Post image for அநீதம் இழைப்போர்
நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18)
    இறைவனின் கட்டளைகளை மீறி அவனுக்கு மாறுசெய்தோர் விசாரிக்கப்படுவது போல் மனிதர்களுக்கு அநீதி இழைத்தவர்களும் விசாரிக்கப்படுவார்கள். இதன் காரணமாகத்தான் ‘யவ்முல் ஃபஸ்ல்’ நியாயத்தீர்ப்பு நாள் என்று இங்கே இறைவன் குறிப்பிடுகிறான்.
    இறைவனுக்கு செய்யும் கடமைகளில் தவறியது, மனிதனுக்குச் செய்யும் கடமைகளில் மறந்தது ஆகிய இரண்டு குற்றங்களைப் பற்றியும் எவ்வாறு விசாரணை நடைபெறும்? எவ்வாறு தீர்ப்பு வழங்கப்படும்? என்று நபி (ஸல்) விளக்கமாகக் கூறியுள்ளனர்.
    யாரேனும் தம் சகோதரர்களுக்கு மானம் அல்லது பொருட்கள் சம்பந்தமாக அநீதி இழைத்திருந்தால் தங்கக்காசுகளோ, வெள்ளிக் காசுகளோ பயனளிக்காத நாள் வரும் முன் இன்றே பாதிக்கப்பட்டவரிடம் பரிகாரம் தேடிக் கொள்ளட்டும். இவரிடம் ஏதேனும் நல்லறம் இருந்தால் இவர் செய்த அநீதியின் அளவுக்கு அந்த நல்லறம் எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும். இவரிடம் நன்மைகள் ஏதுமில்லாவிட்டால் இவரால் பாதிக்கப்பட்டவரின் தீமைகள் எடுக்கப்பட்டு இவர்மேல் வைக்கப்படும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
    (அனைத்தையும்) இழந்தவன் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று நபி (ஸல்) கேட்டனர். ‘யாரிடம் காசோ ஏனைய சொத்துக்களோ இல்லையோ அவர்தான்’ என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘இழந்தவன் யாரெனில்’ தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய கடமைகளை நிறைவேற்றிவிட்டு ஒருவனைத் திட்டியவனாக இன்னொருவன் மேல் அவதூறு கூறியவனாக மற்றொருவனின் பொருளைச் சாப்பிட்டவனாக வேறொருவனின் இரத்தத்தை ஓட்டியவனாக, இன்னொருவனை அடித்தவனாக மறுமைநாளில் வருவான். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவனுக்கும் இவனது நன்மைகள் வழங்கப்படும். கணக்குத் தீர்வதற்கு முன்னால் இவனது நன்மைகள் முடிந்து விட்டால் பாதிக்கப்பட்டவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவன் மேல் வீசப்படும். பின்னர் நரகத்தில் இவன் வீசப்படுவான்’ என்று விளக்கினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)
    (உங்களால் அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு) உரிய கடமைகள் மறுமை நாளில் நீங்கள் நிறைவேற்றுவீர்கள். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆடு (முட்டியதற்காக) கணக்குத் தீர்க்கப்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)
    ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் முன்னால் வந்து அமர்ந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சில அடிமைகள் உள்ளனர். அவர்கள் என்னை நம்புவதில்லை. எனக்கு மாறு செய்கின்றனர். துரோகம் செய்கின்றனர். எனவே அவர்களை நான் அடிக்கிறேன் திட்டுகிறேன். (மறுமையில்) அவர்களுடன் எனது நிலை எவ்வாறு இருக்கும்?