அல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்

, , No Comments
அல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்




அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.



கஹ்ஃப் என்ற வார்த்தையின் பொருள் குகை. அல் கஹ்ஃப் என்றால் அந்தக் குகை என்பது பொருள். இந்த அத்தியாயத்தின் ஒன்பதாவது வசனம் முதல் இருபத்தி ஆறாவது வசனம் வரை ஒரு குகையில் தஞ்சம் புகுந்த நல்லடியார்கள் குறித்த வரலாற்றுக் குறிப்பு கூறப்படுகிறது. இந்த அத்தியாயத்திற்கு அல் கஹஃப் (அந்தக் குகை) என்று பெயர் வர இதுவே காரணமாகும்.



இந்த அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டது என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளதாக குர்துபி உள்ளிட்ட பல விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் இதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் எதையும் இவர்கள் எடுத்துக் காட்ட வில்லை.



இந்த அத்தியாயத்தில் உள்ள வசனங்களில் கூறப்படும் செய்திகளைப் பார்க்கும் போது சில செய்திகள் மக்காவில் அருளப்பட்டு இருக்கலாம். வேறு சில செய்திகள் மதீனாவில் அருளப்பட்டு இருக்கலாம் என்று அனுமானம் செய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன. இன்னும் சில வசனங்களின் அமைப்பைப் பார்க்கும் போது அதன் அமைப்பிலிருந்து அது மக்காவில் அருளப்பட்டது என்றோ மதினாவில் அருளப்பட்டது என்றோ முடிவுக்கு வரமுடியாது.



எனவே, ஒட்டு மொத்தமாக இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது.



இது மக்காவில் அருளப்பட்டது அல்லது மதினாவில் அருளப்பட்டது என்று நபித்தோழர்கள் கூறியதாக குறிப்பு கிடைக்கும் போது மட்டுமே இது பற்றி நாம் முடிவுக்கு வர வேண்டும். அவ்வாறு குறிப்புக்கள் கிடைக்காத போது மக்கீ மதனி என்று ஏதாவது ஒன்றைக் கூறியாக வேண்டும் என்பதற்காக எதையாவது கூறுவதை ஒப்புக் கொள்ள முடியாது. திருக்குர்ஆனின் விரிவுரையாளர்களில் பலர் மக்கீ, மதனி என்று எதையாவது கூறியாக வேண்டுமே என்பதற்காகத் தான் கூறியுள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.



அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற அடிப்படையில் திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் சமமானவையே என்றாலும் சில அத்தியாயங்களுக்கு தனிச் சிறப்புகள் இருப்பதாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயங்களின் சிறப்புக்களை எடுத்துரைக்கும் இத்தகைய ஹதீஸ்களில் பெரும்பாலானவை இட்டுக் கட்டப்பட்டவையாகவே உள்ளன.



அல்பகரா, குல்ஹுவல்லாஹ், குல்அஊது பிரப்பின்னாஸ், குல்அஊது பிரப்பில் ஃபலக், அல்ஹம்து, ஆயத்துல் குர்ஸி, அல் கஹ்ஃப் ஆகிய அத்தியாயங்களின் சிறப்பு குறித்த ஹதீஸ்களில் மட்டுமே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகிறது. கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் குறித்தம் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதால் அந்த சிறப்புகளை அறிந்து விட்டு இந்த அத்தியாயத்தின் விளக்கத்திற்குள் நாம் நுழைவோம்.



‘கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), நூல் : முஸ்லிம்)



இந்தப் பத்து வசனங்களுக்கும் தஜ்ஜாலுக்கும் என்ன தொடர்பு என்பதை பத்து வசனங்களுக்கான விளக்கம் நிறைவடையும் போது நாம் குறிப்பிடுவோம் இன்ஷா அல்லாஹ். இந்தப் பத்து வசனங்களை மனனம் செய்வது தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கும் கேடயம் என்பதை மட்டும் இப்போது புரிந்து கொண்டால் போதுமானது.



‘உங்களில் யார் தஜ்ஜாலை அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும’; என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் சிறு பகுதி)

(அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி), நூல் : முஸ்லிம்)



அபூதாவூத் நூலின் அறிவிப்பில், ‘அவனை உங்களில் யார் அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் நிச்சயமாக அது தஜ்ஜாலின் சோதனைகளிலிருந்து பாதுகாக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.



முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரிய சோதனையாக இருக்கும் தஜ்ஜாலின் வருகையின் போது ஈமானைக் காக்கும் கேடயமாக இவ்வசனங்கள் அமைந்திருப்பது அந்த அத்தியாயத்திற்கான சிறப்புகளில் ஒன்றாகும்.



ஒரு மனிதர் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த கால்நடை ஓட ஆரம்பித்தது. கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிய மனிதர் கவனித்த போது அவர் மீது மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அவர் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இந்த நிலை குர்ஆனை ஓதும் போது இறங்கிய (சகீனத் எனும்) அமைதியாகும்’ என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர் : பராஃ (ரலி), நூல்கள் : புஹாரி, முஸ்லிம்)



‘ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்கு பிரகாசம் நீடிக்கிறது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஸயீது (ரலி), நூல் : ஹாக்கிம்)



அல் கஹ்ஃப் அத்தியாயம் இத்தகைய தனிச் சிறப்புகள் வாய்ந்த அத்தியாயம் ஆகும். இந்த அத்தியாயத்தின் விளக்கத்தை இனி காணலாம்.



0 comments:

Post a Comment