஈர்த்துக் கொண்டன. அதனால் இசையே எனது கடவுளானது. பொதுவாக பணமே எனது குறிக்கோள் என்றானது. ஏனெனில் எனது மாமா ஒருவர் அதிகமான பொருளாதாரத்திற்குச் சொந்தக்காரராக இருந்தார். அவரைப் போலவே நானும் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மேலும் எனக்கு இந்தச் சிந்தனையை ஊட்டுவதில் என்னைச் சுற்றியிருந்த சமூக அமைப்புகளுக்கும் அதிகப்பங்கு இருந்தது. காரணம் உலகமே சதம் என்றும் அதுவே எல்லாம், அதுவே கடவுள் என்றும் சமூகம் கருதியிருந்தது.



எனவேதான் காசு மட்டுமே குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை நான் உறுதியாக தெரிவு செய்தேன். இந்த உலகம் என்னுடைய ஆசைகளை அடைந்து கொள்ள வேண்டிய களம், என்னைப் பொருத்த வரை இத்தோடு நமது ஆட்டங்கள் முடிந்துவிடும் என்றெல்லாம் நான் கருதியிருந்தேன். இத்துறையில் உலக அளவில் பேசப்படும் பாப் இசை வித்துவான்களே எனக்கு முன்மாதிரிகளாகத் தோன்றினர்.



இவ்வாறாக நான் இவ்வுலக வாழ்க்கையில் எனது சக்தியைப் பிரயோகித்து முழுமையாகவே மூழ்கியிருந்தேன். அதிகமான பாடல்களை நான் வழங்கியுள்ளேன். ஆயினும் தேடப்பட்ட பொருளாதாரத்தை நான் ஆராயும் போது எனது அடி மனதில் மனிதாபிமான ஆசையும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையும் உறுத்திக் கொண்டிருந்தன. ஆனாலும் குர்ஆன் கூறுவதைப் போல மனித மனம் வாக்களிப்பதை நிறைவேற்றுவதில்லை. மாறாக அதிகமான பொருளாதாரம் வரும்போதெல்லாம் கூடவே ஆசைகளும் அதிகரித்தே விடுகின்றன.



இவ்வாறாக பத்தொன்பது வயதை நான் கடக்காத கட்டத்திலேயே மாபெரும் வெற்றியை அடைந்தேன். எனது புகைப்படங்களும் என்னைப் பற்றிய செய்திகளும் தகவல் தொடர்புச் சாதனங்களுக்கு வெகுவாகவே தீனி போட்டன. இந்தப் பகட்டான முன்னேற்றம் கால எல்லைகளைக் கடந்து ஆடம்பர வாழக்கைக்கு என்னை இட்டுச் சென்றது. அதன் காரணமாக மதுவிலும் போதையிலும் நான் மூழ்கிப் போயிருந்தேன்.



மருத்துவமனையில் நுழைதல்:



வாழ்க்கையில் முன்னேற்றமும் பொருளாதார வெற்றியும் பிரபலமும் நான் அடைந்து ஏறத்தாழ ஓராண்டு கழிந்திருக்கும் அப்போது என்னைக் காசநோய் பீடித்தது. சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன்.



நான் அங்கிருந்த போது எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கலானேன். நான் என்ன வெறும் ஜடம் தானா? நான் என்ன செய்தால் இந்த ஜடத்தைச் சிறப்பாக அமைக்கலாம்? என்றெல்லாம் பல வினாக்கள் என்னுள் எழுந்தன. உண்மையில் எனது நிலையைப் பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்த அந்தக் கட்டம் எனக்கு இறையருளாகவே அமைந்தது. அது எனது கண்களை நான் திறப்பதற்கும் சீரான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கும் இறைவன் வழங்கிய ஒரு சந்தர்ப்பம் என்றே நான் நினைக்கின்றேன்.



நான் ஏன் இந்தப் படுக்கையில் கிடக்க வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகள் உருவாயின. இவற்றிற்கான விடைகளை நான் தேட ஆரம்பித்தேன். நான் ஏற்றுக் கொண்டிருந்த கோட்பாடுகள் கிழக்காசிய நாடுகளில் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தது. எனவே அந்தக் கொள்கைகளைப் பற்றி சிந்திக்கலானேன்.



முதலில் மரணத்தைப் பற்றிய சிந்தனை ஏற்பட்டது. அப்போது தான் ஆன்மாக்கள் ஒரு வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு மாறுகின்றது. இந்த உலக வாழ்க்கையோடு அவற்றின் சகாப்தம் முடிவடைவதில்லை என்பதை அறிந்தேன். அன்றே நான் சீரான பாதையை நோக்கிப் பயணிக்கத் துவங்கி விட்டதை அறிந்தேன்.



இவ்வாறாக ஆன்மீக சிந்தனை பற்றிய அக்கறை என்னைத் தொற்றிக் கொள்ள படிப்படியாக இதய அமைதி எனக்குள் அதிகரித்தது. அதன் விளைவாக நான் வெறும் வெற்றுடம்பு அல்ல என்ற முடிவுக்கு வந்தேன்.



ஒரு நாள் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது மழை பெய்தது. உடனே நான் மழையில் நனையாமல் இருப்பதற்காக சற்று ஓடினேன். அப்போது ஒரு தத்துவம் எனது நினைவிற்கு வந்தது. அது யாதெனில், ‘உடம்பு என்பது ஒரு கழுதையைப் போன்றது, அதைப் பழக்கப்படுத்தினால் தான் அதை அதன் எஜமானன் தனது விருப்பத்திற்கிணங்க பயன்படுத்த இயலும். இல்லையெனில் கழுதை தனது விருப்பத்திற்கிணங்க எஜமானனைப் பயன்படுத்திக் கொள்ளும்.’



அப்படியாயின் சுயமான விருப்பும் வெறுப்புமுள்ள மனிதனாகிய நான் வெறும் ஜடமல்லவே. கிழக்கத்திய கோட்பாடுகளை ஆராயும்போதும் இந்த முடிவே எனக்குத் தென்பட்டது. ஆயினும் கிறிஸ்தவம் எனக்கு முழுமையாகவே பிடிக்காமல் போயிற்று.



நான் குணமடைந்ததும் மீண்டும் இசைத்துறைக்குத் திரும்பினேன். அது எனது புதிய சிந்தனைகளை மழுங்கடிப்பதைப் போல் தோன்றியது. அது பற்றி நான் பாடிய பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன:



சுவனத்தையும் நகரத்தையும் படைத்த (இறை)வனை அறிய வேண்டுமே! இந்த உண்மையை நான் படுக்கையில் கிடந்து அறிய இயலுமா, இல்லை, ஒண்டுக் குடிசையில் ஒதுங்கித்தான் புரிய இயலுமா? மற்றவர்களோ ஆடம்பரமான உணவகங்களின் அறைகளில் உழன்று கிடக்கின்றனர். (கவிதையின் கருத்து)



இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் சரியான பாதையில் இருப்பதாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் இன்னொரு பாடலையும் நான் பாடினேன். அது கடவுளை அறிவதற்கான வழியைப் பற்றியது.



இந்நிலையில் இசைவுலகில் எனது பிரபலம் அதிகரித்தது. அப்போது நான் மிகவும் சிரமத்திற்குள்ளாயிருந்தேன். காரணம், எனது பாடல்கள் ஒரு பக்கம் பிரபலமாகிக் கொண்டிருக்கும் வேளையில் நானோ உண்மையைத் தேடும் வேட்கையில் மூழ்கியிருந்தேன். அந்த வேளையில் புத்த மதம் சிறந்ததும் உயர்ந்ததுமாக இருக்கும் என்று நம்பியிருந்தேன். ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ளவோ இசையுலகத்தைக் கைவிடவோ வழிபாடுகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ எனக்குத் தோன்றவில்லை. நானோ உலக வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தேன்.



பிறகு எனது சத்திய வேட்கை, கிரகங்கள் மற்றும் எண்கணித ஆய்வுகளின் வாயிலாக தொடர்ந்தது. அவைகளிலும் எனக்குச் சரியான நம்பிக்கை வரவில்லை. அப்போது இஸ்லாத்தைப் பற்றியும் நான் வெகுவாக அறிந்திருக்கவில்லை.



ஒரு நாள் நான் ஆச்சர்ய மிக்க வகையில் இஸ்லாத்தைப் பற்றி அறிய முடிந்தது. அதாவது எனது சகோதரர் பைத்துல் முகத்தஸ் சென்று விட்டுத் திரும்பினார். அப்போது அவருடைய நடையுடை பாவனைகள் சற்றே வித்தியாசமாக இருந்தன.

அல்லாஹ் மறைவானவன், அவன் மறைந்திருப்பவன். தான் இருப்பதை தெரிவிப்பதற்காக அல்லாஹ் அழகான உலகத்தை படைத்தான். உலகம் மட்டுமல்ல பல கோள்கள், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற அனைத்தையும் படைத்து, அவை அத்தனையையும் ஒன்றோடு ஒன்று மோதி விடாதவாறு சுழலவிட்டுள்ளான். அப்படிப்பட்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.


பின்னர் அல்லாஹ் மனிதனைப் படைக்க முடிவு செய்தான். பானைகள் செய்ய பயன்படுத்தப்படும் களி மண்ணால் அல்லாஹ் மனிதனை செய்தான். அவன் தன்னுடைய ஆவியை அதனுள் ஊதினான். இப்படித்தான் அல்லாஹ் முதல் மனிதருக்கு உயிரைக் கொடுத்தான். அவர் தான் நம் எல்லோருக்கும் தந்தை, மூலத்தந்தை. ‘ஆதம்’ என்று அல்லாஹ் அவருக்கு பெயர் சூட்டினான்.







இன்று மக்கள் வேறுபட்ட நிறங்களிலும், வேறுபட்ட உருவ அமைப்பிலும், வேறுபட்ட மொழியை பேசுபவர்களாவும் உலகின் பல்வேறுபட்ட இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் மூலத்தந்தை ஒருவர் தான். அவர் தான் முதல் மனிதர் ஆதம் (அலை) ஆவார். அல்லாஹ் அவரை முதல் இறைத்தூதராக ஆக்கி, மனிதர்களுக்கு நல்வழி காட்டினான்.






முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான அன்பளிப்புகளை கொடுத்தான். பார்வை எனும் அன்பளிப்பை அல்லாஹ் ஆதமுக்கு வழங்கினான், அதன் மூலம் அல்லாஹ்வின் படைப்புகளை பார்த்து அவர் ஆச்சர்யமடைந்தார். அவரை சுற்றி இருக்கும் உலகத்தை புரிந்து கொள்வதற்காக கேட்கும் சக்தியையும், நுகரும் சக்தியையும், ருசிக்கும் திறனையும், தொடு உணர்ச்சியையும் அன்பளிப்பாக அல்லாஹ் கொடுத்தான்.






எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ் அறிவு எனும் அன்பளிப்பை ஆதமுக்கு வழங்கினான். அதன் மூலம் அவர், நல்லது எது? கெட்டது எது? என்பதை விளங்கி நல்லதை மட்டும் செய்தார். (அதாவது, நல்லது எது கெட்டது எது என்பதை மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய அறிவைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதனை தீர்மானிப்பது அல்லாஹ். அதனை விளங்கப் படுத்துவதற்காக இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள், இறைவேதங்கள் வழங்கப்பட்டன. அதனை விளங்கி அதன் படி நடப்பது மனிதன் மீது கடமை. அதற்கு அறிவு மிகவும் முக்கியம்.) அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களுக்கு அறிவு ஞானத்தை கொடுத்ததால் வானவர்களை விட சிறந்தவராக ஆக்கப்பட்டார்.






ஆதம் (அலை) அவர்களுக்கு உறுதுணையாக, அன்புக் கூட்டாளியாக ‘ஹவ்வா’ என்னும் பெண்ணை அல்லாஹ் படைத்தான். அவர்கள் இருவரையும் சுவனத்தோட்டத்தில் வாழும்படி கூறினான். ஆனால் ஒரு மரத்தை மட்டும் நெருங்கக் கூடாது என்று அல்லாஹ் எச்சரித்தான். அழகிய சொர்க்கத்தில் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் அவ்விருவரும் வாழ்ந்து வந்தார்கள்.






ஆனால் அல்லாஹ் அவ்விருவருக்கும் வழங்கிய உயர்வைக் கண்டு ஷைத்தான் அவர்கள் மீது பொறாமைப்பட்டான். ஒரு நாள் ஆதம் (அலை), ஹவ்வா இருவரிடமும் ஷைத்தான் வந்தான். அல்லாஹ் தடுத்திருக்கும் மரத்தை நெருங்கும் படி ஆசை வார்த்தை காட்டினான். இந்த மரம் முடிவில்லா வாழ்க்கையை தரும், இந்த மரத்தை நெருங்கினால் வயோதிகம் வராது, அவர்கள் இறக்கவும் மாட்டார்கள் என்று ஷைத்தான் கூறினான்.






ஷைத்தான் மிகவும் சாதுர்யமாக அவ்விருவரையும் நம்பும்படி செய்தான். அதனால் அந்த மரத்திலிருந்து உண்டார்கள். தவறு செய்தவர்களாக ஆனார்கள். உடனே அவர்கள், தான் செய்த தவற்றை உணர்ந்தார்கள், அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டார்கள்.






அல்லாஹ் அவ்விருவரையும் மன்னித்தான். ஆனால் அவ்விருவரும் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதற்காக அவர்கள் சுவனப்பூங்காவை விட்டு வெளியேறி, பூமிக்கு சென்றுவிடுமாறு கட்டளையிட்டான். ஆதமும் ஹவ்வாவும் பூமிக்கு வந்தார்கள். அங்கே அப்போது இவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை.






மனிதர்களை நல்வழிப்படுத்தி நேரான பாதையை காட்டுவதற்காக அல்லாஹ்வின் தூதர்கள், தீர்க்கதரிசிகள் பூமிக்கு வருவார்கள் என்று அல்லாஹ் கூறினான்.






யார் அந்த தூதர்களின் வழிகாட்டலை ஏற்று நடக்கிறார்களோ அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள், அவர்களுக்கு பயம் இருக்காது. அவர்கள் மறுவுலகில் சொர்க்கம் செல்வார்கள். யார் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஏற்க மறுத்து நிராகரிக்கிறார்களோ அவர்கள் மறுமையில் நரகத்தில் தூக்கி வீசப்படுவார்கள்.






படிப்பினைகள்:






1. அல்லாஹ் தான் இவ்வுலகின் ஒரே சூப்பர்பவர், வேறு எவனும் எதுவும் அவனுக்கு முன் சூப்பர்பவர் கிடையாது.






2. ஆதம் (அலை) அவர்கள் மனிதர்களின் மூலத்தந்தை என்பதால் நிறத்தால், உருவத்தால், மொழியால் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு கற்பித்தல் கூடாது.






3. அல்லாஹ் மனிதர்களுக்கு அறிவைக் கொடுத்திருப்பதால் நல்ல வழியிலேயே அதனை பயன்படுத்த வேண்டும், கெட்டவற்றுக்கு பயன்படுத்தக் கூடாது.






4. அல்லாஹ் தடுத்தவற்றை மறந்தும் செய்யக் கூடாது.






5. ஷைத்தான் மனிதர்களை வழிகெடுப்பவன், கெட்டவற்றின் பக்கம் மனிதர்களை தூண்டக்கூடியவன் என்பதை விளங்கி கெட்டவற்றை விட்டும் நாம் தூரமாக இருக்க வேண்டும்.






6. தவறு செய்யும் பட்சத்தில் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அந்தத் தவறை மீண்டும் செய்யாது இருக்க மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.






7. மனிதர்கள் எல்லோரும் இறைத்தூதரை பின்பற்றி நடந்தால் சொர்க்கம் கிடைக்கும், அவரை நிராகரித்தால் நரகம் கிடைக்கும்.






தொகுப்பு: நெய்னா முஹம்மது


திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன்தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.




நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.



முதல் மனிதராகிய ஆதம் முதல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது.



நபிகள் நாயகத்துக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குலத்தினருக்கோ, சமுதாயத்தினருக்கோ அனுப்பப்பட்டனர். அவரவர் மொழியில் மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு இறைவன் வழங்கிய செய்தியே வேதம் எனப்படும்.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன் இருந்த எல்லா மொழிகளிலும் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.



ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 14:4.



இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத் தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள். (பார்க்க அல்குர்ஆன் 4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3)



மற்ற இறைத் தூதர்கள் போல் குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ, குறிப்பிட்ட மொழியினருக்கோ அன்றி அகில உலகுக்கும் இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.



அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆன் எனும் வேதத்துக்குப் பின் உலகில் வேறு வேதம் ஏதும் அருளப்படாது என்பதால் குர்ஆன் இறுதி வேதம் எனப்படுகிறது.



உலகம் முழுவதற்கும் வழிகாட்ட அருளப்படும் வேதம் அரபு மொழியில் ஏன் அருளப்பட வேண்டும் என்று சிலர் கருதலாம்.



அரபு மொழிதான் தேவமொழி என்பதோ அதுதான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.



இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டு நெறியைக் கொடுத்து ஒரு வழிகாட்டியை அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும் எந்த மொழியில் அந்த வழிகாட்டு நெறி இருந்நாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.



யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.



எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.



நாம் வாழ்கின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.



நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும்போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனைவரும் ஒரே நல்வழியை நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விசயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனிதகுலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.



ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயத்திற்குத் தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேலே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.



குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத் தூதராக நியமிக்கப்பட்டார்கள்? என்பதையும் எவ்வாறு குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம்தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும்.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி. 570ம் ஆண்டு பிறந்தார்கள்.



தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும் இழந்தார்கள். பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தை வழி பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபுடைய பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள்.



சிறுவராக இருந்த போது ஆடு மேய்த்திருக்கிறார்கள். ஓரளவு விபரம் தெரியவந்த பிறகு தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள்.

இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர் பயணங்களை மேற்கொண்டார்கள்.



25-வது வயதில் தம்மை விட மூத்தவரான கதீஜா என்ற விதவையை மணந்தார்கள். அவரும் அன்றைய சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25ம் வயதிலேயே மிகவும் வசதி படைத்தவராக மாறினார்கள்.



குர்ஆன் அருளப்பட்ட காலகட்டம்





நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல கடவுள் நம்பிக்கையுடையோராக இருந்தார்கள். ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர்!



கடவுளை நிர்வணமாக வழிபட்டனர்!



பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்!



குடம் குடமாக மது பானங்கள் அருந்தினார்கள்!



காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்!



பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்!



தந்தை இறந்துவிட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வ சாதராணமாக இருந்தது!



சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது!



நபிகள் நாயகம் எந்தக் குலத்தில் பிறந்தார்களோ அந்தக் குலம் - குறைஷிக் குலம் - மிகவும் உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் எனவும் விதி செய்திருந்தனர்!



அரபு மொழிதான் ஒரே மொழி என்றும், மற்ற மொழி பேசுவோர் அஜமிகள்(கால்நடைகள்) என்று கூறும் அளவுக்கு அவர்களிடம் அரபு மொழி வெறி மிகைத்திருந்தது.



மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்.!



தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காது விட மாட்டார்கள். அவரைத் தம்மால் பழிவாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செய்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.



இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்டவட்டமாக உணர்ந்தார்கள்.



எனவே தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள ‘ஹிரா’ எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள்.



பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.



இவ்வாறு குகையில் இருந்த போது தான் வானத்தையும், பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் காண்டார்கள்.



அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து ‘ஓது’ எனக் கூறிய போது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



மீண்டும் அவர் ‘ஓது’ எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து “படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக” என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார். (இது 96வது அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்களாக இடம் பெற்றுள்ளது. பார்க்க அல்குர்ஆன் 96:1-5)



இப்படித் தான் நபிகள் நாயகம் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகம் அவர்கள் அதிர்ச்சியடைந்து அச்சம் கொண்டார்கள். தமது மனைவியிடம் வந்து இதைக் கூறினார்கள்.



“இறைவன் உங்களைக் கைவிட மாட்டான்; மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்; ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்; உறவினர்களை உபசரிக்கிறீர்கள்; எனவே அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான்” என்றெல்லாம் அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் ஆறுதல் படுத்தினார்கள்.



ஆயினும் தமது ஆறுதல் போதிய பயனளிக்காததைக் கண்டு தமது உறவினர் வரகாவிடம் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்து, கிறித்தவ மார்க்கத்தையும் தழுவியிருந்தார்.



“நீர் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர்” உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றும் நிலையை அடைவீர்; ஏனெனில் இறைத் தூதர்கள் பிரச்சாரம் செய்யும் போது இது தான் நடந்துள்ளது என்றெல்லாம் அவர் கூறி நம்பிக்கையூட்டினார். (நூல்: புகாரி-2)



இப்படி ஆரம்பித்த இறைச் செய்தியின் வருகை சிறிது சிறிதாக சந்தர்ப்பத்துக்கு ஏற்ப 23 ஆண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைச் செய்தியின் தொகுப்பே திருக்குர்ஆன்.






1:1 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

1:2 الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

1:3 الرَّحْمَٰنِ الرَّحِيمِ

1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

1:4 مَالِكِ يَوْمِ الدِّينِ

1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

1:5 إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:6 اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

1:7 صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

முஹர்ரம் மாதம்




இஸ்லாமிய (அரபு) வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை இஸ்லாமிய சமூகம் சரிவர முழுமையாக புரிந்து கொள்ள வில்லை என்றே கருத வேண்டியுள்ளது.





அதன் காரணமாகத்தான் இம்மாதத்தில் இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு வகையிலான அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதில் தமிழ் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கின்றி கூடுதலான பல அம்சங்களோடு அவற்றை கடமையான செயல்களைப் போல் நிறைவேற்றி வருவதை காண்கிறோம்.



இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுவனவற்றில் பிரதானமான ஒன்று முஹர்ரம் ஒன்று முதல் பத்து வரை நடத்தப்படும் சடங்குகள், அவை தொடர்பான சம்பிரதாயங்கள். ஈராக்கிலுள்ள கர்பலா எனும் நகரத்தில் நடைபெற்ற ஒரு போரைச் சுற்றியே இவை அமைந்துள்ளன. இதன் நினைவாக ஷியா பிரிவினரிடையே ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம், தமிழகம் போன்ற பகுதிகளில் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என அறியப்பட்டவர்களிடத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஊடுருவி உள்ளதை இங்கு வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.



முஹர்ரம் பத்தாம் நாளைப் பொறுத்த வரை, வேறு ஒரு காரணத்திற்காக நினைவுபடுத்தி அந்நாளில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நோன்பிருக்கும் படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க, நமது சமூகம் அதே நாளில் நோன்பிருந்து கொண்டு வேறு காரணங்களை கூறி வருவது வேதனையானது.



இஸ்ரவேலர்களிடமிருந்து நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் முஹர்ரம் பத்தாம் நாளில் காத்தருள் புரிந்ததற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பிருக்கும் படி நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டிருக்க, நமது சமூகமோ அந்நாளை துக்க நாளாக அனுஷ்டிப்பதும் அந்நாளில் ஹஸன் ஹுஸைனுக்காக நோன்பிருப்பதாக கூறிக் கொள்வதும் அறியாமை மாத்திரமல்லாமல், இணை வைப்புமாகும் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.



مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ



மன் தஷப்பஹ பிகவ்மின் ஃபஹுவ மின்ஹும் (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: அபூதாவூத் 4031, அஹ்மத் 5114)



என்பது நபிமொழி. எவ்வித உருவ வழிபாட்டிற்கும் அனுமதி இல்லாத மார்க்கத்தில் கையை (ஐந்தை உருவகப்படுத்தி) வழிபாடு நடத்தக்கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையான, ‘யார் பிற சமூக மக்களின் நடைமுறைகளை பின்பற்றுகின்றனரோ அவர்கள், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே’ என்ற வாக்கை எண்ணிப்பார்க்க கடமைப்பட்டுள்ளனர். மற்றும் ஒர் அறிவிப்பில், ‘அவர்கள் என்னைச் சேர்ந்தவர்களல்லர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நபிமொழிகள் மூலம் அத்தகையோர் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறியவர்களாகவே கணிக்கப்படுவர்.



தீவிரமான ஷியா பிரிவு முஸ்லிம்களும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் படிப்படியாக தங்களது கை சின்னத்தை தெருமுனைக்கு கொண்டு வந்து முஹர்ரம் ஒன்று முதல் பத்து நாட்களும் சடங்கு செய்து வருகின்றனர் (இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் போன்றவர்களால் வீதி முனைகளில் நிறுத்தப்பட்டுள்ள வினாயகர் சிலைகளைப் போல) தாயத்து, தட்டு போன்றவற்றை தொழிலாக செய்து வரும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் இந்த கை சின்னத்திற்கு பத்து நாட்களும் சாம்பிராணி சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன (பத்து நாட்களுக்கு வினாயகர் சிலைகள் பூஜை செய்யப்படுவது போல) பின் முஹர்ரம் பத்தாம் நாள் கொடூரமான ஆயதங்களால் தங்களை தாங்களே தாக்கிக் கொண்டு இந்த கை சின்னத்தை பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக பவனி வந்து ஒரிடத்தில் கூடி கலைகின்றனர். (வினாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் கரைத்து மாசுபடுத்தி பின்னர் கலைந்து செல்பவர்களைப் போல).



இங்கு நாம் சுட்டிக்காட்டியிருப்பது ஒப்பீட்டுக்காக மட்டுமே. அதுவும் ஒருசில விஷயங்களை மாத்திரமே. விரிவஞ்சி விளக்கங்களை தவிர்த்துள்ளோம். இந்த சிறிய ஒப்பீட்டில் இருந்தே இவை எந்த அளவிற்கு மாற்று மதத்தவரின் வணக்க வழிபாடுகளை ஒத்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம். இவை தெளிவான இணைவைப்பு என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.



சிலர் மேற்குறிப்பிட்ட சடங்குகளை தவிர்ந்து கொண்டாலும், வேறு சில வழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர். அவற்றில் தமிழக கிராம அளவில் பிரசித்த பெற்ற ஹஸன் ஹுஸைன் ஃபாத்திஹா முக்கியமான ஒன்றாகும்.



முஹர்ரம் பத்தாம் நாள் அன்று கர்பலா யுத்தத்தின் நினைவாக அரிசி மாவில் கொழுக்கட்டைகள் செய்து அந்நாளில் (அப்போரில்) உயிர் நீத்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதும் பழக்கம் காலகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக அப்போரில் வெட்டுப்பட்ட கை, கால், தலைகளை உருவகப்படுத்த இக்கொழுக்கட்டைகள் உருண்டையாகவும் நீளமாகவும் உருவாக்கப்படுகின்றன. நாங்கள் பாஞ்சா (கை உருவத்தை) தூக்குவதில்லை என பெருமைப்பட்டுக் கொள்ளும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் இத்தகைய கை, கால், தலை கொழுக்கட்டைகளை உருட்டி (படையல்)விழா நடத்துக் கொண்டுள்ளனர்.



இச்சடங்கு சம்பிரதாயங்கள் சில இடங்களில் வெவ்வேறு விதமாக கடைப்பிடிக்கப்படுவதும் உண்டு. நமது நோக்கம் அவற்றை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அல்ல. எனவே பரவலாக அறியப்பட்ட இரு விஷயங்களை மட்டுமே இங்கே சுட்டிக்காட்டியுள்ளோம்.



பொதுவாகவே ஒரு பிதஅத் (தூதன அனுஷ்டானம்) நுழையுமானால், அங்கு ஒரு சுன்னத் (நபிவழி) மறைந்து விடும். இங்கே மேற்குறிப்பிட்ட விஷயங்கள் பித்அத் என்ற அளவுகோலையும் தாண்டி, ஷிர்க் (இணை வைப்பு) என்கிற அபாய கட்டத்தை தொட்டு விடுகின்றன என்பதனை உணர (அ) உணர்த்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.



அப்படியானால், முஹர்ரம் மாதம் குறித்து குர்ஆன் மற்றும் நபிமொழி வாயிலாக நமக்கு கிடைப்பது என்ன? என்பதனை முழுமையாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.



முதலாவதாக, அல்குர்ஆனைப் பொறுத்தவரை,



முழுவருடத்தின் நான்கு மாதங்களை போர் செய்ய தடை செய்யப்பட்ட கண்ணியப்படுத்தப்பட்ட மாதங்களாக குறிப்பிடுகின்றது. அந்த நான்கு மாதங்கள் ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகியவைகளாகும்.



இன்னும் அத்தியாயம் அல்ஹஜ்ஜின் 32 ஆம் வசனத்தில் குறிப்பிடும் போது, ‘யார் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவரது உள்ளத்திலுள்ள தக்வாவின் அடையாளமாகும்’ என்று குறிப்பிடுகின்றான். அதே அத்தியாயம் 36 ஆவது வசனத்திலும் இதே போன்றே குறிப்பிடுள்ளதையும் காணலாம்.



அதேபோல், ஹதீஸைப் பொறுத்தவரை,



‘முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் மாதம்’ என ரஸுல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2157)



‘முஹர்ரம் பத்தாம் நாள் நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் இஸ்ரவேலர்களிடமிருந்து பாதுகாத்ததாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2082)



‘முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் இதே காரணத்திற்காக நபி (ஸல்) அவர்கள் நோன்பிருந்து உள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2083)



‘முஹர்ரம் 9 இலும், 10 இலும் நோன்பிருக்கும் படி தனது தோழர்களை அறிவுறுத்தி உள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2088)



ஆக, முஹர்ரம் மாதத்தில் நாம் செய்யக்கூடிய அமல்களாவன: நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நோன்பிருப்பதும், அம்மாதத்தை கண்ணியப்படுத்தும் முகமாக திக்ருகளை நஃபிலான வணக்கங்களை அதிகப்படுத்துவதுமேயாகும்.



வல்ல அல்லாஹ் நமக்கு அத்தகைய பண்பையும் பக்குவத்தையும் தந்தருள்வானாக.

ஹாஜிகளின் வழிகாட்டி:




ஹஜ்ஜின் தினங்களில் ஹாஜிகள் தாம் நிறைவேற்றப்போகும் ஹஜ்ஜிற்கேற்ப மேற்கொள்ள வேண்டிய சுருக்கமான விவரங்கள்.





நாள்: துல்ஹஜ் 8 க்கு முன்பு


ஹாஜிகள் செய்ய வேண்டிய அமல்கள்.



முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத்



1. மீக்காத்தில் இஹ்ராம் அணிந்ததும் லப்பைக்க ஹஜ்ஜன் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்.



2. மக்காவாசிகளும் அங்கு தங்கியிருப்போரும் மீக்காத் வரவேண்டியதில்லை, தத்தம் இருப்பிடங்களிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.



3. தவாஃபுல் குதூம் செய்ய வேண்டும்.



4. ஸயீ செய்ய வேண்டும். (தவாஃபுக்குப் பிறகு ஸயீ செய்யாமல் உடனே மினாவுக்குச் சென்று விட்டால் தவாஃபுல் இஃபாளாவுக்குப் பின் ஸயீ செய்ய வேண்டும்) துல்ஹஸ் 10 வரை இஹ்ராமுடன் இருக்க வேண்டும்.



காரின் – ஹஜ் கிரான்



1. மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து விட்டு லப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று கூறி நிய்யத் செய்ய வேண்டும்.



2. தவாஃபுல் குதூம் செய்ய வேண்டும்.



3. ஸயீ செய்ய வேண்டும். இதைப் பிற்படுத்தி தவாஃபுல் இஃபாளாவுக்குப் பிறகும் செய்யலாம். அதுவரை இஹ்ராமில் தடுக்கப்பட்டவற்றை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.



முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



1. மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க உம்ரதன் முதமத்திஅன் பிஹா இலல்ஹஜ் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்.



2. தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்.



3. ஸயீ செய்ய வேண்டும்.



4. தலை முடியை மழிக்கவோ குறைக்கவோ வேண்டும்.



5. இஹ்ராமிலிருந்து விடுபட்டு துல்ஹஜ் 8 ஆம் நாள் வரை காத்திருக்க வேண்டும்.





நாள்: துல்ஹஜ் 8 ஆம் நாள்.




முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத்



மினாவுக்குச் செல்ல வேண்டும். அங்கு ஐவேளை தொழுகைகளையும் ஜம்வு செய்யாமல் அந்தந்த வேளைகளில் – நான்கு ரக்அத் தொழுகைகளை மாத்திரம் இரு ரக்அத்களாக சுருக்கித் – தொழ

வேண்டும்.



காரின் – ஹஜ் கிரான்



மினாவுக்குச் செல்ல வேண்டும். அங்கு ஐவேளை தொழுகைகளையும் ஜம்வு செய்யாமல் அந்தந்த வேளைகளில் – நான்கு ரக்அத் தொழுகைகளை மாத்திரம் இரு ரக்அத்களாக சுருக்கித் – தொழ

வேண்டும்.



முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



மினாவுக்குச் செல்ல வேண்டும். அங்கு ஐவேளை தொழுகைகளையும் ஜம்வு செய்யாமல் அந்தந்த வேளைகளில் – நான்கு ரக்அத் தொழுகைகளை மாத்திரம் இரு ரக்அத்களாக சுருக்கித் – தொழ

வேண்டும்.





நாள்: துல்ஹஜ் 9 ஆம் நாள் அரஃபா தினம்.



முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத், காரின் – ஹஜ் கிரான், முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



1. சூரியன் உதயமானதும் அரஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். அங்கு ளுஹரையும் அஸரையும் ளுஹர் நேரத்திலேயே முற்படுத்தி ஒரு பாங்கு இரு இகாமத்களுடன் இரண்டிரண்டு ரக்அத்துக்களாகச் சுருக்கித் தொழ வேண்டும். மேலும் அரஃபா தினத்தில் இறைவனைத் தியானித்தல், குர்ஆன் ஓதுதல், பிராத்தித்தல் ஆகியவற்றை அதிகப்படுத்துவது

சுன்னத்தாகும். துஆவின் போது கிப்லாவை – மலையை அல்ல – முன்னோக்குவதும் நபி (ஸல்) அவர்களைப் போல கைகளை உயர்த்துவதும் சுன்னத்தாகும். அரஃபா தினத்தில் ஹாஜிகள் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதல்ல. அரஃபாப் பெருவெளியிலுள்ள ஓடைப்பகுதி அரஃபாவைச் சேர்ந்ததல்ல, அதில் தங்குவது கூடாது. அரஃபா மலையில் ஏறுவதும் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டதல்ல.



2. சூரியன் மறைந்ததும் முஸ்தலிஃபாவுக்குச் செல்ல வேண்டும்.



3. முஸ்தலிஃபாவை அடைந்ததும் மக்ரிபையும் இஷாவையும் ஒரு பாங்கு இரு இகாமத்துடன் ஜம்வு – கஸ்ராகத் தொழ வேண்டும்.



4. பெரிய ஜமராவில் கல்லெறிவதற்கு ஏழு பொடிக்கற்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவற்றை மினாவில் எடுத்தாலும் குற்றமில்லை.



5. முஸ்தலிஃபாவில் இரவு தங்கிவிட்டு அங்கேயே ஃபஜ்ரு தொழுதுவிட்டு பிறகு திக்கு – துஆக்களை அதிகப்படுத்த வேண்டும். நேரம் வெளுக்கும் வரை அதாவது சூரியன் உதிக்கும் முன்பு வரை அல்மஷ்அருல் ஹராமில் நின்று துஆவை

அதிகப்படுத்துவது விரும்பத்தக்கது. பலவீனமானவர்கள் நடுஇரவுக்குப் பின்பு – சந்திரன் மறைந்ததன் பின் புறப்படலாம்.





நாள்: துல்ஹஜ் 10 ஆம் நாள்.



முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத்



மினாவை நோக்கிப் புறப்படல் (சூரியன் உதயமாகும் முன்பு)



1. பெரிய ஜமராவில் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி எறிய வேண்டும்.



2. தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும்.



3. இஹ்ராமிலிருந்து விடுபட்டு வேறு ஆடையணிதல் (சிறிய விடுபடுதல்)



4. தவாஃபுல் இஃளாபா (இது – வாஜிப் – முதல் நிலைக் கடமை) செய்தல் இஹ்ராமிலிருந்து முழுமையாக – பெரிய – விடுபடுதல்.



5. தவாஃபுல் இஃபாளாவை 11 ஆம் நாள் அல்லது 12 ஆம் நாள் வரை பிற்படுத்தலாம்

அல்லது தவாஃபுல் விதாவுடன் நிறைவேற்றலாம்.



6. ஸயீ செய்ய வேண்டும், முன்பு செய்ய வில்லையெனில்.



காரின் – ஹஜ் கிரான்



மினாவை நோக்கிப் புறப்படல்



1. பெரிய ஜமராவில் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி எறிய வேண்டும்.



2. குர்பானி கொடுத்தல். இதில் ஹரமில் தங்கியிருப்போர் விதிவிலக்கு

பெறுகின்றனர், அவர்கள் மீது கடமையல்ல.



3. தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும். பெண்கள் விரல்கள் அளவுக்கு குறைத்துக் கொண்டால் போதும்.



4. இஹ்ராமிலிருந்து விடுபட்டு மாற்று ஆடையணிதல்.



5. தவாஃபுல் இஃளாபா செய்தல். ஸயீ செய்தல் முன்பு செய்யவில்லையெனில்.



முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



மினாவை நோக்கிப் புறப்படல்



1. பெரிய ஜமராவில் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி எறிதல்.



2. குர்பானி கொடுத்தல். இதை 13 ஆம் நாள் சூரியன் மறையும் வரை நிறைவேற்றலாம். இதில் ஹரமில் தங்கியிருப்போருக்கு விதிவிலக்கு உள்ளது,

அவர்கள் மீது கடமை இல்லை.



3. தலை முடியை மழித்தல் – குறைத்தல்.



4. இஹ்ராமிலிருந்து விடுபட்டு வேறு ஆடையணிதல்.



5. தவாஃபுல் இஃபாளா செய்தல். ஸயீ செய்தல் முன்பு செய்யவில்லையெனில்.





நாள்: துல்ஹஜ் 11 ஆம் நாள்.



முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத், காரின் – ஹஜ் கிரான், முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



1. 11 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்.



2. சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறியது, நடுத்தரமானது, பெரியது என்ற வரிசையில் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் கூறி

எறிய வேண்டும். சிறிய மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த பின்பு துஆ செய்ய வேண்டும்.





நாள்: துல்ஹஜ் 12 ஆம் நாள்.



முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத், காரின் – ஹஜ் கிரான், முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



1. 12 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்.



2. சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் சிறியது, நடுத்தரமானது, பெரியது என்ற வரிசையில் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் கூறி எறிதல். சிறிய மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த பின்பு துஆ செய்தல். விரும்பினால் சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து மக்கா சென்று

தவாஃபுல்விதாஃ செய்து விட்டுப் பயணமாகலாம்.





நாள்: துல்ஹஜ் 12 ஆம் நாள்.



முஃப்ரித் – ஹஜ் இஃப்ராத், காரின் – ஹஜ் கிரான், முதமத்திஃ – ஹஜ்ஜுத் தமத்துஃ



1. சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் சிறியது, நடுத்தரமானது, பெரியது என்ற வரிசையில் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் கூறி எறிய வேண்டும். சிறிய மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த பின்பு துஆ செய்ய வேண்டும்.



2. மினாவிலிருந்து மக்கா செல்லல். தவாஃபுல் விதாஃ செய்தல். இது வாஜிபாகும். இதை விட்டால் பலி கொடுக்க வேண்டும். ஆனால் மாதவிடாய் மற்றும் பேற்றுத் தொடக்குள்ள பெண்களுக்கு இது வாஜிபல்ல. பிறகு மக்காவிலிருந்து பயணமாகலாம்.



குறிப்பு: சிறிய விடுபடுதலுக்குப் பின் உடலுறவைத் தவிர மற்ற அனைத்தும் அனுமதிக்கப்பட்டதாகும். தவாஃபுல் இஃபாளாவுக்குப் பின் ஏற்படுவது பெரிய

விடுபடுதல் ஆகும். அதற்குப் பின் உடலுறவு உட்பட அனைத்திற்கும் அனுமதியுண்டு. ஆயினும் இஃப்ராத், கிரான் செய்பவர்கள் ஸயீயை முற்படுத்தியிருந்தால் தான் இந்த அனுமதி. ஆனால் ஹஜ்ஜுத் தமத்துஃ

செய்பவர்கள் ஸயீ செய்த பின்பு தான் பெரிய விடுபடுதலை அடையலாம்.



நினைவூட்டல்: ஹஜ்ஜின் நாட்கள் துஆ, குர்ஆன் ஓதுதல், பிரச்சாரம் ஆகியவற்றிற்கான

சந்தர்ப்பமாகும். எனவே வீணான பேச்சுக்கள் – தர்க்கங்களிலிருந்து விடுபட்டு நல்லறங்களில் ஈடுபட வேண்டும். (பார்க்க அல்குர்ஆன் 2:197)



ஹஜ்ஜின் (ருக்னுகள்) முதல் நிலைக்கடமைகள் நான்கு. அவை:



1. இஹ்ராம் அணிதல் (நிய்யத்): இது ஹஜ்ஜின் காரியங்களில் நுழைவதற்கான நிய்யத்தாகும்.



2. அரஃபாவில் தங்குதல்.



3. தவாஃபுல் இஃபாளா.



4. ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே ஸயீ செய்தல்



மேற்கண்ட முதல்நிலைக் கடமை(ருக்னு)களில் எதையேனும் ஒன்றை ஒருவன் விட்டு விட்டால் விடுபட்டதை நிறைவேற்றாமல் அவனுடைய ஹஜ் நிறைவேறாது.



ஹஜ்ஜின் (வாஜிபுகள்) இரண்டாம் நிலைக்கடமைகள்



1. மீக்காத்தில் இஹ்ராம் அணிதல்.



2. அரஃபாவில் இரவு வரை தங்குதல்.



3. முஸ்தலிபாவில் அரஃபா தினத்தில் இரவு தங்குதல்.



4. மினாவில் இரவு தங்குதல்.



5. 11, 12, 13 ஆம் தினங்களில் கல்லெறிதல்.



6. தவாஃபுல் விதாஃ.



7. தலைமுடியை மழித்தல் – குறைத்தல்.



இந்த வாஜிபுகளில் எதையேனும் ஒருவன் விட்டால் அவன் ஹரமிற்குள் ஒரு பிராணியைப் பலியிட்டு ஏழைகளுக்கு வழங்க வேண்டும், அவன் உண்ணக் கூடாது.



ஹஜ்ஜின் சுன்னத்கள்:



இவற்றில் எதையேனும் விட்டால் எந்தக் குற்றமுமில்லை:



1. இஹ்ராமின் போது குளித்தல்.



2. ஆண்கள் வெண்ணிறத்தில் இஹ்ராம் அணிதல்.



3. தல்பியாவை உரத்துக் கூறுதல்.



4. அரஃபா தின இரவில் மினாவில் தங்குதல்.



5. ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல்.



6. இள்திபா (உம்ராவுடைய தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் இஹ்ராம் ஆடையின் ஓர் ஓரத்தை வலது புற அக்குளுக்குக் கீழால் கொண்டு வந்து இடது தோளில் போடுவது)



7. உம்ராவுடைய தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் முதல் மூன்று சுற்றுக்களில் சற்று விரைந்து செல்லல்.



8. ஹஜ் கிரான் மற்றும் இஃப்ராத் செய்பவர்கள் தவாஃபுல் குதூம் செய்தல்.



இஹ்ராமில் தடுக்கப்பட்டவை பதினொன்று. அவை:



1. முடியை வெட்டுவது.



2. நகங்களைக் களைதல்.



3. ஆண்கள் தலையை மறைத்தல்.



4. ஆண்கள் தையலாடை அணிதல்.



