முஸ்லிம்கள் சந்திக்கும் போது....

, , No Comments
முஸ்லிம்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கை குலுக்கிக் கொள்வது சுன்னத்தாகும். (இதை அரபியில் முஸாபஹா என்று சொல்வார்கள்) முஸ்லிம்களில் பலர் இரண்டு கைகளையும் பற்றிக் கொள்வதே முஸாபஹா என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது பற்றிய விளக்கக் கட்டுரை.
இரண்டு கைகளால் ‘முஸாபஹா’ செய்ய வேண்டும் என்போர் புகாரியில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர். “நபி(ஸல்) அவர்கள் இப்னு மஸ்ஊது(ரழி) அவர்களுக்கு ‘அத்தஹியாத்’ கற்றுக் கொடுக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் தனது இரு கைகளால் இப்னு மஸ்ஊது(ரழி) அவர்களின் ஒரு கையைப் பிடித்திருத்தனர்.” என்பது தான் அந்த ஹதீஸ்

நபி(ஸல்) அவர்கள் தனது இரு கைகளப் பயன்படுத்திய காரணத்தால். இரு கைகளால் “முஸாபாஹா’ செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றனர் சிலர். இந்த ஹதீஸை ஆராயும் போது இரண்டு கைகளால் முஸாபஹா செய்வதற்கு இந்த ஹதீஸில் எவ்வித ஆதாரமும் கிடையாது என்பதை உணரலாம். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ‘முஸாபஹா’ செய்யும் போது இரண்டு கைகளைப் பயன்படுத்தினார்கள் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடப்படவில்லை. மாறாக “அத்தஹிய்யாத்” கற்றுக் கொடுக்கும் போது தனது இரு கைகளைப் பயன்படுத்தினார்கள் என்றே உள்ளது. “ஒரு ஆசிரியர், மாணவருக்கு எதையேனும் கற்றுத் கொடுக்க விரும்பினால் தனது இரு கைகளால் அவரது கையைப் பிடித்துக் கொள்ளலாம்” என்று மட்டுமே இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.


“முஸாபஹாவுக்கும் அதில் ஆதாரம் உள்ளது” என்ற கருத்தை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், அந்த ஹதீஸ்படி, முஸாபஹா செய்பவர்களில் ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒரு கையையும் பயன்படுத்த வேண்டும்” என்று தான் புரிந்து கொள்ள முடியும். அந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் இரு கைகளையும், இப்னுமஸ்ஊது ஆதாரமாக இந்த ஹதீஸைக் கருதுபவர்கள், ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒரு கையையும் பயன்படுத்த வேண்டும்” என்று தான் முடிவு செய்ய முடியுமே தவிர இருவருமே இரண்டு கைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இதில் ஆதாரமில்லை. (யார் இரண்டு கைகளைக் கொடுப்பது, யார் ஒரு கையைக் கொடுப்பது என்பதையும் முடிவு செய்தாக வேண்டும்).

ஆனால் முஸாபஹா செய்யும்போது ஒரு கையைப் பயன்படுத்துவது பற்றி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சிலதைக் கீழே பட்டியல் போட்டுள்ளோம்.

நூல் பாடம் அறிவிப்பவர்
1)புகாரி தப்ஸீர் அபூசயீது இப்னு முஅல்லா(ரழி)

2) புகாரி முஆனகா இப்னு அப்பாஸ்(ரழி)

3) புகாரி, அஹ்மத் நேர்ச்சை அப்துல்லா இப்னு ஹிஷாம்(ரழி)

4) முஸ்லிம் பழாயில் அனஸ்(ரழி)

5) அபூதாவூத் கியாம் அன்னை ஆயிஷா(ரழி)

6) திர்மிதீ முஸாபஹா அனஸ் (ரழி)

7) அபூதாவூத் ஹுஸ்னுல்உஷ்ரத் அனஸ் (ரழி)

8) இப்னு மாஜா இக்ராமூர்ஜுல் அனஸ் (ரழி)

9) அஹ்மத் பாகம் 3, பக்கம் 111 அனஸ் (ரழி)

10) திர்மிதீ பாகம் 2, பக்கம் 97 அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரழி)

11) அத்காருன்னவவீ பக்கம் 228 அனஸ் (ரழி)

12) தாரமீ பாகம் 2, பக்கம் 286 அனஸ் (ரழி)

13) அஹ்மத் பாகம் 4, பக்கம் 289 அபூதாவூது (ரழி)

14) அஹ்மத் பாகம் 5, பக்கம் 267 அபூஉமாமா (ரழி)

15) தர்கீப், தர்ஹீப் பாகம் 5, பக்கம் 103 ஹுதைபா (ரழி)

16) அஹ்மத் பாகம் 3, பக்கம் 142 அனஸ் (ரழி)

17) அஹ்மத் பாகம் 4, பக்கம் 291 பரா இப்னு ஆஸிம்(ரழி)

18) தர்கீப் தர்ஹீப் பாகம் 5, பக்கம் 104 சல்மான் பார்ஸீ (ரழி)

19) அஹ்மத் பாகம் 5, பக்கம் 360 அபூஉமாமா (ரழி)

20) இப்னு அஸாகிர் இப்னு உமர் (ரழி)

21) திர்மிதீ பாகம் 2, பக்கம் 255 நாபிவு (ரழி)

