வீராதி வீரர் அலி அக்பர் ரலியல்லாஹு அன்ஹு

, , No Comments
அலி அக்பர் ரலியல்லாஹு அன்ஹு ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இரண்டாவது மகனாவார்கள். அவர்கள் உருவ அமைப்பில் தம் பாட்டனார் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களை ஒத்தியிருந்தனர்.

கர்பலாவில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரர் அப்பாஸ் இறந்ததும், இவர்கள் தம் தந்தையாரின் அனுமதி பெற்று போருக்குப் புறப்பட்டனர். ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், மகனாருக்காக துஆச் செய்து குதிரை மீதமர்த்தி அனுப்பி வைத்தனர். வீராவேசத்துடன் மின்னலாய் பரந்த அலி அக்பர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "நான் அலியின் மகன் ஹுசைனின் மகன் அலியாவேன்" என்று சப்தமிட்டுக் கொண்டே சென்று எதிரிகளுள் இருபது பேர்களுக்கு அதிகமானோரை வெட்டி வீழ்த்தினர்.

கடுமையான வெயில், தாக மேலிட்டால் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது அவர்கள் தமக்கு நேரிட்ட தாகத்தின் கடுமையை தம் தந்தையிடம் எடுத்துரைக்க, ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் நாக்கை நீட்டி அதிலுள்ள நீரை மகனைப் பருகுமாறு செய்தார்கள். அதனைத் தவிர்த்து அவர்களுக்கு அப்பொழுது வேறு வழி தெரியவில்லை.

அதன் பின்னர் அலி அக்பர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீண்டும் களத்தில் குதித்தார்கள். அப்பொழுது எதிரி ஸினான் இப்னு அனஸ் என்பவனது ஈட்டி அவர்களின் முதுகில் பாய்ந்த்தது. குதிரையிலிருந்து கீழே விழுந்த அவர்கள், தந்தை ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து, "அருமை தந்தையே! என் பாட்டனார் முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் சுவனத்து பானத்துடன் என்னை அழைக்கிறார்கள்!" என்று கூறிய பின்னர் உயிர் விட்டார்கள். அப்பொழுது அவர்களுக்கு வயது பதினெட்டு.

தம் மகனின் உடலை தம் கூடாரத்திட்குக் கொண்டுவந்த ஹழ்ரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைவனின் முன் மண்டியிட்டு, "யா அல்லாஹ்! என்னிடம் ஒரே ஒரு அலி அக்பர்தாம் இருந்தார். அவரையும் உன்னுடைய பாதையில் நான் தியாகம் செய்து விட்டேன். இன்னும் நூறு அலி அக்பர்கள் எனக்கு மக்களாக இருப்பினும் அவர்களையும் நான் உனது பாதையில் தியாகம் செய்வேன்" என்று கூறிக் கண்ணீர் சிந்தினர். 

0 comments:

Post a Comment