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘கியாமத் நாளில் அவர்கள் உனக்குச் செய்த மாறுபாடு, துரோகம் ஆகியவையும் அவர்களைத் தண்டித்ததும் கணக்கிடப்படும். அவர்களின் குற்றங்களின் அளவுக்கு உன் தண்டனை இருந்தால் இரண்டும் சரிக்குச் சரியாகி விடும். உனக்கு லாபமோ நட்டமோ இராது. அவர்கள் செய்த குற்றங்களை விட நீ வழங்கிய தண்டனை குறைவாக இருந்தால் அது உனக்கு உபரியாக (லாபமாக) அமையும். அவர்களின் குற்றங்களை விட உன் தண்டனை அதிகமானதாக இருந்தால் அவர்களுக்காக உனது நல்லறங்கள் எடுக்கப்படும்’ என்று விடையளித்தார்கள். அப்போது அந்த மனிதர் அழுது புலம்பியவராக நகரலானார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘கியாமத் நாளில் நீதமான தராசுகளை நாம் நிறுவுவோம். எந்த ஆத்மாவுக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படாது. கடுகளவாக இருந்தாலும் அதையும் நாம் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்’ என்ற இறைவசனத்தை நீர் ஓதவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது அந்த மனிதர் ‘அல்லாஹ்வின் தூதரே! எனது அடிமைகளைப் பிரித்து விடுவது தான் எனக்கும் அவர்களுக்கும் நல்லதாக தெரிகின்றது. அவர்கள் அனைவரும் விடுதலை பெற்றார்கள் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன் என்று அவர் கூறினார். (அறிவிப்பவர்: அயிஷா (ரலி), நூல்: திர்மிதி)
    மனிதனுக்கு மனிதன் செய்த கொடுமைகள், தீங்குகள் பற்றி இவ்வளவு கடுமையாக நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர். எந்த மனிதனுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். அநீதி இழைக்கப்பட்டவரிடம் இவ்வுலகிலேயே பரிகாரம் செய்ய வேண்டும். அல்லது மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் செய்த நல்லறங்கள் யாவும் பயனற்றுப் போவதுடன் பிறரது தீமைகளையும் சுமக்கும் நிலை ஏற்படும். முஸ்லிம்கள் அந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    மனிதனுக்கு மனிதன் இழைத்த அநீதிகளைப் பற்றி தாட்சண்யமின்றி நீதி வழங்கும் இறைவன் தனக்கு மனிதன் செய்த பாவங்கள் விஷயத்தில் மிகவும் பெருந்தன்மையுடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்வான். அதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.
    ‘யார் துருவி விசாரிக்கப்படுகிறாரோ அவர் அழிந்தார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் ‘யார் தமது வலக்கரத்தில் பதிவேடு வழங்கப்படுகிறாரோ அவர் லேசாக விசாரிக்கப்படுவார்’ என்று அல்லாஹ் கூறுகிறானே என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அந்த விசாரணை மேலோட்டமாக எடுத்துக் காட்டப்படுவது தான். ஒவ்வொன்றாக விசாரிக்கப்படும் யாரும் அழிந்து போகாதிருப்பதில்லை’ என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
    மனிதன் செய்த ஒவ்வொரு செயலாக இறைவன் விசாரிக்க ஆரம்பித்தால் எவ்வளவு பெரிய மகான் என்றாலும் வெற்றி பெற முடியாது. ஆனால் இறைவன் அவ்வாறு செய்யாமல் மேலோட்டமாகவே விசாரணை செய்து அடியார்களுக்குக் கருணை காட்டுவான்.
    அடியான் முதன் முதலில் தொழுகை பற்றியே விசாரிக்கப்படுவான். அது சரியாக இருந்தால் வெற்றியடைந்து விட்டான். அது சரியாக இல்லாவிட்டால் அவன் நஷ்டமடைந்து விட்டான். கடமையான தொழுகைகளில் ஏதும் குறைவு இருந்தால், என் அடியானிடம் உபரியான தொழுகை ஏதுமுள்ளதா? என்று கவனியுங்கள் என்று இறைவன் கூறுவான். அந்த உபரியான தொழுகை மூலம் கடமையான தொழுகையில் ஏற்பட்ட குறை நிவர்த்திக்கப்படும். ஏனைய நல்லறங்களும் இவ்வாறே என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: திர்மிதி, நஸயி)
    எப்படியாவது அடியானை சொர்க்கத்திற்கு அனுப்ப வழி இருக்கிறதா என்றே வல்ல இறைவன் கவனிக்கிறான் என்பதை இந்த ஹதீஸ் மூலம் அறியலாம்.
