, , No Comments

மிஃராஜ்

Post image for மிஃராஜ்


நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒருபுறம் வெற்றி, மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்று கொண்டிருந்தது. நம்பிக்கை நட்சத்திரங்கள் வெகு தூரத்தில் மின்னத் துவங்கின. அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயணம் நடைபெற்றது. இதையே இஸ்லாமிய வரலாற்றில் ”மிஃராஜ்” என அறியப்படுகிறது.

மிஃராஜின் நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பதில் பல கருத்துகள் உள்ளன.
1) நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் தப்ரி ஆமோதிக்கிறார்கள்)
2) நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் நவவியும் இமாம் குர்துபீயும் உறுதிப்படுத்துகிறார்கள்)
3) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27வது இரவில் நடைபெற்றது.
4) ஹிஜ்ராவிற்கு 16 மாதங்களுக்கு முன், அதாவது நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்றது.
5) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டு, இரண்டரை மாதங்களுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.
6) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் நடைபெற்றது.


இந்த கருத்துகளில் முதல் மூன்று கருத்துகள் சரியல்ல. ஏனெனில், அன்னை கதீஜா (ரழி) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில்தான் இறந்தார்கள். அன்னார் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன் மரணித்து விட்டார்கள். தொழுகை மிஃராஜில்தான் கடமையாக்கப்பட்டது. ஆகவே, மேற்கூறப்பட்ட முதல் மூன்று கருத்துகள் சரியானவையாக இருக்க முடியாது.

அடுத்த மூன்று கருத்துகளில் எந்த கருத்து மிக ஏற்றமானது என்பதற்குரிய சரியான சான்றுகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அத்தியாயம் ‘இஸ்ரா’வின் கருத்துகளை நன்கு ஆய்வு செய்யும்போது ‘மிஃராஜ்’ சம்பவம் மக்கா வாழ்க்கையின் மிக இறுதியில்தான் நடைபெற்றது என்பது தெரியவருகிறது.

இந்நிகழ்ச்சியின் விளக்கங்களை ஹதீஸ் (நபிமொழி) கலையின் வல்லுனர்கள் விரிவாகக் கூறியிருப்பதை இங்கு நாம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்:

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை ‘புராக்’ என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். ‘புராக்’ எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.

பிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல் கதவைத் திறக்கக்கோரவே அவர்களுக்காக கதவு திறக்கப்பட்டது.

அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார்கள்.

அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில் நல்லோர்களின் உயிர்களை நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பித்தான்.

அவ்வாறே கெட்டவர்களின் உயிர்களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான்.

பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.

அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள்.

பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள்.

பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள்.

பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி வரவேற்றார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார்கள்.

”நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, ”எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவரின் சமுதாயத்தில் சொர்க்கம் செல்பவர்கள் எனது உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்”

என்று கூறினார்கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு இப்றாஹ்ீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள்.

ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

பிறகு ‘ஸித்ரதுல் முன்தஹ்ா’விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பழங்கள் ஹ்ஜர் நாட்டு பானைகளைப் போன்றும், அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன.

பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும், பிரகாசமும், பல நிறங்களும் சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது.

அல்லாஹ்வின் படைப்பினங்களில் எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து பைத்துல் மஃமூருக்கும்* அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார்கள். ஒருமுறை நுழைந்தவர்கள் மீண்டும் அங்கு வருவதில்லை.

பிறகு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது. பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார்கள்.

பிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார்கள். (சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர்கள் நெருங்கினார்கள்.

அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குப் பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான்.

 ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கினான்.

அவர்கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர்களை சந்தித்தார்கள்.

மூஸா (அலை)
”தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்” என்று கேட்க நபி (ஸல்) ”ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்” என்று கூறினார்கள்.

மூஸா (அலை) ”நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார்த்தார்கள். ஜிப்ரீல் ”நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள்” என்று கூறவே...

நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார்கள்.

அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக் குறைத்தான்.
திரும்பும்போது மூஸா (அலை) அவர்களைச் சந்திக்கவே அவர்கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற,

 நபி (ஸல்), அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான்.

மூஸா (அலை) நபி (ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்) அவர்களுமோ ”நான் எனது இறைவனிடம் திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன்.

என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டார்கள்.

அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்று விடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து ”நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு இலகுவாகும் ஆக்கிவிட்டீர்கள்” என்று கூறினான். (ஜாதுல் மஆது)

மிஃராஜில் நபி (ஸல்) அல்லாஹ்வை பார்த்தார்களா? என்பதில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்று இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறியபிறகு. இது விஷயத்தில் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் கருத்துகளையும் மற்ற அறிஞர்களின் கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.

இப்னுல் கய்யிம் (ரஹ்) இது விஷயத்தில் செய்திருக்கும் ஆய்வின் சுருக்கமாவது:

”நபி (ஸல்) அல்லாஹ்வை கண்கூடாக பார்க்கவில்லை. அவ்வாறு எந்த நபித்தோழரும் கூறவுமில்லை” என்பதாகும். ஆனால், இப்னு அப்பாஸ் (ரழி) மூலம் இரு அறிவிப்புகள் வந்துள்ளன. ஒன்று நபி (ஸல்) அல்லாஹ்வைப் பார்த்தார்கள். இரண்டாவது, நபி (ஸல்) அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள். எனவே, மற்ற நபித்தோழர்களின் முடிவுக்கும் இப்னு அப்பாஸின் கருத்துக்குமிடையில் முரண்பாடு இல்லை.

ஏனெனில், அல்லாஹ்வை நபி (ஸல்) பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவது உள்ளத்தால் பார்த்ததையே குறிப்பிடுகிறார்கள். மற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வை நபி (ஸல்) பார்க்கவில்லை என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை கண்ணால் பார்க்கவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகும்.

தொடர்ந்து இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்:

அத்தியாயம் நஜ்மில் ‘இறங்கினார், பின்னர் நெருங்கினார்’ என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கம் என்பது ஜிப்ரீல் நெருங்கியதையும் அவர் இறங்கியதையும் குறிக்கிறது. இவ்வாறுதான் ஆயிஷா, இப்னு மஸ்வூத் (ரழி) ஆகியோரும் கூறுகிறார்கள்.

குர்ஆனின் இவ்வசனத்தின் முன் பின் தொடரும் இக்கருத்தையே உறுதிபடுத்துகிறது. ‘மிஃராஜ்’ தொடர்பான ஹதீஸில் வந்துள்ள ‘தனா ஃபததல்லா’ என்பது அல்லாஹ் நெருங்கியதைக் குறிப்பிடுகிறது.

அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பற்றி ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகில் அவர் அவரைப் பார்த்தார் என்று ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் உள்ள வசனம் நபி (ஸல்) வானவர் ஜிப்ரயீலை அங்கு பார்த்ததையே குறிப்பிடுகின்றது.

நபி (ஸல்) ஜிப்ரயீலை அவரது முழு உருவத்தில் இருமுறை பார்த்தார்கள். ஒன்று பூமியிலும், மற்றொன்று ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகிலுமாகும்.

(இத்துடன் இப்னுல் கய்யிமின் கூற்று முடிகிறது.) (ஜாதுல் மஆது. மேலும் விவரங்களுக்கு பார்க்க, புகாரி 1 : 50, 455, 456, 470, 471, 481, 545, 550. 2 : 284. முஸ்லிம் 1 : 91-96)

நபி (ஸல்) அவர்களின் இருதயம் இப்பயணத்திலும் பிளக்கப்பட்டது என்று சில அறிவிப்புகளில் வந்துள்ளது. மேலும், இப்பயணத்தில் நபி (ஸல்) பலவற்றைக் கண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு பாலும், மதுவும் வழங்கப்பட்டது. நபி (ஸல்) பாலை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதற்கு ”நீங்கள் இயற்கை நெறிக்கு வழிகாட்டப்பட்டீர்கள்.

நீங்கள் மதுவை எடுத்திருந்தால் உங்களது சமுதாயத்தினர் வழிகெட்டிருப்பார்கள்” என்று கூறப்பட்டது.

ஸித்ரத்துல் முன்தஹ்ாவின் வேரிஇருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது.
இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும்.

இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும்.

நீல், ஃபுராத் நதிகளை நபி (ஸல்) பார்த்தது, ‘இவ்விரு பகுதிகளிலும் இஸ்லாம் பரவும்’ என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாக இருக்கலாம். (இரகசியங்களை அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.)

மாலிக்.

மேலும், செர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள்.

