நடந்து முடிந்து விட்ட முன்னறிவிப்புக்கள்

, , No Comments
நடந்து முடிந்து விட்ட முன்னறிவிப்புக்கள்




‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 73:4-5)



அவர்கள் தங்களுக்கிடையே சர்ச்சை செய்து கொண்டிருக்கும் நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறா விட்டாலும் அந்த நாள் நெருங்க நெருங்க உலகில் ஏற்படும் விபரீதங்களை நபி (ஸல்) அவர்கள் முன்கூட்டியே அறிவித்துச் சென்றுள்ளனர். அந்த நாளை நம் காலத்தவர்கள் எந்த அளவுக்கு நெருங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புக்கள் நமக்கு உதவும் என்பதால் அவற்றில் சிலவற்றை அறிந்து விட்டு விளக்கவுரையைத் தொடர்வோம்.



ஒரு தாய் எத்தனை ஆண் மக்களைப் பெற்றாலும் அவர்கள் தாயைக் கவனிக்காத நிலை ஏற்படும். மகளை அண்டி வாழும் நிலைமையை அவள் சந்திப்பாள். அங்கே அடிமையாக நடத்தப்படுவாள் என்பது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடையாளங்களில் ஒன்றாகும். ‘ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள் (நூல்: முஸ்லிம்) என்று கூறி நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தனர். இன்றைக்குப் பரவலாக இந்த நிலையைப் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர்.



பொருளாதார வசதியில் மிகவும் பின் தங்கியவர்களில் சிலர் மிகவும் உயர்ந்த வசதியைப் பெறுவது உலகம் தோன்றியது முதல் நடந்து வரும் நிகழ்ச்சிகளே. ஆயினும் அத்தகைய பின் தங்கியவர்கள் ஒட்டு மொத்தமாக பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்த நிலையை அடைவதென்பது கியாமத் நாள் நெருங்கி விட்டது என்பதற்கான அடையாளமாகும். ‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறுங்காலுடனும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மிகவும் உயர்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்வார்கள்’ என்ற முன்னறிவிப்பின் மூலம் (நூல்: முஸ்லிம்) நபி (ஸல்) அவர்கள் இதை விளக்குகிறார்கள். இன்றைக்கு அரபியர்களுக்குக் கிடைத்திருக்கும் வாழ்வும் இன்ன பிற பகுதிகளில் நடக்கும் புரட்சிகரமான மாறுதலும் இதை விளங்கிடப் போதுமானவையாகும்.



‘விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்’ என்று (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பும் நிறைவேறியுள்ளது. அரசாங்கமே சிவப்பு விளக்குப் பகுதியை ஏற்படுத்துவதும், அன்னியப் பெண்களுடன் உறவு கொள்ளும் போது ஆணுறை பயன்படுத்துங்கள் என்றும் பண்பாடு மிக்க இந்தியா போன்ற நாடுகளே விளம்பரம் செய்கின்றனவென்றால் விபச்சாரம் எந்த அளவுக்கு பெருகிப் போயுள்ளது என்பதை உணரலாம். இந்தத் தீமைக்கு எதிராகப் போராடக் கடமைப்பட்ட பல அரபு நாடுகளில் கூட இந்தத் தீமை தலைவிரித்தாடும் போது அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது.



மக்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்ட அரசுகளே மதுபான விற்பனை செய்யத் துவங்கி விட்டனர். நாகரீகமான பெயர்களில் அறிமுகப் படுத்தப்படும் உயர்ரக அன்னிய மதுவுக்கு மக்கள் அடிமைப்பட்டுவருவதும் மறுக்க முடியாத உண்மைகள்.



பொறுப்புக்கள் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படுவதும், அப்பொறுப்புக்களில் அவர்கள் நாணயமின்றி நடந்து கொள்வதும் அன்றாடம் மனித சமுதாயம் காணக்கூடியவை தான். இதுவும் கூட அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டது என்பதை உறுதிப்படுத்தும் நிலையாகும்.



நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு என்று நபியவர்கள் கூறியபோது எவ்வாறு பாழ்படுத்தப்படும் என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கும் போது அந்த நாளை எதிர்நோக்கு’ என்று விடையளித்தார்கள். (நூல்: புகாரி)



இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சமின்றி – உலகத்து ரிக்கார்டுகளை சரி செய்து – ஏமாற்றி அபகரித்துக் கொண்டவர்களை இன்றளவும் நாம் காண்பது அந்த நாளுக்கு எவ்வளவு நெருக்கமாகி விட்டோம் என்பதை தெளிவாக்குகின்றது.