    மூமின் இறைவனுக்கு அருகில் கொண்டு செல்லப்படுவார். இறைவன் தனது நிழலை அவன் மேல் போடுவான். மூமின் செய்த குற்றங்களைக் குறிப்பிட்டு இன்னின்ன பாவங்கள் செய்ததை நீ அறிவாயா? என்று இறைவன் கேட்பான். இறைவா! நான் அறிவேன், நான் அறிவேன் என்று மூமின் கூறுவார். அப்போது இறைவன், ‘அக்குறைகளை உலகில் நான் மறைத்தேன் இன்று அவற்றை மன்னித்து விட்டேன் எனக் கூறுவான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
    மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் மனிதனை விடுதலை செய்வான். அவனது குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட தொனண்ணுற்றி ஒன்பது ஏடுகள் விரிக்கப்படும். ஒவ்வொரு ஏடும் பார்வை எட்டும் தொலைவுடையதாக இருக்கும். இவற்றில் எதையேனும் மறுக்கிறாயா? நம்பகமான எனது எழுத்தர்கள் உனக்கு அநியாயம் செய்து விட்டார்களா? என்று இறைவன் கேட்பான். ‘இல்லை இறைவா!’ என்று அவன் கூறுவான். அக்குற்றங்களுக்கு உன்னிடம் சமாதானம் ஏதும் உள்ளதா? என்று இறைவன் கேட்பான். ‘இல்லை இறைவா!’ என்று அவன் கூறுவான். அப்போது இறைவன் ‘நிச்சயமாக உனக்கு என்னிடத்தில் நல்லதே கிடைக்கும், இன்று எந்த அநீதியும் கிடையாது’ என்று கூறுவான். பிறகு சிறிய துண்டுச் சீட்டு ஒன்று வெளிப்படுத்தப்படும். அதில் ‘அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹுவ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸுலுஹு’ என்று எழுதப்பட்டிருக்கும். ‘உனது எடையைப்பார்’ என்று இறைவன் கூறுவான். அதற்கு அம்மனிதன் ‘இறைவா! அந்தத் துண்டுச்சீட்டு அந்த ஏடுகளுக்கு எப்படி நிகராகும்?’ என்று கேட்பான். உனக்கு எந்த அநியாயமும் செய்யப்படாது என்று இறைவன் கூறுவான். அந்த ஏடுகள் அனைத்தும் ஒரு தட்டிலும் அந்தத் துண்டுச் சீட்டு இன்னொரு தட்டிலும் வைக்கப்படும். ஏடுகள் உயர்ந்து துண்டுச்சீட்டு வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கும். அல்லாஹ்வின் திருநாமத்திற்கு நிகராக ஏதுவும் ஆகாது என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி), நூல்: திர்மிதி)
    கியாமத் நாளில் ஒரு மனிதன் கொண்டு வரப்படுவான். இவனது சிறு குற்றங்களை இவனிடம் எடுத்துக் காட்டுங்கள். பெருங்குற்றங்களைக் காட்டாதீர்கள் என்று வானவர்களுக்குக் கூறப்படும். அவ்வாறே அவனது சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்படும். இன்னின்ன நாளில் இன்னின்ன குற்றத்தை நீ செய்தாயா? இன்னின்ன நாளில் இன்னின்ன குற்றத்தை நீ செய்தாயா? என்று கேட்கப்படும். மறுக்க முடியாமல் அவன் ‘ஆம்’ என்பான். பெரும் பாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டால் என்னவாகும் என்று அஞ்சிக் கொண்டிருப்பான். அப்போது அவனிடம் ‘உனது ஒவ்வொரு தீமைக்கு பதிலாக ஒரு நன்மை உனக்கு உண்டு’ என்று கூறப்படும். அதற்கு அம்மனிதன் ‘இறைவா! இன்னும் எத்தனையோ குற்றங்கள் செய்துள்ளேன் அவற்றை இங்கே நான் காணவில்லையே! என்பான். இதை நபி (ஸல்) கூறிவிட்டு தம் கடவாய் பற்கள் தெரியுமளவிற்கு சிரித்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் கிபாரி (ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)
  islamiyadawa.com
Post image for ரமழானும் நோன்பும்
உண்மை முஸ்லிம் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நோன்பு நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ஈமானுடனும் நன்மையை நாடியும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    அவர் நோன்பின் மாண்புகளைப் புரிந்து நோன்புக்கு பொருத்தமற்ற, நன்மையை அழித்துவிடும்படியான அனைத்து தவறுகளிலிருந்தும் தனது நாவு, கண் மற்றும் அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வார்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் அருவருப்பான பேச்சுகளைப் பேசவேண்டாம், கூச்சலிட வேண்டாம். எவரேனும் திட்டினால் அல்லது சண்டையிட்டால் “நான் நோன்பாளி’ என்று அவர் கூறட்டும்.” (ஸஹீஹுல் புகாரி)
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் பாவமான சொல், செயலிலிருந்து விலகிக்கொள்ளவில்லையோ அவர் உணவு, பானத்தைத் தவிர்ப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத்தேவையுமில்லை.” (ஸஹீஹுல் புகாரி)