அனாதைகளின் சொத்துகளை அநியாயமாகப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய உதடுகள் ஒட்டகங்களின் உதடுகளைப் போன்று இருந்தது. அம்மிக் குழவிகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அவர்களது வாயில் தூக்கி எறியப்படவே அது அவர்களின் பின் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது.

வட்டி வாங்கி வந்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களது வயிறு மிகப் பெரியதாக இருந்ததால் அவர்கள் தங்களது இடங்களிலிருந்து எந்தப் பக்கமும் திரும்ப சக்தியற்றவர்களாக இருந்தனர்.

ஃபிர்அவ்னின் குடும்பத்தாரை நரகத்தில் கொண்டு வரப்படும்போது அவர்கள் இவர்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள் இவர்களை மிதித்தவர்களாகச் செல்வார்கள்.

விபசாரம் செய்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களுக்கு முன் கொழுத்த நல்ல இறைச்சித் துண்டும் இருந்தது.

அதற்கருகில் துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான மெலிந்த இறைச்சித் துண்டும் இருந்தது. அவர்கள் இந்த துர்நாற்றம் வீசும் இறைச்சித் துண்டையே சாப்பிடுகின்றனர். நல்ல கொழுத்த இறைச்சித் துண்டை விட்டுவிடுகின்றனர்.

பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள்.

இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது.
அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள்.

அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அருந்திவிட்டு மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள்.

அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), காலையில் மக்களுக்கு இப்பிரயானக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை என்பதற்குரிய மிகப்பெரிய ஆதாரமாக அமைந்தது.
(ஸஹீஹ்ுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்:

காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர்.

”உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள்.

அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள்.

நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

மக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக் கூறியபோது அபூபக்ர் (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களை ‘சித்தீக்’ (வாய்மையாளர்) என்று அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

இந்த வானுலகப் பயணம் நடைபெற்றதற்குரிய மகத்தான காரணத்தைப் பற்றிக் கூறும்போது மிக சுருக்கமாக ”நாம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே” என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹ்ம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பல்லியியிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான்.

(அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)

இது நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியாகும். பல இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்திருக்கிறான்.

இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம். (அல்குர்ஆன் 6 : 75)

நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றி,

(இவ்வாறு இன்னும்) நம்முடைய பெரிய அத்தாட்சிகளை உங்களுக்கு நாம் காண்பிப்போம். (அல்குர்ஆன் 20 : 23) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏன் அத்தாட்சிகளைக் காண்பித்தான் என்பதற்கு ”அவர் நம்மை உறுதிகொண்டவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காக”
என்ற காரணத்தைக் கூறுகிறான்.

இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்ததால் அவர்களது உள்ளத்திலிருந்த நம்பிக்கை மேன்மேலும் உறுதியடைந்தது. ஆகவே தான், அல்லாஹ்வின் பாதையில் பிறரால் சகித்துக்கொள்ள முடியாததை இறைத்தூதர்களால் சகித்துக்கொள்ள முடிந்தது.

உலகத்தின் எவ்வளவு பெரிய சக்தியாயினும் சரி. அது கொசுவின் இறக்கைக்குச் சமமாகவே அவர்களிடம் இருந்தது. சிரமங்களும் துன்பங்களும் எவ்வளவுதான் அவர்களுக்கு ஏற்பட்டாலும், அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.

இப்பயணத்தில் மறைந்திருக்கும் ஞானங்களையும் இரகசியங்களையும் மார்க்க சட்டங்களின் இரகசியங்களை பற்றி விவரிக்கும் நூல்களில் காணலாம்.

எனினும், இப்பயணத்தில் பல உண்மைகளும் யதார்த்தங்களும் நிறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்:

இந்த வானுலக பயண சம்பவத்தைப் பற்றி மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் 17:1லில் மட்டும்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இந்த ஒரு வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்களில் யூதர்களின் கெட்ட செயல்கள் மற்றும் குற்றங்களைப் பற்றி அல்லாஹ் விரிவாகக் கூறுகிறான். அதன் இறுதியில் இந்தக் குர்ஆன்தான் மிகச் சரியான வழிகாட்டுகின்றது என்று கூறுகிறான்.

