உலகின் முதல் மனிதர்

, , No Comments
அல்லாஹ் மறைவானவன், அவன் மறைந்திருப்பவன். தான் இருப்பதை தெரிவிப்பதற்காக அல்லாஹ் அழகான உலகத்தை படைத்தான். உலகம் மட்டுமல்ல பல கோள்கள், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற அனைத்தையும் படைத்து, அவை அத்தனையையும் ஒன்றோடு ஒன்று மோதி விடாதவாறு சுழலவிட்டுள்ளான். அப்படிப்பட்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.


பின்னர் அல்லாஹ் மனிதனைப் படைக்க முடிவு செய்தான். பானைகள் செய்ய பயன்படுத்தப்படும் களி மண்ணால் அல்லாஹ் மனிதனை செய்தான். அவன் தன்னுடைய ஆவியை அதனுள் ஊதினான். இப்படித்தான் அல்லாஹ் முதல் மனிதருக்கு உயிரைக் கொடுத்தான். அவர் தான் நம் எல்லோருக்கும் தந்தை, மூலத்தந்தை. ‘ஆதம்’ என்று அல்லாஹ் அவருக்கு பெயர் சூட்டினான்.







இன்று மக்கள் வேறுபட்ட நிறங்களிலும், வேறுபட்ட உருவ அமைப்பிலும், வேறுபட்ட மொழியை பேசுபவர்களாவும் உலகின் பல்வேறுபட்ட இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் மூலத்தந்தை ஒருவர் தான். அவர் தான் முதல் மனிதர் ஆதம் (அலை) ஆவார். அல்லாஹ் அவரை முதல் இறைத்தூதராக ஆக்கி, மனிதர்களுக்கு நல்வழி காட்டினான்.






முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான அன்பளிப்புகளை கொடுத்தான். பார்வை எனும் அன்பளிப்பை அல்லாஹ் ஆதமுக்கு வழங்கினான், அதன் மூலம் அல்லாஹ்வின் படைப்புகளை பார்த்து அவர் ஆச்சர்யமடைந்தார். அவரை சுற்றி இருக்கும் உலகத்தை புரிந்து கொள்வதற்காக கேட்கும் சக்தியையும், நுகரும் சக்தியையும், ருசிக்கும் திறனையும், தொடு உணர்ச்சியையும் அன்பளிப்பாக அல்லாஹ் கொடுத்தான்.






எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ் அறிவு எனும் அன்பளிப்பை ஆதமுக்கு வழங்கினான். அதன் மூலம் அவர், நல்லது எது? கெட்டது எது? என்பதை விளங்கி நல்லதை மட்டும் செய்தார். (அதாவது, நல்லது எது கெட்டது எது என்பதை மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய அறிவைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதனை தீர்மானிப்பது அல்லாஹ். அதனை விளங்கப் படுத்துவதற்காக இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள், இறைவேதங்கள் வழங்கப்பட்டன. அதனை விளங்கி அதன் படி நடப்பது மனிதன் மீது கடமை. அதற்கு அறிவு மிகவும் முக்கியம்.) அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களுக்கு அறிவு ஞானத்தை கொடுத்ததால் வானவர்களை விட சிறந்தவராக ஆக்கப்பட்டார்.






ஆதம் (அலை) அவர்களுக்கு உறுதுணையாக, அன்புக் கூட்டாளியாக ‘ஹவ்வா’ என்னும் பெண்ணை அல்லாஹ் படைத்தான். அவர்கள் இருவரையும் சுவனத்தோட்டத்தில் வாழும்படி கூறினான். ஆனால் ஒரு மரத்தை மட்டும் நெருங்கக் கூடாது என்று அல்லாஹ் எச்சரித்தான். அழகிய சொர்க்கத்தில் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் அவ்விருவரும் வாழ்ந்து வந்தார்கள்.






ஆனால் அல்லாஹ் அவ்விருவருக்கும் வழங்கிய உயர்வைக் கண்டு ஷைத்தான் அவர்கள் மீது பொறாமைப்பட்டான். ஒரு நாள் ஆதம் (அலை), ஹவ்வா இருவரிடமும் ஷைத்தான் வந்தான். அல்லாஹ் தடுத்திருக்கும் மரத்தை நெருங்கும் படி ஆசை வார்த்தை காட்டினான். இந்த மரம் முடிவில்லா வாழ்க்கையை தரும், இந்த மரத்தை நெருங்கினால் வயோதிகம் வராது, அவர்கள் இறக்கவும் மாட்டார்கள் என்று ஷைத்தான் கூறினான்.






ஷைத்தான் மிகவும் சாதுர்யமாக அவ்விருவரையும் நம்பும்படி செய்தான். அதனால் அந்த மரத்திலிருந்து உண்டார்கள். தவறு செய்தவர்களாக ஆனார்கள். உடனே அவர்கள், தான் செய்த தவற்றை உணர்ந்தார்கள், அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டார்கள்.






அல்லாஹ் அவ்விருவரையும் மன்னித்தான். ஆனால் அவ்விருவரும் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதற்காக அவர்கள் சுவனப்பூங்காவை விட்டு வெளியேறி, பூமிக்கு சென்றுவிடுமாறு கட்டளையிட்டான். ஆதமும் ஹவ்வாவும் பூமிக்கு வந்தார்கள். அங்கே அப்போது இவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை.






மனிதர்களை நல்வழிப்படுத்தி நேரான பாதையை காட்டுவதற்காக அல்லாஹ்வின் தூதர்கள், தீர்க்கதரிசிகள் பூமிக்கு வருவார்கள் என்று அல்லாஹ் கூறினான்.






யார் அந்த தூதர்களின் வழிகாட்டலை ஏற்று நடக்கிறார்களோ அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள், அவர்களுக்கு பயம் இருக்காது. அவர்கள் மறுவுலகில் சொர்க்கம் செல்வார்கள். யார் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஏற்க மறுத்து நிராகரிக்கிறார்களோ அவர்கள் மறுமையில் நரகத்தில் தூக்கி வீசப்படுவார்கள்.






படிப்பினைகள்:






1. அல்லாஹ் தான் இவ்வுலகின் ஒரே சூப்பர்பவர், வேறு எவனும் எதுவும் அவனுக்கு முன் சூப்பர்பவர் கிடையாது.






2. ஆதம் (அலை) அவர்கள் மனிதர்களின் மூலத்தந்தை என்பதால் நிறத்தால், உருவத்தால், மொழியால் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு கற்பித்தல் கூடாது.






3. அல்லாஹ் மனிதர்களுக்கு அறிவைக் கொடுத்திருப்பதால் நல்ல வழியிலேயே அதனை பயன்படுத்த வேண்டும், கெட்டவற்றுக்கு பயன்படுத்தக் கூடாது.






4. அல்லாஹ் தடுத்தவற்றை மறந்தும் செய்யக் கூடாது.






5. ஷைத்தான் மனிதர்களை வழிகெடுப்பவன், கெட்டவற்றின் பக்கம் மனிதர்களை தூண்டக்கூடியவன் என்பதை விளங்கி கெட்டவற்றை விட்டும் நாம் தூரமாக இருக்க வேண்டும்.






6. தவறு செய்யும் பட்சத்தில் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அந்தத் தவறை மீண்டும் செய்யாது இருக்க மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.






7. மனிதர்கள் எல்லோரும் இறைத்தூதரை பின்பற்றி நடந்தால் சொர்க்கம் கிடைக்கும், அவரை நிராகரித்தால் நரகம் கிடைக்கும்.






தொகுப்பு: நெய்னா முஹம்மது


0 comments:

Post a Comment