   தன்னை நிழலிட்டுள்ள இம்மாதம் ஏனைய மாதங்களைப் போன்றதல்ல. இது நோன்பின் மாதம். நோன்பு அல்லாஹ்வுக்குரியது. அவனே கூலி கொடுக்கிறான். எவ்வித தேவையுமற்ற உபகாரியான அல்லாஹ்வின் கூலி மகத்தானது, பூரணமானது, விசாலமானது என்ற உறுதியான நம்பிக்கை நோன்பாளியின் மனதிலிருந்து மறைந்துவிடக் கூடாது.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமுடைய மகனின் அனைத்து நற்செயலுக்கும் பத்திலிருந்து இரட்டிப்பான எழுநூறு மடங்குவரை நன்மையளிக்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: “நோன்பைத்தவிர, அது எனக்குரியது. நானே அதற்கு கூலிக் கொடுக்கிறேன். அவன் மனோ இச்சையையும் உணவையும் எனக்காகவே விலக்கினான்.” நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு நோன்பு திறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி; மறுமையில் தனது இறைவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி. நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசத்தைவிட மணமிக்கது” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    இதனால் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம் பரக்கத் பொருந்திய இம்மாதத்தின் நேரங்களை பொன்னாகக் கருதி, அதன் பகல் காலங்களில் நோன்பு, தொழுகை, குர்ஆன் ஒதுதல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களிலும் இரவுகளில் தஹஜ்ஜுத் தொழுகை மற்றும் துஆவிலும் ஈடுபடவேண்டும்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி)
    நபி (ஸல்) அவர்கள் ரமழானில் மற்ற காலங்களைவிட மிக அதிகமாக வணக்கம் புரிபவர்களாக இருந்தார்கள். அதிலும் ரமழானின் இறுதிப் பத்தில் மிக அதிகமாக வணக்கம் புரிந்து வந்தார்கள்.
    அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: “நபி(ஸல்) அவர்கள் மற்ற மாதங்களைவிட ரமழானில் அதிகமாக அமல் செய்வார்கள். குறிப்பாக ரமழானின் ஏனைய நாட்களைவிட பிந்திய பத்து நாட்களில் அதிகம் அமல் செய்வார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்தில் நுழைந்துவிட்டால் முழு இரவும் வணங்குவார்கள், குடும்பத்தினரையும் விழிக்கச் செய்வார்கள், தங்களது ஆடையை இறுக்கக் கட்டி உற்சாகத்துடன் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு ஏவுவார்கள். “ரமழானின் கடைசிப் பத்தில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) என்று கூறி அந்த இரவில் நின்று வணங்க ஆர்வ மூட்டுவார்கள். மேலும் கூறினார்கள்: “ரமழானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)
    மேலும் கூறினார்கள்: “எவர் லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குவாரோ அவரது முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    இதனால்தான் மகத்துவமிக்க இம்மாதம் தூய்மையான வணக்கங்கள் புரிவதற்கு ஏற்ற மாதமாகத் திகழ்கிறது. இம்மாத இரவுகளில் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, பஜ்ரு நேரம் உதயமாவதற்கு சற்றுமுன் சில கவளங்களைச் சாப்பிட்டுவிட்டு, படுக்கைக்குச் சென்று ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி, பஜ்ருத் தொழுகையைத் தவறவிடுவது முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற செயலாகும்.
    இறையச்சமுள்ள, மார்க்க நெறிகளை அறிந்த முஸ்லிம் இஷா தொழுகையை முடித்துவிட்டால் விழித்திருக்காது உறங்கச் செல்ல வேண்டும். சிறிது நேர தூக்கத்திற்குப் பிறகு இரவுத் தொழுகைக்காக எழுந்து தொழுதுவிட்டு ஸஹ்ருடைய உணவை உண்ண வேண்டும். பின்னர் பஜ்ருத் தொழுகையை நிறைவேற்ற பள்ளியை நோக்கிச் செல்லவேண்டும்.
    ஷஹர் உணவில் மிக அதிகமான நன்மைகள் இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை வலியுறுத்தி, “ஸஹர் செய்யுங்கள்! நிச்சயமாக ஸஹர் உணவில் பரக்கத் இருக்கிறது” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    காரணம் என்னவெனில், ஸஹர் நேரத்தில் விழித்தெழுவது இரவில் நின்று வணங்க வாய்ப்பை எற்படுத்தும். பஜ்ரு தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் பள்ளியை நோக்கி நடக்கச் செய்வதுடன், நோன்பு நோற்க உடல் வலிமையையும் தருகிறது. இதை நபி (ஸல்) அவர்கள் தானும் செய்து தனது தோழர்களுக்கும் பயிற்சியளித்தார்கள்.
