கீரைகள் (1)

, , No Comments



கரிசலாங்கண்ணி முக்கியமாக மருந்துக்குத்தான் அதிகப் பயன்படுத்தப்படுகிறது. கீரையாகவும் அதைப் பயன்படுத்தலாம். கரிப்பான், கரிசாலை, பொற்றிழைக்கரிப்பான் என்னும் வேறு பல பெயர்களும் இதற்கு உண்டு.
கரிசல் என்றால் தங்கம் என்று ஒரு பொருள் உண்டு. இது உடலைத் தங்கம் போல ஆக்கும் என்னும் கருத்தில் இந்தக் கீரைக்கு கரிசலாங்கண்ணி என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

நெல் வயல்களிலும், வாய்க்கால் வரப்புகளிலும், ஏரிக்கரைகளிலும், ஈரப்பிடியுள்ள வேறு இடங்களிலும் கரிசலாங்கண்ணிக் கீரை வளர்ந்து கிடப்பதைக் காணலாம்.

கரிசலாங்கண்ணியில் பொதுவாக நான்கு வகைகள் உள்ளன. அவற்றுள் மஞ்சள் பூ பூக்கும் வகைதான் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

மற்ற கீரை வகைகளில் உள்ளதைப் போலவே கரிசலாங்கண்ணியிலும் வைட்டமின்களும், தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

கரிசலாங்கண்ணிக் கீரை இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. கண் பார்வையைத் தெளிவு படுத்துகிறது. தசையைக் கடுமையாக விரைக்கச் செய்யும் “தணுக் வாய்வு” என்னும் கொடிய நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்தில் இது முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

கரிசலாங்கண்ணிக் கீரை உடலுக்கு உரமூட்டுகிறது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. தோல் வியாதிகளுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையினால் ஒற்றடம் கொடுத்தால் உடலில் ஏற்படும் வீக்கங்கள் வற்றும்.

இந்தக் கீரையை உண்பதாலும், இதன் சாற்றை தலையில் தேய்ப்பதாலும் முடி கருகருவென்று வளரும். குழந்தைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டவும் இந்தக் கீரையின் சாற்றைப் பயன்படுத்தலாம்.

கரிசலாங்கண்ணி இலைச் சாறு இரண்டு சொட்டுகளுடன் எட்டு சொட்டு தேனைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளி, நீர்க்கோவை போன்றவை குணமாகும். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கரிசலாங்கண்ணிச் சாற்றைச் சேர்த்து காய்ச்சித் தயாரிக்கப்பட்ட தைலத்தை தலைவலி முதலியவற்றுக்குத் தேய்க்கலாம். தலையில் தேய்த்தால் தலை முடி கருமையாகும். இந்தத் தைலத்தை உடலில் வலியுள்ள இடத்தில் தய்த்தால் வலி நீங்கும்.

எடையையும், உடல் பருமனையும், தொந்தியையும் கரைக்க விரும்புபவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கரிசலாங்கண்ணிக் கீரையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கண்மை கண் நோய்களைத் தடுக்கிறது. இதன் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நீங்கும்.




———————————————————————————
குறிஞ்சான் கீரை




குறிஞ்சாக் கீரையில் இருவகை உண்டு. சிறுகுறிஞ்சான், பெருங்குறிஞ்சான்.
சிறுகுறிஞ்சான் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இதன் பயன்பாடு அதிகம். இது கொடி வகையைச் சார்ந்தது. மரங்களில் கொடியாகப் படரும். கசப்புச் சுவை கொண்டதால் இதனை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை.

இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

சிறுகுறிஞ்சான் வாதமொடு சீதத்தை நீக்கும்

மறுவுதிரம் இல்லாத மாதர்க்குறுமுலகில்

அத்தி சுரமும் அகலாக் கடி விடமும்

தத்தியக லர்த்தகர்க்குத் தான்

வாதசுரஞ் சன்னிசுரம் மாறாக் கபச்சுரமும்

பூதலம் விட்டோடப் புரியுங்காண்மாதேகேள்

அக்கரங்கள் தீர்க்கும் அதிசுரந்தா கந்தொலைக்குந் தக்க சிறு குறிஞ்சான்தான்

(அகத்தியர் குணபாடம்)

நீரிழிவு நோயின் தாக்கம் குறைய

நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக உட்கொள்ள வேண்டிய கீரை குறிஞ்சாக் கீரைதான். இன்று நம் நாட்டில் குறிப்பாக தென்தமிழ்நாட்டில் அதிக மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025ம் ஆண்டில் உலகில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உணவு முறையின் மாறுபாடே நீரிழிவு நோய் வருவதற்கு முக்கியக் காரணம். மேலும் உடல் உழைப்பின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளின் பாதிப்புகள் குறைய குறிஞ்சாக் கீரை மிகவும் உதவுகிறது. அதிக கசப்புத் தன்மை கொண்ட இந்தக் கீரை உடலின் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் வருமுன் காக்க குறிஞ்சாக் கீரை சிறந்த மருந்தாகும்.

குறிஞ்சாக் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நீர்விட்டு அவித்து சிறிது நேரம் அப்படியே ஊறவைத்து சாப்பிட வேண்டும்.

இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.

நாவற் பழக் கொட்டையையும், சிறுகுறிஞ்சான் கீரையையும் நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் 1 குவளை தண்ணீருக்கு 1 தேக்கரண்டி பொடி வீதம் இட்டு காய்ச்சி கஷாயமாக்கி அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க

உணவு முறை மாறுபாட்டாலும், நேரம் தவறி உணவு உண்பதாலும் வாயு சம்பந்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பதாலும் சிலரின் வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து குடலின் உட்புறச் சுவர்களைப் பாதிக்கிறது. மேலும் மது, புகை, போதை வஸ்துக்களாலும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உண்டாகும்.

இவர்கள் குறிஞ்சாக் கீரையை பாசிப் பருப்புடன் சேர்த்து காரம் சேர்க்காமல் வேகவைத்து கடைந்து நெய் கலந்து உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் விரைவில் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

உடல் வலுப்பெற

குறிஞ்சாக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயின் தாக்கம் ஏதுமின்றி நல்ல வலுவுள்ள உடலைப் பெறலாம்.

பசியைத் தூண்ட

சிலர் எப்போது பார்த்தாலும் பசியில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தினமும் குறிஞ்சாக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து உணவில் சேர்த்துக்கொண்டால் நன்கு பசியைத் தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

உடல் சூட்டைத் தணிக்க

வாரம் இருமுறை குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.

இருமல், சுரம் நீங்க

கடும் சுரம், இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிஞ்சாக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வருவது நல்லது.

ஈரல் பலப்பட

குறிஞ்சாக் கீரையை வேகவைத்து அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஈரலில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

மேலும் குறிஞ்சாக் கீரையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி நெறிகட்டிய இடத்தில் வைத்து கட்டினால் வலி குறையும்.

காணாக்கடி

எத்தகைய விஷக்கடியாக இருந்தாலும் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டியும், கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.

———————————————————————————

0 comments:

Post a Comment