22) அஹ்மத் பாகம் 5, பக்கம் 163 அபூதர் (ரழி)

இன்னும் பல ஹதீஸ்களும் ஒரு கையால் முஸாபஹா செய்வது பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இரண்டு கைகளால் முஸாபஹா செய்வதற்கு நேரடியாக எந்த ஒரு ஹதீஸையும் நாம் காண முடியவில்லை. புகாரியில் இடம் பெற்றுள்ள அந்த ஒரே ஒரு ஹதீஸும் முஸாபஹா பற்றியது அல்ல. அது முஸாபஹாவுக்கு உரியது என்று வைத்துக் கொண்டாலும் ஒரு கையால் முஸாபஹா செய்பவர்கள் தான் அந்த ஹதீஸையும் செயல்படுத்துகிறார்கள். யாரேனும் நம்மிடம் முஸாபஹாவுக்கு இரண்டு கைகளை நீட்டினால் நீங்கள் ஒரு கையை மட்டும் நீட்டுங்கள்! அந்த ஹதீஸில் உள்ளபடி அப்போதும் நாம் அமல் செய்து விட்டோம். ஏனெனில் அந்த ஹதீஸில் ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒரு கையையும் பயன்படுத்தினார்கள் என்று தான் உள்ளது. இரண்டு நபர்களும் இரண்டு கைகளைக் கொடுக்க அந்த ஹதீஸில் ஆதாரம் எதுவும் கிடையாது.

எவ்வித ஆதாரமுமில்லாமல் ஏன் மக்களிடம் இந்தப் பழக்கம் வேரூன்றியது தெரியுமா? அதற்கும் ஒரு பின்னனி உண்டு. ஹில்று (அலை) அவர்கள் பல மனிதர்களின் தோற்றத்தில் வருவார்களாம். சிலருடன் முஸாபஹா செய்வார்களாம். அவர்களால் முஸாபஹா செய்யப்பட்டு விட்டால் உடனே அவர் இறைநேசராம்! ஹில்று(அலை) அவர்களின் வலது கைப் பெருவிரலில் எலும்பு இருக்காதாம். இரண்டு கைகளால் முஸாபஹா செய்யும் போது மற்றவரின் வலது கைப் பெருவிரலை அழுத்திப் பார்க்க வேண்டுமாம். எலும்பு இல்லாவிட்டால் ஹில்று(அலை) என்று புரிந்து கொள்ள வேண்டுமாம் இந்தக் கதையை அடிப்படையாக வைத்தே இரு கைகளால் முஸாபஹா செய்வது நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே ‘முஸாபஹா’ ஒரு கையால் செய்வதே சுன்னத் என்று நாம் தெரிந்து கொள்கிறோம், குன்யதுத் தாலிபீன் என்ற நூலில் அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள், “வலது கையால் செய்ய வேண்டியவை” என்ற தலைப்பில் முஸாபஹாவையும் சேர்த்துள்ளார்கள், இமாம் நவபீ அவர்கள் வலது கையால் முஸாபஹா செய்வதுதான் விரும்பத்தக்கது என்று கூறியுள்ளனர். இவற்றிலிருந்தும் ஒரு கையால் தான் ‘முஸாபஹா’ செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

இரண்டு கைகளால் முஸாபஹா செய்பவர்களில் சிலர், வலது கையை இடது புறமாகக் கொண்டு சென்று, இடது கையை வலது புறமாகக் கொண்டு சென்று (ஏறத்தாழ ‘பெருக்கல்’ வடிவத்தில் கைகளை வைத்துக் கொண்டு) முஸாபஹா செய்வதும், இன்னும் சிலர் வலது கையை, தன் தலைக்கு நேராக வைத்துக் கொண்டு முஸாபஹா செய்வதும், பார்க்க தமாஷாக இருக்கும். இந்த விநோதங்களை எல்லாம் எங்கிருந்து கற்றார்களோ தெரியவில்லை.

சுன்னத்தான முறைப்படி நாம் ஒரு கையை நீட்டினால், ஏதோ அதிசயப் பிராணியைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். நாகரீகமான ஒரு முஸாபஹாவை நம்மிடமிருந்து மேனாட்டவர் கற்றுக் கொண்டு செய்து வருகின்றனர். நம்மவர்கள் தான் அந்த “சுன்னத்தை” மாற்றிக் கொண்டோம். சுன்னத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு கையால் முஸாபஹா செய்வோமா!

முஸாபஹா செய்யும் போது எதுவும் ஓத வேண்டும் என்று எவ்வித ஆதாரமும் கிடையாது. “முஸாபஹா செய்யும் போது ஸலவாத் ஓத வேண்டும்” என்று இப்னு ஹப்பானில் இடம் பெற்றுள்ள ஹதீஸ், முற்றிலும் நிராகரிக்கப்பட்டதாகும் என்று இமாம் இப்னு ஹப்பான்(ரஹ்) அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். முஸாபஹா செய்யும் போது வேறு எந்த திக்ருகளும் ஓத வேண்டும் என்பதற்கும் ஆதாரம் கிடையாது. குறிப்பிட்ட சில தொழுகைக்குப் பின் ‘முஸாபஹா’ செய்வதற்கும் ஸஹீஹான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

0 comments:

Post a Comment