    ஜைது இப்னு ஸப்பித் (ரழி) அவர்கள் “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் உணவை உண்டோம். பிறகு தொழுகைக்குச் சென்றோம்” என்று கூறினார்கள். ஒருவர் “அந்த இரண்டுக்கும் மத்தியில் எவ்வளவு நேரம் (இடைவெளி) இருந்தது?” என்று கேட்டார். “50 ஆயத்துகள் (ஒதும் நேரம்)” என ஜைது (ரழி) பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
     இறையச்சமுடைய முஸ்லிம் ரமழான் அல்லாத மாதங்களிலுள்ள நபிலான நோன்புகளைத் தவறவிடக்கூடாது. அரஃபா நாள் (துல்ஹஜ் பிறை 9) மற்றும் முஹர்ரம் பிறை 9,10 போன்ற காலங்களில் நோன்பு நோற்பது பாவங்களைத் துடைத்தெறியும் சிறந்த அமலாகும்.
    இது குறித்த நபிமொழிகள்:
அபூ கதாதா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் அரஃபா நாளின் நோன்பைப்பற்றி கேட்கப்பட்டபோது, “அது கடந்த ஒரு வருடம் மற்றும் வரக்கூடிய ஒரு வருடப் பாவங்களுக்கு பரிகாரமாகும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
    இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளின் நோன்பை நோற்றார்கள்; அதைப் பிறருக்கும் ஏவினார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நாளின் நோன்பைப் பற்றி கேட்கப்பட்ட போது: “அது சென்றுபோன வருடத்துக்கு பரிகாரமாகும்” எனக் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
    இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நான் வரும் ஆண்டு உயிருடன் இருந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
     அவ்வாறே ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதும் சிறந்த அமலாகும். அந்த நோன்பின் மாண்பைப்பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் தொடர்ச்சியாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது முஸ்தஹபாகும். இது குறித்து அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரக்அத் ளுஹா தொழுவது மற்றும் தூங்கச் செல்லுமுன் வித்ரு தொழுவது என்ற மூன்று விஷயங்களை எனது நேசராகிய நபி (ஸல்) அவர்கள் எனக்கு வஸிய்யத் செய்தார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    அபூதர்தா (ரழி) அவர்கள் கூறியதாவது: “எனது நேசர் எனக்கு மூன்று விஷயங்களை உபதேசம் செய்தார்கள். நான் மரணிக்கும்வரை அதை விடவே மாட்டேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ளுஹா தொழுவது இன்னும் வித்ரு தொழாதவரை நான் தூங்காமலிருப்பது.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வருடம் முழுவதும் நோற்பது போன்றாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்ட மூன்று நாள்கள் என்பது ஒவ்வொரு மாதத்தின் பிறை 13, 14, 15வது நாட்களைக் குறிக்கும். அதனை அய்யாமுல் பீழ் என்று கூறப்படும். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் எந்த நாட்களையும் மூன்று நோன்புக்காக குறிப்பாக்காமல் நோற்றதற்கான ஆதாரங்களும் உள்ளன.
    முஅதத்துல் அதவிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பிருந்தார்களா?” என்று கேட்டேன். அன்னையவர்கள் “ஆம்!” என்றார்கள். “மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்றார்கள்?” எனக் கேட்டேன். “மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்பது என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை” என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
thanks to:-  http://www.readislam.net/portal/archives/6142
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்
நன்றி:தைக்கால்.காம்
உடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்!

ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக் குறையில்லை. ஆனாலும் அவர் உற்சாகமாகவே இல்லை. எப்போதும் களைத்துப் போய் சோர்வாகவே இருக்கிறார். போதாததற்கு, சென்ற வாரம் அவருக்குச் சர்க்கரை நோய் இருப்பதாகக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார் அவரது குடும்ப டாக்டர். 

ஏற்கெனவே ஒரு தடவை அவரை ஹார்ட் அட்டாக் வேறு லேசாக தட்டிப் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறது. நீங்கள் உங்கள் எடையைக் குறைத்தேயாக வேண்டும். உங்களின் உடல் பருமன் தான் உங்களுக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் என்றார் டாக்டர். 

32 வயது ஜனனி, 80 கிலோ எடை இருந்தார். அதனால் உடனே எடையைக் குறைத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். டி.வி. விளம்பரங்களைப் பார்த்து இடுப்பில் பெல்ட் கட்டிக் கொள்வது போன்ற சுலபமான உடல் இளைப்பு வழிகளைத் தேடிப் போனார். எந்தப் பலனும் இல்லை. பட்டினி கிடந்தால் உடல் இளைத்துவிடும் என்று நினைத்து, உடம்பை அடிக்கடி பட்டினி போட ஆரம்பித்தார். அதன் விளைவு மோசமாக இருந்தது. அதனால் பட்டினி கிடப்பதை விட வேண்டிய நிர்ப்பந்தம்.