இன்றைய அரபுகள் அடைந்துள்ள பொருளாதார உயர் நலை 200 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்க்கக் கூட இயலாததாகும். அவர்கள் வழங்கும் ஸகாத்தைப் பெறக்கூட அங்கே மக்களில்லை. ஸகாத்தை வழங்குவதற்காக ஏழை நாடுகளை அவர்கள் தேடிச் செல்லும் நிலையையும் நாம் காண்கிறோம். எதற்கும் உதவாத பாலை நிலம் என்று உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட அந்த பிரதேசத்தில் சோலைகள் உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மாறுதலும் கூட அந்த நாள் நெருங்கி விட்;டது என்பதற்கான அடையாளமே.



செல்வம் பொங்கிப் பிரவாகித்து அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலை ஏற்படும் வரையிலும் அரபுப் பிரதேசம் நதிகளும் சோலைகளும் கொண்டதாக மாறும் வரையிலும் அந்த நாள் ஏற்படாது (நூல்: முஸ்லிம்) என்ற நபியவர்களின் முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கின்றது.



காலம் வெகுவேகமாக ஓடுவதும் இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. மனிதனின் விஞ்ஞான அறிவு வளர்ந்து அவன் கண்டுபிடிக்கும் நவீன சாதனங்களால் காலம் மிகவும் சுருங்கி விட்டதைக் காண்கிறோம்.



ஒருவாரம் பயணம் செய்யும் தூரம் ஒரு நாளில் சர்வசாதாரணமாகக் கடக்கப்படுகின்றது. ஒரு வாரத்தில் செய்யப்படத் தக்க வேலைகள் ஒரு நாளில் செய்து முடிக்கப் பட சாதனங்கள் இன்று உள்ளன. உலகில் எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகள் அதே நேரத்தில் முழு உலகையும் எட்டி விடுகின்றன. இத்தகைய முன்னேற்றங்களும் கூட அந்த நாள் சமீபித்து வருகின்றது என்பதற்கான அடையாளமே.



காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒருவருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும், (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு வினாடி போன்று ஆகும் என்பதும் நபியவர்கள் காட்டிய அடையாளம். (நூல்: திர்மிதி)



மனிதன் மட்டுமே பேச இயலும் என்ற நிலைமாறி ஒலி நாடாக்களும் கூட பேசுகின்ற அளவுக்கு மனிதன் அறிவில் முன்னேறி விட்டான். ‘சாட்டையின் ஓரமும் செருப்பின் வாரும் மனிதனிடம் பேசும் வரை அந்த நாள் வராது’ என்பதும் நபியவர்களின் முன்னறிவிப்பு. (நூல்: திர்மிதி)



நேரடியாக பேசும் என்று அர்த்தம் கொண்டால் அந்த நிலை இன்னும் ஏற்படவில்லை. செருப்பு வாராகப் பயன்படும் பொருட்கள் கூட ஒலி நாடாக்களாக மனிதனிடம் பேசும் என்று பொருள் கொண்டால் அந்த நிலையை மனிதன் அடைந்து விட்டான்.



இப்படி பல அடையாளங்கள் வந்து விட்டன என்றாலும் அந்த நாள் எவ்வளவு நெருக்கத்தில் உள்ளது என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. ‘அந்த நாள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு நெருக்கமாக வரும் போது சில மகத்தான அடையாளங்கள் நிகழவுள்ளன. அந்த அடையாளங்கள் தோன்றி விட்டால் அந்த நாள் எவ்வளவு சமீபத்தில் உள்ளது என்று முடிவு செய்து விடலாம்.



இதுவரை தோன்றியிராத விரைவில் தோன்றவிருக்கின்ற அந்த அடையாளங்களைத் தான் முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த அடையாளங்களை காணும் போது அவற்றை எதிர் கொள்ள வேண்டிய விதத்தில் எதிர் கொள்ளத் தவறினால் நமது ஈமான் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே சமுதாயத்திற்கு எச்சரிக்கையாக உள்ள அந்த அடையாளங்கள் அனைத்தையும் இனி காண்போம்.

0 comments:

Post a Comment