5. வாசனைத் திரவியம் உபயோகித்தல்.



6. பெண்கள் கையுறைகள் அணிதல்.



7. பெண்கள் முகமூடி அணிதல்.



இந்த ஏழு காரியங்களில் எதேனுமொன்றை ஒருவன் மறந்தோ அறியாமையிலோ செய்தால் அவன்

மீது எந்தக் குற்றமுமில்லை, வேண்டுமென்றே செய்தால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.



8. தரைவாழ் விலங்குகளை வேட்டையாடுதல் அல்லது அதற்கு உதவுதல் அதை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு விரட்டுதல். அதை வேண்டுமென்றே கொலை செய்தால் அதற்குச் சமமான பரிகாரம் தேட வேண்டும்.



9. மனைவியை இச்சையுடன் கட்டியணைத்தல் – இனவுறுப்புகளல்லாத பகுதிகளில் தொடுவது, முத்தமிடுவதைப் போல. இதனல் விந்து வெளிப்பட்டால் ஹஜ்ஜிற்குப் பாதகமில்லை. ஆனால் ஓர் ஒட்டகத்தைப் பலியிட வேண்டும்.



10. தனக்காவோ பிறருக்காவோ திருமண ஒப்பந்தம் செய்தல். இதை செய்தாலும் பரிகாரமொன்றுமில்லை.



11. இனவுறுப்புகளில் உறவுகொள்ளல். இது முதல் விடுபடுதலுக்கு முன்பு நிகழ்ந்தால் ஹஜ் நிறைவேறாது, மற்ற காரியங்களை முழுமைப்படுத்தி விட்டு அதற்குப் பகரமாக மறு ஆண்டு கட்டாயமாக ஹஜ்ஜைக் களா செய்ய வேண்டும். மேலும் ஓர் ஒட்டகத்தை பலியிட வேண்டும். இது முதல் விடுபடுதலுக்குப் பின்பு நிகழ்ந்தால் ஹஜ் நிறைவேறிவிடும். ஆனால் ஓர் ஆட்டைப் பலியிட வேண்டும்.



பலியிடுதல்:



பலியிடப்படுமிடம்:

மினா, மக்கா மற்றும் ஹரம் எல்லைக்குட்பட்ட பகுதி.



பலியிடப்படும் காலம்:

பெருநாள் தினம், மற்றும் அதைத் தொடர்ந்த மூன்று தினங்கள்.



பலிப்பிராணிகள்:

ஒட்டகம், மாடு, ஆடு (கம்பளி, செம்பறி)



பிராணிகளின் வயது:

கம்பளி ஆட்டிற்கு ஆறு மாதம் ஆகியிருக்க வேண்டும். செம்மறி ஆட்டிற்கு ஓர் ஆண்டு ஆகியிருக்க வேண்டும். மாட்டிற்கு இரண்டு ஆண்டுகள். ஒட்டகத்திற்கு ஐந்தாண்டுகள். ஓர் ஆடு ஒருவர் சார்பாக மட்டும் தான் நிறைவேறும். ஒரு மாடு அல்லது ஓர் ஒட்டகம் ஏழு நபர்கள் சார்பாக நிறைவேறும். யாருக்கு பலிப்பிராணி கிடைக்கவில்லையோ அல்லது வாங்குவதற்கான வசதியில்லையோ அவர் ஹஜ்ஜின் நாட்களில்

மூன்று, ஊருக்குத் திரும்பியதும் ஏழு என்ற கணக்கில் மொத்தம் பத்து நோன்புகள் தொடர்ந்தோ விடுபட்டோ நோற்க வேண்டும்.



பலிப்பிராணிகளில் கூடாதவை: அதிகக்குருடு, அதிக நொண்டி, அதிக வியாதியுள்ளது, அதிகம் மெலிந்தது,

அதிகமான அளவுக்கு கொம்பு உடைந்தது, அதிகமான அளவுக்கு காது அறுபட்டது.

அலக் எனும் அற்புதம்


ஹாபிழ் கே.என்.முஹம்மது ஜமாலி பாக்கவி, ஃபாஸில் உமரி,மக்கி





‘நிச்சயமாக மனிதனை களி மண்ணின் மூலத்திலிருந்து நாம் படைத்தோம். பின்னர் பாதுகாப்பான ஓரிடத்தில், அவனை விந்தாக நாம் ஆக்கினோம். பின்னர், இந்த இந்திரியத்தை அலக்காக படைத்தோம். பின்னர் அந்த அலக்கை தசைத் துண்டாகப் படைத்தோம்.பின்னர் அந்த தசைத் துண்டை எலும்புகளாகப் படைத்தோம்.பின்னர் அவ்வெலும்புகளுக்கு சதையை அணிவித்தோம்.

பின்னர் அவனை வேறொரு படைப்பாக (முழு மனிதனாக) உண்டாக்கினோம் …’ (அல்குர்ஆன் 23:12-14)





ஆண் உயிரணுவும் பெண் சினை முட்டையும் சேர்ந்து ‘ஸைகோட்’ எனும் புதிய செல் உருவாகிறது. மனித கருவின் ஆரம்பம் இந்த ஸைகோட்டில் இருந்து தான் தொடங்குகிறது. ‘கலப்பு இந்திரியத்திலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம்’ என்று அல்குர்ஆன் 76:2ல் குறிப்பிடுவது இதனைத்தான்.

அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டு சுமார் 1300 ஆண்டுகளுக்குப் பிறகு கருவியலில் ‘கலப்பு இந்திரியம்’ என்ற கட்டம் இருப்பதாக ஹெர்ட்விக் என்பவரால் 1875ம் ஆண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது

குறிப்பிடத்தக்கது.

‘கலப்பு இந்திரியம்’ தன்னுடைய பலவித பரிமாணங்களுடன் கருவின் குழாய் வழியாக கருவகத்தை நோக்கி திரவப் பந்தின் வடிவமைப்பைப் பெற்று நகர்கிறது. அப்;போது அதன் செல்கள் பன்மடங்காகப் பெருகுகின்றன. இருந்தாலும் கூட கற்பப் பையின் உள்வரிச் சவ்வில் தன்னைப் பதித்துக் கொள்ளும் வரை திரவப் பந்தின் வடிவத்தையே கொண்டிருக்கின்றது.

இதைத் தொடர்ந்து ‘கலப்பு இந்திரியம்’ என்ற நிலையிலிருந்து ‘அலகா’ எனும் புதிய நிலைக்கு மாறுகிறது.

‘அலக்’ என்பது கருவுற்ற சினைமுட்டையா?

‘அலக்’ என்பது ‘அலகா’ எனும் வார்த்தையின் பன்மைச் சொல்லாகும். அலகா என்பதற்கு மூன்று பொருள்கள் உள்ளன. அந்த மூன்று பொருள்களும் ‘அலகா’வின் நிலைக்கு பொருந்திப் போவது அல்லாஹ்வின் வல்லமையை நினைவூட்டுகிறது. அறிவியல் வல்லுனர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

1. பற்றிப் பிடித்து தொங்குதல்: நீர்த் துளி வடிவில் உள்ள கலப்பு இந்திரியம் ஏழாவது நாளில் கருப்பையினுள் நுழைகிறது. கருப்பையினுள் ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து அதன் உள்வரிச் சவ்வில் தன்னை ஆழப்பதித்து, தொங்கத் தொடங்குகிறது.



2. இரத்தம், கருஞ்சிவப்பு இரத்தம், உறைந்த இரத்தம்: தொங்கிக் கொண்டிருக்கும் கரு, அதன் மூன்றாவது வாரத்தின் இடையே இரத்தத்தால் நிரப்பப்பட்டு, மூடப்பட்டுள்ள நாளங்களைக் கொண்டதாக உருமாறுகிறது.



3. குளங்களில் வாழ்ந்து உயிர்ப் பிராணிகளைப் பற்றிப்பிடித்து, அதன் இரத்தத்தை உட்கொள்ளும் அட்டைப் பூச்சியோடு, நிரப்பப்பட்ட இரத்த நாளங்களுடன் தொங்கிக் கொண்டிருக்கும் கரு, அதன் மூன்றாவது வார இறுதியில், தோற்றத்திலும் இரத்தத்தை உறிஞ்சும் போது பிராணிகளை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொள்வதிலும் முழுமையாக ஒத்துப் போகிறது.



வெளித் தோற்றத்தில் அட்டைப் பூச்சியைப் போன்றும், உட்புறத்தில் இரத்தம் நிரப்பப்பட்ட நாளங்களைக் கொண்டதாகவும் இருக்கும் ‘அலகா’

கருவறையில் தன்னை ஆழப்பதித்து தொங்கிக் கொண்டிருக்கிறது என்பது தான் அலகாவின் முழுமையான விளக்கமும் பொருளுமாகும்.

அறிவுலகத்தின் தந்தை என்றும் கிரேக்கத் தத்துவஞானி என்றும் போற்றப்படும் அரிஸ்டாட்டில் (கி.மு.384 – 322) கூட மாதவிடாய் இரத்தத்தில் இருந்து தான் மனிதன் படைக்கப்பட்டான் என்று கூறிக் கொண்டிருந்தார். இந்திரியத் துளியில் ஒழிந்திருக்கும் குட்டி மனிதன் தான் கருவறைக்குள் சென்று வளர்ந்து குழந்தையாக வெளியேறுகிறான் என்று ஒரு பிரிவினர் கூறிக் கொண்டிருக்க, மற்றொரு பிரிவினரோ அந்த குட்டி மனிதன் ‘சினை முட்டையில்’ தான் மறைந்திருக்கிறான் என்று கூறி வந்தனர். 17ம் நூற்றாண்டு வரை கருவியல் கோட்பாடு இவ்வாறு தான் இருந்தது.

அறிவியல் கண்களை திறந்துவிட அல்குர்ஆன் மகத்தான பங்காற்றியது. மனித உருவாக்கம் தொடர்பான அல்குர்ஆன் வசனங்கள் அறிவியல் உலகின் திருப்பு முனையாயின. அதிலும் குறிப்பாக ‘அலக்’ எனும் பதம் கருவியல் உலகில் பெரும் புரட்சிக்கே வித்திட்டது.

கிருத்துவ மதத்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் டாக்டர் கீத்மூர், மாரீஸ் புகைல், டாக்டர் ஜோ, லே ஸிம்சன் போன்ற சிந்தனையாளர்களை

அல்குர்ஆன் அல்லாஹ்வின் அற்புத வேதம் என்று கூற நிர்ப்பந்தித்தது.

கனடாவில் டொரண்டோ பல்கலைக் கழகத்தில் உடற்கூறு துறைத்

தலைவராகவும் கருவியல் துறைப் பேராசிரியராகவும் இருந்த டாக்டர் கீத் மூர் ‘அலக்’ எனும் ஒரு கட்டத்தை மனிதக் கரு அடைகிறது என அல்குர்ஆன் கூறுவதை அறிந்து வியந்து போனார்.

