முஹர்ரம் 10ம் நாள் மகிழ்ச்சியா..? துயரமா...?

, , No Comments
இஸ்லாமிய வரலாற்றில் நேர் எதிரான இரு சம்பவங்கள் ஒரே நாளில் நடந்துள்ளது நமது கவனத்திற்குரியது.

முஸ்லிம்களில் உள்ள ஷியா பிரிவினர் முஹர்ரம் மாதம் 10ம் நாள் மிகத் துக்ககரமான நாளாக ஆக்கிக்கொண்டு, அன்றைய தினம் தம்மைத்தாமே வருந்திக்கொள்ளக்கூடிய மிக மோசமான செயலில் இறங்குவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம், இதே நாளில்தான் நபி(ஸல்) அவர்களின் பேரரான ஹுசைன்(ரலி) அவர்கள் கர்பலாவில் நடந்த போரில் ஷஹீதாக்கப்படுகிறார்கள். அது மிக சோகமான ஒரு சம்பவம்தான். இந்நிகழ்ச்சி நடந்த இதே நாளில்தான் இதைவிட முக்கியமான ஒரு சம்பவம் நடக்கிறது. ஃபிர்அவ்ன் என்ற கொடியவனுக்கு எதிராக நபி மூஸா(அலை) அவர்கள் செய்த பிரச்சாரம் ஒரு முடிவுக்கு வந்து அவனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பனு இஸ்ரவேலர்களைக் கூட்டிக் கொண்டு எகிப்தை விட்டு வெளியேறுகிறார்கள். விபரம் அறிந்த ஃபிர்அவ்ன் தம் படையுடன் பின்தொடர்ந்து மூஸா(அலை) அவர்களை முற்றுகையிடுகிறான். அந்தச் சந்தர்ப்த்தில் உலகிலேயே மிகப் பெரிய அற்புதம் ஒன்று நிகழ்கிறது. கடல் இரண்டாகப் பிளந்து இரண்டு மலைகள் போல் எழுந்து நின்று விடுகின்றது. அந்த வழியே மூஸா(அலை) அவர்களுக்கு வழிவிட்ட அந்தக் கடல், ஃபிர்அவ்னும் அவனுடைய சேனைகளும் உள்ளே இறங்கியதும் அவர்களைச் சுருட்டி விழுங்கி விடுகிறது. இவை அனைத்தும் இறைவனின் ஏற்பாட்டின்படி நடக்கின்றன.

இந்த நாளைப் புகழந்து நன்றி செலுத்தும்விதமாக நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்து பிறரையும் நோன்பு நோற்கச் சொன்ன விவரம் புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஒரே நாளில் இந்த இரு நிகழ்ச்சிகளை எந்த அடிப்படையில் தீர்மானிப்பது?

இந்த இரண்டு சம்பவங்களில் அன்றைய நிகழ்வையும் இன்றைய நிகழ்ச்சிகளையும் அலசுகின்றது கட்டுரை.



முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றாலே பல்வேறு அனர்த்தங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள மூடர்கள் பலரால் அரங்கேற்றப்படுவதை பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை "பஞ்சா" என்ற பெயரில் முஸ்லிம்களில் ஷியாக் கொள்கைக்காரர்கள் அனைத்து மாநிலங்களிலும் முழுவதும் செய்து வருகின்றனர்.

முஹர்ரம் மாதம் 10 ஆம் நாளை கோலாகலமாகக் கொண்டாடுவது ஷியாக்களின் வழக்கம். முஹர்ரம் பண்டிகை என்னும் பெயரில் ஷியா முஸ்லிம்கள் இப் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்;.

அன்றைய தினம் சில மூடர்கள் பக்திப் பரவசத்துடன் யாஅலி. யாஹுஸைன் எனன்ற கோஷத்துடன் தீயில் நடப்பதும், புலி வேஷம் போட்டு ஆடுவதும், என்று இன்னும் பல்வேறு அநாச்சாரங்களையும் அரங்கேற்றுகின்றனர்.
பஞ்சா என்பதற்கு பாரசீக மொழியில் ஐந்து என்று பொருள். நபி(ஸல்), அலி (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன்(ரலி), ஹூஸைன்(ரலி), ஆகிய ஐந்து பேருக்கும் தெய்வீகத் தன்மை இருப்பதாக நம்புவது ஷியாக்களின் கொள்கை. இதன் அடையாளமாகத் தான் பஞ்சா எடுக்கும் மாபாதகச் செயலை இந்த பஞ்சமா பாதகர்கள் செய்கிறார்கள்.

மும்பை, குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் மேலப்பாளையம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும் இப்பண்டிகையில்(?) ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இப்பண்டிகை(?) கொண்டாடப்பட்டு வருகிறது. முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்கள் ரொம்ப அதிகம்.

முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல், ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.

முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும்.
1) முஹம்மது (ஸல்) அவர்கள்,
2) அவர்களின் திருமகளார் பாத்திமா (ரலி),
3) அலி (ரலி),
4) ஹஸன் (ரலி),
5) ஹுஸைன் (ரலி)
என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும்.

உருது மற்றும் ஹிந்தியில் பாஞ்ச் என்றால் ஐந்து என்று எல்லோரும் அறிவோம். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சா என்ற பெயர் வந்தது.



இந்த இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி)யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுகிறார். நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீஃபாக்கள் ஆட்சி நடத்தினார்கள் அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும்.

குறிப்பாக இப் பஞ்சா ஊர்வலத்தில் மாரடித்தல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை முஸ்லிம்கள் செய்கிறார்கள்.

மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டு அரசாங்கம் இந்த பஞ்சா ஊர்வலத்தைத் தடை செய்துள்ளது. இதுபோன்ற செயல்களால் மதக்கலவரங்கள் ஏற்படுகின்றன

ஷியா பிரிவினர் செய்யும் இந்தக் காரியங்களில் எதுவொன்றும் இஸ்லாத்தை சார்ந்ததல்ல. போட்டோக்களில் காணப்படும் இந்த இரத்தக் காணிக்கை மடமையின் உச்சக்கட்டமாகும். மார்க்கம் பற்றிய சாதாரண அறிவுள்ளவர்களுக்கு கூட இந்த கொடுமை எல்லைக் கடந்த அறியாமை என்பது தெரியும். இந்தக் காரியங்களில் ஈடுபடுபவர்கள், இந்தக் காரியத்தை செய்யும் படி தூண்டுபவர்கள் படிப்பறிவற்ற, சிந்தனையற்ற, இஸ்லாமிய தெளிவற்ற, வரலாற்று ஆய்வற்ற மிகக் கீழான அடையாளங்களாவார்கள்.

0 comments:

Post a Comment