இவ்வசனங்களை ஓதுபவர் மிஃராஜ் சம்பவம், யூதர்களின் அநியாயங்கள், குர்ஆனைப் பற்றிய புகழ்ச்சி, இவற்றுக்கிடையில் என்ன தொடர்பிருக்கிறது என யோசிக்கலாம். ஆம்! உண்மையில் ஆழமான தொடர்பிருக்கிறது. அதன் விளக்கமாவது:

முஹம்மது (ஸல்) நபியாக அனுப்பப்படுவதற்கு முன் யூதர்கள்தான் மனித சமுதாயத்தை வழிநடத்தும் பொறுப்பை வகித்தனர். ஆனால், அவர்கள் செய்த அநியாயங்களின் காரணமாக அப்பொறுப்புக்கு தகுதியற்றவர்களாக ஆகிவிட்டனர்.

எனவே, அவர்களிடமிருந்து அந்தத் தகுதியை அல்லாஹ் தனது தூதருக்கு அதிவிரைவில் மாற்றப்போகின்றான். நபி இப்றாஹ்ீம் (அலை) அவர்களுடைய இஸ்லாமிய அழைப்புப் பணியின் இரு மையங்களான மக்காவையும், ஃபலஸ்தீனையும் நபி (ஸல்) அவர்களுக்கு ஒருங்கே அருள இருக்கின்றான்;

மோசடி, குற்றம், வரம்பு மீறுதல் ஆகியவற்றையே தங்களது குலத்தொழிலாகக் கொண்ட சமூகத்திடமிருந்து ஆன்மிக வழிகாட்டலின் தலைமைத்துவத்தை பறித்து நன்மைகளையே நோக்கமாகக் கொண்ட சமுதாயத்திற்கு அல்லாஹ் அருள இருக்கின்றான் என்பதை நபி (ஸல்) அவர்களை மக்காவிஇருந்து பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்நிகழ்ச்சி உறுதி செய்தது.

மக்காவின் தெருக்களிலும் மலை ஓரங்களிலும் விரட்டியடிக்கப்பட்டு கண்ணியமிழந்து சுற்றி வரும் ஒருவருக்கு இந்தத் தலைமைத்துவம் எப்படிக் கிடைக்கும்? அதாவது, இஸ்லாமிய அழைப்புப் பணியின் முதல் கட்டமான இந்த சிரமமான காலம் வெகு விரைவில் முடிந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய காலக்கட்டம் தொடரப்போகிறது என்பதையே நபி (ஸல்) அவர்களின் இந்நிகழ்ச்சி குறிப்பிடுகிறது.

இதையே பின்வரும் வசனங்களும் உறுதி செய்கின்றன. அவ்வசனங்களில் அல்லாஹ் இணைவைப்பவர்களை மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் எச்சரிக்கை செய்கிறான்.

ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நாம் ஏவுகிறோம். அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம்முடைய வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.

நூஹுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் தேவையில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17 : 16, 17)

இது நாள்வரை நிராகரிப்போருக்கு அவகாசம் தரப்பட்டது. அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்த அநீதிகளை அல்லாஹ் பொறுத்து வந்தான். ஆனால், இனியும் அவர்கள் இத்தகைய தவறுகளிலிருந்து விலகாவிட்டால் அல்லாஹ் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பான் என்ற எச்சரிக்கை மேற்கூறிய வசனத்திலிருந்து தெரியவருகின்றது.

இதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்திற்கு அடிப்படையான கொள்கைகள், ஒழுக்கங்கள், கலாச்சாரங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறான்.

முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தனி நாட்டையும் அதிகாரத்தையும் கொடுக்கும்போது அவர்களது சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையெல்லாம் அல்லாஹ் கூறுவது போன்றே இருக்கின்றது. மேலும், வெகு விரைவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தையும், உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியை விரிவாக்குவதற்கு ஒரு மையத்தையும் அல்லாஹ் தர இருக்கிறான் என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது.

இந்தக் காரணங்களின் அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயண நிகழ்ச்சி மக்கா வாழ்க்கையின் இறுதியில் நடைபெற்றது. இதுவே ஏற்றமான, சரியான சொல் என்று நாம் கூறுகிறோம். அகபாவில் நடைபெற்ற முதல் ஒப்பந்தத்திற்கு முன் அல்லது முதலாவது இரண்டாவது ஒப்பந்தங்களுக்கிடையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நூல்:ரஹீக், தாருல் ஹுதா

THANKS TO:READISLAM

0 comments:

Post a Comment