அது பற்றி விரிவாக ஆய்வு செய்த அவர்,

கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பிட்டு, கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயற்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் தொழிற்பாடுகளும் ஒரே விதமாக இருந்ததைக் கண்டு வியந்து போன அவர், மேலும் இத்துறையில் தொடர்ந்து ஆய்வுகள் செய்யலானார். ஏனெனில், ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சி போன்றதென இதற்கு முன் கீத்மூர் அறிந்திருக்கவில்லை. இது இத்துறையில் அவரை மேலும் ஆய்வுகள் செய்யத் தூண்டியது.

விலங்கியல் துறைக்குச் சென்று அட்டைப் பூச்சியை எடுத்து வந்து மனிதக் கருவுக்கு ஒப்பிட்டுக் காட்டினார். இரு போட்டோக்களையும் வெளியிட்டு அல்குர்ஆன் வாயிலாக தான் அறிந்த உண்மையை உலகுக்கு தெரிவித்து மகிழ்ந்தார்.

அரபியரிடத்தில் ‘அலக்’ என்பதின் பொருள் உறைந்த இரத்தம் என்பதாகும் என்று அவரிடம் கூறப்பட்ட போது டாக்டர் கீத்மூர் திகைத்து விட்டார். குர்ஆனில் சொல்லப்பட்டது கருவின் வெளித்தோற்றத்திற்கான நுட்பமான வர்ணனையான மட்டும் அல்ல! மாறாக கருவின் உட்புற உருவாக்கத்திற்கான தெளிவான வர்ணனையாகக் கூட இருக்கிறது. ஏனெனில் ‘அலக்’ உடைய கட்டத்தில் நுட்பமான நாளங்களில் இரத்தமானது மூடப்பட்டதாக அமைந்திருக்கிறது என்றார்.

கனடா நாட்டு நாளேடுகளின் தலைப்புச் செய்தியாகவே இது இடம் பெறலாயிற்று. அதில் ஒரு நாளேடு ‘பழங்காலப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ‘ஆச்சரியப்படத்தக்க செய்தி’ என்று தலைப்பிட்டிருந்தது.

மனிதக் கண்களால் நேரடியாக காண முடியாத அளவுக்கு கருவின் ஆரம்பத் தோற்றங்கள் மிக நுட்பமானவை. மைக்ரோஸ்கோப் உதவியுடன் தான் ஒருவர் இவற்றைப் பார்க்க முடியும். சுமார் 200 வருடங்களுக்கு முன்பு தான் இக்கருவி

கண்டுபிடிக்கப்பட்டது.

கருவளர்ச்சி குறித்து நம் கண் முன்னே உள்ள சிலேடுகளும் படங்களும் ஆகிய அனைத்துமே மைக்ரோஸ்கோப் உதவியுடன் படம் பிடிக்கப்பட்டவை. 14

நூற்றாண்டுகளுக்கு முன்பு கரடுமுரடான அறுவை சிகிச்சை செய்து கருவின் வளர்ச்சிப் படிகளை ஒருவர் காண முயன்றிருந்தால் கூட, அவற்றை அவரால் கண்கூடாகப் பார்த்திருக்க முடியாது என்றார் டாக்டர் கீத் மூர்.

கரு வளர்ச்சியின் படித்தரங்களின் விளக்கங்களை அல்லாஹ்வின் தூதர் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, அதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால் கரு படிப்படியாக உருவாக்கப்படுகிறது என்பதை அன்றைய முழு உலகமும் அறிந்திருக்க வில்லை என்றார்.

அதனைத் தொடர்ந்து அல்குர்ஆனிலும் நபிமொழியிலும் கருவியல் தொடர்பாக சுமார் 80 விஞ்ஞான உண்மைகளைத் திரட்டினார். தான் ஏற்கனவே எழுதி வெளியிட்டிருந்த கருவில் உருவாகும் மனிதன் எனும் நூலில் இத்தகவல்களை இணைத்து அதன் மூன்றாம் பதிப்பாக 1982ல் வெளியிட்டார். மருத்துவத் துறையில் மிகச் சிறந்த நூல் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்த அந்த நூல், கருவியல் துறையில் முக்கியப் பாடநூலாக முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

1981ல் சவூதி அரேபியா, தம்மாமில் நடந்த ஏழாவது மருத்துவ மாநாட்டில் ‘அல்குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கும் முஹம்மது நபி (ஸல்)

அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதற்கும் ‘அலக்’ ஒரு மகத்தான அத்தாட்சி என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அல்குர்ஆனின் அற்புதம் கண்டு இஸ்லாத்தின் பால் விரைந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளை கிருத்துவ மதத்தில் தக்க வைப்பதற்காக கிறிஸ்துவ உலகம் படாதபாடு படுகிறது.

கிறித்துவ பிரச்சாரகரான ஜகரிய்யா பத்ருஸ் என்பவர் கிருத்துவ வேதங்களிலும்? ‘அலக்’ என்பது இருப்பதாக பொய்யாக வாதிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ‘அலக்’ என்பதற்கு கலப்பு இந்திரியத்தைக் குறிக்கும் கருவுற்ற சினை முட்டை என்ற சொல்லைப் பயன்படுத்தி விளக்கம் கொடுத்துள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர். இந்திரிய நிலையைத் தாண்டி, ‘அலக்’

எனும் அடுத்த கட்டத்திற்கு வந்த கருவை மீண்டும் இந்திரிய நிலைக்கே கொண்டு சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து ‘அலக்’கிற்கு அடுத்த நிலையான முல்கா நிலைக்குத் தாவி விடுகிறார். ஆக விஞ்ஞானிகளை வியப்புற வைக்கும் ‘அலக்’கின் எதார்த்தப் பொருளை அல்குர்ஆனில் இருந்து அப்புறப்படுத்தி யுள்ளனர்.

அல்குர்ஆனின் 96வது அத்தியாத்தின் பெயரையும் ‘அலக்’ எனும் பதம் இடம் பெற்ற (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) அனைத்து ஆயத்துகளின்

பொருள்களையும் மாற்றியுள்ளார். கிருத்துவ உலகை ஆட்டிப் படைக்கும் அலக் எனும் சொல்லுக்கு மாற்றுப் பொருள் கொடுப்பதின் மூலம் இஸ்லாத்தின் எதிரிகளோடு கை கோர்க்க முயல்கிறாரோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. எனவே முஸ்லிம்கள் இவர்களிடம் கவனமாக இருப்பது மிக அவசியமாகும்.

சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது, அசத்தியம் அழிந்தே தீரும். (அல்குர்ஆன் 17:8)

சமுதாய ஒற்றுமை

நாவின் விபரீதம்




மௌலவி அலிஅக்பர் உமரி



அல்லாஹ் மனிதனுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கின்றான். அவைகளில் மிக முக்கியமானது பேசும் நாவாகும். நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம். கத்தியைக் கொண்டு ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரின் உயிரைப் பாதுகாக்கவும் செய்யலாம். அதே கத்தியைக் கொண்டு ஒருவரின் உயிரை எடுத்தும் விடலாம். இதே போன்றது தான் நாவும். நாவைக் கொண்டு சொர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமையலாம். ஆகவே நாவை பேணிப் பாதுகாப்போம்.



மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது நாவு என்று சொன்னால் அது மிகையாகாது. இதை எப்படி நாம் பயன்படுத்துகிறோமோ அதன் படியே முடிவும் இருக்கும். சிலர் இந்த நாவை சரியாகப் பயன்படுத்தி மனிதர்களில் ‘சிறப்பிடத்தைப்’ பெற்று விடுகிறார்கள். சிலர் இதே நாவை முறையற்ற வழியில் பயன்படுத்தி ‘மனிதர்களில் தரம் தாழ்ந்தவர்கள்’ பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள். இப்படிப்பட்ட நாவைப் பற்றி திருக்குர்ஆனும் நபி மொழியும் என்ன கூறுகின்றன என்பதைக் காண்போம்.



‘எதைப் பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைப் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலன், பார்வை இதயம் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்பற்றி) கேள்வி கேட்கப்படும்’. (அல்குர்ஆன் 17:36)



‘ஒருவனிடம் கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை’. (அல்குர்ஆன் 50:18)



நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கு உரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) அல்லாஹ், அதற்காக அவன் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)



ஓர் அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)



‘(நாளை மறுமையில்) மனிதர்களை முகம் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)



அரைகுறை ஞானமுள்ள எந்த விஷயத்தையும் நாம் வெளிப்படுத்தக் கூடாது! ஏனென்றால் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் வானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தவறாகப் பயன்படுத்திய வார்த்தைகளைப் பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய தண்டனை வழங்கப்படும்.



நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த்தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத்திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும் என நபி ஸல் அவர்கள் கூறியதை மனதில் பதிய வைக்க வேண்டும். இந்த ஹதீஸ் நாவை எந்த அளவிற்கு கவனமாகக் கையாள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.



நாவினால் நிகழும் சில தவறுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. அவற்றைத் தெரிந்து முற்றிலும் அப்படிப்பட்ட தவறுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.



1. புறம் பேசுதல்



மனிதர்கள் கூட்டமாக கூடி விட்டாலே அங்கு யாரையாவது குறை கூறி விடுகின்றனர். ஆண், பெண் இருபாலாரும் அடுத்தவரைப் பற்றி குறிப்பிட்டு புறம் பேசுவது வாடிக்கையான செயலாக மாறி விட்டது. இப்படி அடுத்தவரைக் குறை கூறி பேசுவதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.



சிலர் நாங்கள் உண்மையைத்தானே கூறுகிறோம், இதில் தவறென்ன இருக்கிறது? என்று கேட்கலாம். ஒருவரிடத்தில் இருக்கும் தவறைக் கூறுவதே புறமாகும். ஒருவரிடத்தில் தவறிருக்கக் கண்டால் அந்த தவறை உரியவரிடம் நேரடியாகக் கூறி அவரது தவறை நீக்க முயல வேண்டுமே தவிர ஊர் முழுக்கப் பறைசாற்றக் கூடாது.



ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் புறம் பேசுவது என்றால் என்ன? என தோழர்களிடம் வினவினார்கள். அதற்கு தோழர்கள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே இதனை நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுவது என்பது) நீர் உம் சகோதரரைப் பற்றி அவர் வெறுப்பதைக் கூறுவதாகும் என பகர்ந்தார்கள். நான் கூறும் விஷயம் என் சகோதரரிடம் இருந்தால்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நீர் கூறும் விஷயம் அவரிடம் இருந்தால் நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டீர். நீர் கூறும் விஷயம் அவரிடம் இல்லையென்றால் நிச்சயமாக நீர் அவரைப்பற்றி அவதூறு கூறிவிட்டீர் எனப் பகர்ந்தார்கள். (நூல்: முஸ்லிம்)



புறம் பேசுவது தனது சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பதைப் போன்றது என்று திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றது.



‘மேலும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்’. (49:12)



புறம் பேசுதலைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது புறம் பேசுபவரின் வார்த்தையைக் கடலில் போட்டால் இதனுடைய கடுமையான சொல்லின் காரணத்தால் கடல் நீரின் தன்மையே மாறிவிடும் என்றார்கள்.



நான் நபி (ஸல்) அவர்களிடம், சஃபிய்யா (ரலி) அவர்களுடைய இன்னன்ன விஷயங்கள் உங்களுக்குப் போதுமானதாகும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ கூறிய அந்த வார்த்தையை கடல் நீரில் கலந்தால் (அதனுடைய தன்மையையே) மாற்றி விடும் என்றார்கள். (நூல்: அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்)



புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களாலேயே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தை கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினால் ஆன நகங்கள் இருந்தன. அவற்றின மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் (தாமே) காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே இவர்கள் யார்? என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தை சாப்பிட்டார்கள் (அதாவது புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் பங்கம் விளைவித்தவர்கள் என விளக்கமளித்தார்கள். (நூல்: அஹ்மத், அபூதாவூத்)



இப்படிப்பட்ட பெரும் பாவமான புறம் பேசுதலை நாமும் தவிர்ந்து கொண்டு, அவை பேசப்படும் இடத்தை விட்டு விலகி விடவும் வேண்டும்.



‘(முஃமின்கள்) வீணானதை செவியுற்றால் அதைப் புறக்கணித்து, எங்களுக்கு எங்கள் அமல்கள், உங்களுக்கு உங்கள் அமல்கள்! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள்’. (அல்குர்ஆன் 25:55)



‘(ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்திற்குரியவர்கள்) வீணானவற்றை விட்டு விலகி இருப்பார்கள்’ (அல்குர்ஆன் 23:3)



புறம் பேசுதலைத் தவிர்ந்து கொள்வதற்கு நபி ஸல் அவர்கள் கூறிய மணிமொழிகளை மனதில் பதிய வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.



1. முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)



2. எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)



3. நான் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளத் தக்க ஒரு விஷயத்தை அறிவியுங்கள்! என்று கேட்டேன். ‘எனது இறைவன் அல்லாஹ் என்று கூறி, பிறகு அதிலேயே உறுதியாக இருப்பீராக’ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். என்னுடைய விஷயத்தில் தாங்கள் அதிகம் அஞ்சுவது என்ன? என்று கேட்டேன். அப்போது தனது நாவை பிடித்துக் காட்டி இது தான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்: திர்மிதி)



2. அவதூறு



நிச்சயமாக கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகையோர், இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 24:23)



3. கோள்



‘ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் இல்லாத ஒன்றை கூறி இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்படுத்துவதை’ சிலர் தொழிலாகவே கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ பேர் கொலை கூட செய்யப்பட்டுள்ளனர். இப்படி பெரும் பாதிப்புகள் இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதே இல்லை. இப்படி கோள் சொல்லித் திரிபவர்களை அல்லாஹ் மன்னிக்க வில்லையெனில் நரகம் செல்வார்களே தவிர, சுவர்க்கம் செல்லவே முடியாது.



குறை சொல்லி புறம் பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)



கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி, முஸ்லிம்)



நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்லும் போது இந்தப் கப்ருகளில் உள்ள இருவரும் வேதனை செய்யப்படுகின்றார்கள், அவர்கள் இருவரும் (அவர்களின் எண்ணத்தில்) பெரும் பாவத்தினால் வேதனை செய்யப்படவில்லை. என்றாலும் அது பெரும் பாவம் தான். அவ்விருவரில் ஒருவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார். மற்றவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார் எனக் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)



4. பொய் சாட்சி



அவர்கள் (அல்லாஹ்வின் அடியார்கள்) பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள். மேலும் அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவர்களாக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள். (அல்குர்ஆன் 25:72)



பெரும் பாவங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘அல்லாஹ்விற்கு இணை வைப்பது, பெற்றோருக்கு நோவினை செய்வது, பொய் சாட்சி சொல்வது’ என்று பதிலளித்தார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)



5. தர்மம் செய்ததை சொல்லிக் காட்டுதல்



நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தம் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததை சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் தர்மங்களை, பாழக்கி விடாதீர்கள். (அல்குர்ஆன் 2:264)



மறுமை நாளில் அல்லாஹ் மூன்று சாரார்களுடன் பேசவும மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். கைசேதப்பட்ட, நஷ்டமடைந்த அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். (தனது) கீழாடையை (பெருமைக்காக, கரண்டைக் காலுக்கு கீழ்) தொங்க விடுபவன், (தான் செய்த தர்மத்தை) சொல்லிக் காட்டுபவன், பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம்)



6. சபித்தல்



ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி, அபூதாவூது)



ஒருவர் இன்னொருவரை ‘பாவி’ என்றோ ‘காஃபிர்’ என்றோ கடுஞ்சொல் கூற வேண்டாம். (ஏனெனில்) குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் (சொன்னவர்) பக்கமே திரும்பி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)



7. இறந்தவர்களை ஏசக்கூடாது



இறந்தவர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் முற்படுத்தியதற்குரியதை பெற்றுக் கொண்டார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)



8. பக்கத்து வீட்டுக்காரருக்கு துன்பம் தருதல்



யார் அல்லாவையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும், இல்லையெனில் மௌனமாக இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)



9. காலத்தைத் திட்டுதல்



காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்தி விடுகிறார்கள், காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறி வரச் செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)



இதுவரை நாம் நாவினால் ஏற்படும் தீங்குகளையும் அவற்றைப் பற்றிய திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் எச்சரிக்கைகளையும் கண்டோம்.



சொர்க்கம் செல்வதற்கு நாவு தடையாகிறது என்பதை எச்சரித்த நபி (ஸல்) அவர்கள் நாவை சரியாக பயன் பயன்படுத்துவோருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதையும் கூறுகிறார்கள்.



எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)



அன்புள்ள சகோதர சகோதரிகளே!



இதுவரை நாவின் விபரீதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இதே நாவை நல்ல காரியங்களில் பயன்படுத்தினால் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. நாவைக் கொண்டு தஸ்பீஹ் செய்யலாம், குர்ஆன் ஓதலாம், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கலாம். இன்னும் இவைகள் போன்ற எத்தனையோ நல்ல காரியங்களில் ஈடுபடலாம். நாவை நல்ல வழிகளில் பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மைகளில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.



1. குர்ஆன் ஓதுதல்



நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்கு (அதை ஓதியவர்களுக்கு) பரிந்துரை செய்யக்கூடியதாக வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)



குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். ‘அலிஃப், லாம், மீம் என்பது ஓர் எழுத்து’ என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)



2. தஸ்பீஹ் செய்தல்



இரு வார்த்தைகள் (சொல்வதற்கு) நாவுக்கு மிக இலகுவானவை, இறைவனின் தராசில் மிக கனமானவை, இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை (அவ்விரு வார்த்தை) ‘சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)



3. நன்மையை ஏவி தீமையை தடுத்தல்



(விசுவாசங் கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தவர்களில் எல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும் நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 3:110)



நாவு மனிதனை சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ கொண்டு செல்லக்கூடிய உறுப்பு என்பதை தெரிந்து கொண்டோம். ஆகவே நரகம் செல்லக் கூடிய (சொல்) செயல்களிலிருந்து நாம் நாவைப் பாதுகாத்து சுவர்க்கம் செல்லக்கூடிய (சொல்) செயல்களைச் செய்து நாவினால் சுவர்க்கம் செல்ல நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
அல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்




அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.



கஹ்ஃப் என்ற வார்த்தையின் பொருள் குகை. அல் கஹ்ஃப் என்றால் அந்தக் குகை என்பது பொருள். இந்த அத்தியாயத்தின் ஒன்பதாவது வசனம் முதல் இருபத்தி ஆறாவது வசனம் வரை ஒரு குகையில் தஞ்சம் புகுந்த நல்லடியார்கள் குறித்த வரலாற்றுக் குறிப்பு கூறப்படுகிறது. இந்த அத்தியாயத்திற்கு அல் கஹஃப் (அந்தக் குகை) என்று பெயர் வர இதுவே காரணமாகும்.



இந்த அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டது என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளதாக குர்துபி உள்ளிட்ட பல விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் இதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் எதையும் இவர்கள் எடுத்துக் காட்ட வில்லை.



இந்த அத்தியாயத்தில் உள்ள வசனங்களில் கூறப்படும் செய்திகளைப் பார்க்கும் போது சில செய்திகள் மக்காவில் அருளப்பட்டு இருக்கலாம். வேறு சில செய்திகள் மதீனாவில் அருளப்பட்டு இருக்கலாம் என்று அனுமானம் செய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன. இன்னும் சில வசனங்களின் அமைப்பைப் பார்க்கும் போது அதன் அமைப்பிலிருந்து அது மக்காவில் அருளப்பட்டது என்றோ மதினாவில் அருளப்பட்டது என்றோ முடிவுக்கு வரமுடியாது.



எனவே, ஒட்டு மொத்தமாக இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது.



இது மக்காவில் அருளப்பட்டது அல்லது மதினாவில் அருளப்பட்டது என்று நபித்தோழர்கள் கூறியதாக குறிப்பு கிடைக்கும் போது மட்டுமே இது பற்றி நாம் முடிவுக்கு வர வேண்டும். அவ்வாறு குறிப்புக்கள் கிடைக்காத போது மக்கீ மதனி என்று ஏதாவது ஒன்றைக் கூறியாக வேண்டும் என்பதற்காக எதையாவது கூறுவதை ஒப்புக் கொள்ள முடியாது. திருக்குர்ஆனின் விரிவுரையாளர்களில் பலர் மக்கீ, மதனி என்று எதையாவது கூறியாக வேண்டுமே என்பதற்காகத் தான் கூறியுள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.



அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற அடிப்படையில் திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் சமமானவையே என்றாலும் சில அத்தியாயங்களுக்கு தனிச் சிறப்புகள் இருப்பதாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயங்களின் சிறப்புக்களை எடுத்துரைக்கும் இத்தகைய ஹதீஸ்களில் பெரும்பாலானவை இட்டுக் கட்டப்பட்டவையாகவே உள்ளன.



அல்பகரா, குல்ஹுவல்லாஹ், குல்அஊது பிரப்பின்னாஸ், குல்அஊது பிரப்பில் ஃபலக், அல்ஹம்து, ஆயத்துல் குர்ஸி, அல் கஹ்ஃப் ஆகிய அத்தியாயங்களின் சிறப்பு குறித்த ஹதீஸ்களில் மட்டுமே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகிறது. கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் குறித்தம் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதால் அந்த சிறப்புகளை அறிந்து விட்டு இந்த அத்தியாயத்தின் விளக்கத்திற்குள் நாம் நுழைவோம்.



‘கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), நூல் : முஸ்லிம்)



இந்தப் பத்து வசனங்களுக்கும் தஜ்ஜாலுக்கும் என்ன தொடர்பு என்பதை பத்து வசனங்களுக்கான விளக்கம் நிறைவடையும் போது நாம் குறிப்பிடுவோம் இன்ஷா அல்லாஹ். இந்தப் பத்து வசனங்களை மனனம் செய்வது தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கும் கேடயம் என்பதை மட்டும் இப்போது புரிந்து கொண்டால் போதுமானது.



‘உங்களில் யார் தஜ்ஜாலை அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும’; என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் சிறு பகுதி)

(அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி), நூல் : முஸ்லிம்)



அபூதாவூத் நூலின் அறிவிப்பில், ‘அவனை உங்களில் யார் அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் நிச்சயமாக அது தஜ்ஜாலின் சோதனைகளிலிருந்து பாதுகாக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.



முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரிய சோதனையாக இருக்கும் தஜ்ஜாலின் வருகையின் போது ஈமானைக் காக்கும் கேடயமாக இவ்வசனங்கள் அமைந்திருப்பது அந்த அத்தியாயத்திற்கான சிறப்புகளில் ஒன்றாகும்.



ஒரு மனிதர் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த கால்நடை ஓட ஆரம்பித்தது. கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிய மனிதர் கவனித்த போது அவர் மீது மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அவர் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இந்த நிலை குர்ஆனை ஓதும் போது இறங்கிய (சகீனத் எனும்) அமைதியாகும்’ என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர் : பராஃ (ரலி), நூல்கள் : புஹாரி, முஸ்லிம்)



‘ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்கு பிரகாசம் நீடிக்கிறது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஸயீது (ரலி), நூல் : ஹாக்கிம்)



அல் கஹ்ஃப் அத்தியாயம் இத்தகைய தனிச் சிறப்புகள் வாய்ந்த அத்தியாயம் ஆகும். இந்த அத்தியாயத்தின் விளக்கத்தை இனி காணலாம்.



ஓர் உலகமகா செய்தி




‘அம்ம யதஸாஅலூன்’ என்று துவங்கும் இந்த அத்தியாயம் ‘அந் – நபா’ அத்தியாயம் என்றழைக்கப் படுகின்றது. இதன் பொருள் ‘மகத்தான செய்தி’ என்பதாகும். இந்த அத்தியாயத்தில் மகத்தான ஒரு செய்தி பற்றிக் கூறப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது.



நாற்பது சிறிய வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயம் நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டதாகும்.



‘எதைப் பற்றி அவர்கள் வினா எழுப்புகின்றனர்? அவர்கள் எதில் (இரு கூறாகப் பிளவுபட்டு) கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ, அந்த மகத்தான செய்தியைப் பற்றியா (வினா எழுப்புகின்றனர்)?’ (அல்குர்ஆன் 78:1,2,3)



என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. நபி (ஸல்) அவர்கள் தமது ஏகத்துவப் பிரச்சாரத்தையும் மரணத்திற்குப் பின் இன்னொரு வாழ்க்கை உள்ளது என்பதையும் போதனை செய்த போது அவர்களை ஏற்காத மக்கள் ஏகத்துவத்தை எதிர்ப்பதை விட மறுமை வாழ்வையே கடுமையாக எதிர்த்தார்கள். மரணத்திற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறதா என்பதே பெரும் சர்ச்சைக்குறிய விஷயமாக அவர்களுக்கு இருந்தது. அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கையில்லாததே ஏகத்துவத்தை அவர்கள் நிராகரிக்கக் காரணமாக இருந்தது என்று கூறலாம்.



‘மேலும் மனிதன் தான் படைக்கப்பட்டதை மறந்து விட்டு நமக்கு உதாரணம் கூறுகிறான். எலும்புகள் மக்கிவிட்ட நிலையில் அதை அவனால் உயிர்ப்பிக்க முடியும்? என்று அவன் கூறுகிறான்’. (36:78)



‘எலும்புகளாகவும் மக்கிப் போனவையாகவும் நாங்கள் ஆகிவிட்ட பின் புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுவோமா என்ன? என்றும் அவர்கள் கேட்கின்றனர்’. (17:49)



‘நாங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டால் நாங்கள் எழுப்பப்படுவோமா? முந்தைய எங்களின் முன்னோர்களும் எழுப்பப்படுவார்களா?’. (37:56, 56:47)



‘நாங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்ட பின் (மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு) நாம் கூலி வழங்கப் பெறுவோமா?’. (37:53)



‘நாம் கப்ருகளிலிருந்து திரும்பவும் எழுப்பப்படுவோமா? மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட போதுமா? அப்படியானால் அது பெரும் நஷ்டமுண்டாக்கும் திரும்புதலே என்றும் கூறுகின்றனர்’. (79:11)



‘மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?’. (75:03)



‘இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பித்து எழுப்ப மாட்டான் என்று அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர்’. (16:38)



‘தாங்கள் எழுப்பப்படவே மாட்டோம் என்று நிராகரிப்பவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்’. (64:07)



‘இன்னும் (நபியே!) ‘நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்’ என்று நீர் கூறினால் இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை என்று காபிர்கள் கூறுகின்றனர்’. (11:07)



‘மகத்தான ஒரு நாளில் அவர்கள் எழுப்பப்பட உள்ளனர் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?’. (83:4)



‘இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை ஏதும் இல்லை, நாங்கள் எழுப்பப்படக் கூடியவர்களாகவும் இல்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். (6:29)



நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்கள் மறுஉலக வாழ்க்கையில் எந்த அளவுக்கு நம்பிக்கை இழந்திருந்தார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் இறைத்தூதர்களை நம்புவதற்கு இந்த விஷயமே முதல் காரணமாக இருந்தது என்பதைப் பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.



‘நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆனபின்னர் நீங்கள் (திரும்பவும்) எழுப்பப்படுவீர்கள் என்று இவர் உங்களுக்கு வாக்களிக்கிறாரா?



உங்களுக்கு (அவரால் அறிவிக்கப்பட்ட) வாக்குறுதி வெகு தொலைவு! வெகு தொலைவு!

இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை ஏதுமில்லை, நாம் வாழ்கிறோம், மரணிக்கிறோம், (அவ்வளவு தான்) நாம் திரும்பவும் எழுப்பப்படக் கூடியவர்கள் அல்லர்.



இவர் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டிக் கூறும் மனிதரேயன்றி வேறில்லை. இவரை நாம் நம்பப் போவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்’. (திருக்குர்ஆன் 23:35-38)



மறுமை வாழ்வை அவர்களால் நம்ப முடியாமல் போனதுதான் இறைத் தூதர்களையும், அவர்களது கொள்கைகளையும் அவர்களால் நம்ப முடியாமல் போனதற்குக் காரணம் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.

இவ்வளவு வன்மையாக மறுமை வாழ்வை ஒரு கூட்டம் மறுத்து வந்தது. இன்னொரு கூட்டமோ அதைவிட உறுதியாக மறுமை வாழ்வில் முழு நம்பிக்கை வைத்திருந்தது.



அடிக்கப்பட்டார்கள், அதனால் அவர்கள் துன்பப் பட்டாலும் தாங்கிக் கொண்டார்கள்!



தரக்குறைவான வார்த்தைகளால் ஏசப்பட்டார்கள், சகித்துக் கொண்டார்கள்!



சித்திரவதை செய்யப்பட்டார்கள், அதையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்!



நாடு கடத்தப்பட்டார்கள், அனைத்தையும் துறந்து விட்டு செல்வது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை!



ஆசை வார்த்தைகள் அவர்களை மயக்க வில்லை. அச்சுறுத்தல்கள் அவர்களை சிறிதளவும் அசைக்க முடியவில்லை.



குறைந்த எண்ணிக்கையினராகவும் பலவீனர்களாகவும் இருந்தும் பெரும் கூட்டத்தை எதிர்த்து நிற்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் அவர்கள் கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்காமல் களத்தில் குதித்தார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. இதன் பிறகு அழியாத பெருவாழ்வு உண்டு என்பதில் அவர்களுக்கு இருந்த உறுதியான நம்பிக்கை தான் காரணம்!



இப்போது மீண்டும் அந்த மூன்று வசனங்களையும் நினைவுபடுத்திக் கொள்வோம்!



எதைப்பற்றி அவர்கள் வினா எழுப்புகின்றனர்? எந்த விஷயத்தில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றியா வினா எழுப்புகின்றனர்?



மறுஉலக வாழ்க்கையை நம்பும் விஷயத்தில் அவர்கள் இரண்டு அணிகளாக பிளவுபட்டு இருந்ததையும் அதுபற்றி அவர்கள் அடிக்கடி வினா எழுப்பிக் கொண்டிருந்ததையும் இவ்வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் எழுப்பிய வினாக்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இதற்கு முன் நாம் எடுத்துக் காட்டிய வசனங்கள் விளக்கமாக எடுத்துரைக்கின்றன.



அவர்கள் வினா எழுப்பும் விஷயம் சாதாரணமானதல்ல. அது மகத்தான விஷயம் என்பதும் இங்கே வலியுறுத்தப்படுகின்றது. அது எப்படி மகத்தான விஷயமாக அமைந்துள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.



மறுவுலக வாழ்வில் நம்பிக்கை வைப்பது ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் அளவுக்கு மகத்தானது. அவர்களது வாழ்வின் போக்கையே அந்த நம்பிக்கை மாற்றி அமைக்கும் அளவுக்கு அது மகத்தானது!



கல்லுக்கும் மண்ணுக்கும் கடவுள் தன்மை வழங்கி வழிபட்டவர்கள், ஏக இறைவனைத் தவிர எவருக்கும் எதற்கும் அஞ்சாதவர்களாக ஆனது (33:39) இந்த நம்பிக்கையினால் தான்.



தன்னலமே பெரிது என்ற வாழ்ந்த கூட்டம் தனக்கு வறுமை இருந்த போதும் தன்னை விட மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக மாறியது (59:9) இந்த நம்பிக்கையினால் தான்.



ஒற்றுமையின்றி தங்களுக்குள் அன்றாடம் போரிட்டுக் கொண்டிருந்த சமுதாயம் ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது (3:103) இந்த நம்பிக்கையினால் தான்.



மதுவில் வீழ்ந்து கிடந்த சமுதாயம் (5:90) அதிலிருந்து முழுமையாக விடுபட்டது இந்த நம்பிக்கையினால் தான்.



தங்களின் அனைத்துத் தீமைகளையும் விட்டு விலகுவதாக பெண்களும் கூட உறுதி மொழி எடுத்துக் கொண்டது (60:12) இந்த நம்பிக்கையினால் தான்.



எந்த மனிதரிடமும் எந்த உதவியையும் தேடாமல் சுயமரியாதையைப் பாதுகாக்க கூடிய சமுதாயமாக அவர்கள் மாறியதும் (2:273) இந்த நம்பிக்கையினால் தான்.



தங்களுக்கு ‘நல்லது இது’ ‘கெட்டது இது’ என்று தெரியாத ஒரு கூட்டம் அனைத்து நன்மைகளையும்; மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அனைத்துத் தீமைகளை விட்டும் அவர்களை விலக்கக் கூடியவர்களாக மாறியதும் (3:104) இந்த நம்பிக்ககையினால் தான்.



இப்படி ஒரு சமுதாயத்தின் வாழ்வையே அடியோடு மாற்றியமைப்பதற்கு இந்த நம்பிக்கை காரணமாக அமைந்துள்ளதால் அதை மகத்தான செய்தி என்று கூறுகிறான்.



இந்த மகத்தான செய்தி பற்றி அவர்கள் வினா எழுப்பிக் கொண்டிருந்தார்கள் என்றால் அந்த வினாவுக்கு விடை என்ன? அவர்களின் மறுமை பற்றிய ஐயங்களை இறைவன் எவ்வாறு அகற்றுகிறான்?