மார்பக புற்றுநோய்

, , No Comments
பல ரக கேன்சர்கள் சத்தமே இல்லாமல் தாக்குவதுதான்..! அதனால் உடலில் ஏதாவது சின்ன மாறுதல் இருந்தால்கூட உடனே டாக்டரிடம் காட்டவேண்டும். என்கிறார் ப்ளட் கேன்சரைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ராமனாதன். ஒரு விஷயம் தெரியுமா? மார்பகக் கேன்சர் ஒரு மார்பகத்திலிருந்து மற்றொரு மார்பகத்திற்கு பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆகவே எவ்வளவு சீக்கிரம் கண்டறிய வாய்ப்புள்ளதோ, அந்தளவுக்கு குணமாகும் வாய்ப்பும் அதிகம். என்கிறார் டாக்டர்.

யாருக்கெல்லாம் மார்பக புற்றுநோய் அதிகம் தாக்க சந்தர்ப்பங்கள் இருக்கிறது?

பெரும்பாலும், குழந்தையில்லாதவர்கள் அல்லது 30 வயதுக்கு மேலே குழந்தை பெற்றுக் கொள்பவர்கள். குறிப்பாக 12 வயதிற்கு முன்பே பருவம் அடையும் பெண்கள், அல்லது 55 வயதிற்கு மேலாகியும் மாதவிடாய் நிற்காத பெண்கள்.

ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அடங்கியுள்ள மாத்திரைகள் மற்றும் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து எட்டு வருடங்களுக்கும் மேலாக உபயோகிக்கும் பெண்கள், புகையிலை மற்றும் மது பழக்கம் உள்ள பெண்கள்.

குடும்பத்தில் இதற்குமுன் பாட்டி, அம்மா, அக்கா என்று எவருக்காவது மார்பக கேன்சர் இருந்தாலும் கேன்சர் வர வாய்ப்பு இருக்கிறது.

மார்பகக் கேன்சரை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியுமா?

முடியும்! மாதந்தோறும் மாதவிடாய் முடிந்த ஏழு நாட்களுக்குப் பிறகு உங்கள் மார்பகங்களை நீங்களே தடவிப் பார்த்து மார்பகத்தில் கட்டியோ அல்லது தோலில் தடிப்புகளோ தட்டுப்படுகிறதா எனப் பார்க்கலாம். வருடந்தோறும் மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ளலாம். இதனால் ஆரம்பத்திலேயே மார்பகக் கேன்சரை கண்டுபிடித்து முழுதாக குணமாக்கிவிட முடியும்!

மார்பக சுய பரிசோதனை செய்வது முப்பது வயதைத் தாண்டிய ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்லது. இந்தப் பரிசோதனையை கண்ணாடி முன் நின்றும் செய்யலாம். படுத்துக்கொண்டும் சுய பரிசோதனை செய்யலாம்.

முதலில் கண்ணாடி முன் நின்று இரண்டு மார்பகங்களையும் நிதானமாக கூர்ந்து கவனிக்கவேண்டும். மார்பகங்களின் அளவிலோ, உருவிலோ மாற்றங்கள் தெரிகிறதா என்பது பார்க்கவேண்டும்.

அடுத்ததாக மார்புக் காம்பிலிருந்து நீர் அல்லது இரத்தம் கலந்த நீர் வடிகிறதா, மார்புக் காம்பைச் சுற்றியுள்ள கருமையான பகுதியில் புண் ஏதும் இருக்கிறதா, மார்புக் காம்பு உள்ளிழுக்கப்பட்டு இருக்கிறதா, மார்பகங்களில் மேலாகத் தோலின் நிறத்தில் மாறுபாடு தெரிகிறதா, அல்லது அந்த இடத்தில் சொரசொரப்பாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். பின்பு கைகளை தலைக்கு மேலாகத் தூக்கிக்கொண்டு இடது மார்பகத்தை (கடிகாரச் சுற்றில்) வட்ட வடிவில் லேசாக அழுத்தித் தடவி கட்டியோ, தடிப்போ தட்டுப்படுகிறதா என்று ஆராயவேண்டும்.

அதேபோல் இடது கையால் வலதுபுற மார்பகத்தை ஆராயவேண்டும். இப்படி செய்யும்போது, மார்பகத்தை ஒட்டிய அக்குள் பகுதிகளையும் தொட்டுப் பரிசோதனை செய்யவேண்டும். இப்படித் தடவி பரிசோதனை செய்யும்போது, விரலின் நுனிப் பகுதியைப் பயன்படுத்தக்கூடாது. பட்டையான விரல் பகுதியைத்தான் பயன்படுத்தவேண்டும்.

இப்படி தன்னைத்தானே மாதந்தோறும் பரிசோதித்துக் கொள்ளும்போது, சின்னதாக மிளகு சைஸில் ஒரு கட்டி இருந்தால்கூட கண்டுபிடித்துவிட முடியும்! அதனால் உடனடியாக ட்ரீட்மெண்டும் மேற்கொண்டு குணமாகும் வாய்ப்பும் உள்ளது! ஆனால், எப்போதாவது தன்னை சுயப் பரிசோதனை செய்யும் பெண்கள் கொண்டைக் கடலை அளவுக்குப் பெரிய கட்டியைத்தான் தடவி கண்டுபிடிக்க முடியும்! எப்போதுமே சுய பரிசோதனை செய்யாத பெண்கள் காலங் கடந்தே அதாவது கட்டி நாலணா அளவிற்குப் பெரிதான பின்பே பெரும்பாலும் கண்டுபிடிக்கிறார்கள்.

வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் ஆரம்பநிலையிலேயே மார்பகக் கேன்சரை கண்டுபிடிக்க முடியும்!

பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வருடந்தோறும் மேமோகிராம் செய்து கொள்ள வேண்டும். 40 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த பரிசோதனை செய்தால், மார்பகச் சதை அடர்த்தியாக இருப்பதால் துல்லியமாக கண்டுபிடிக்கமுடியாது. அதனால் அந்த வயதினருக்கு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.

மார்பக கேன்சரால் பாதிக்கப்படும் பெண்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்த பின்பே மருத்துவரால் அதற்கேற்றபடி சிகிச்சை கொடுக்க முடியும்.

மார்பக கேன்சரின் பாதிப்பு நான்கு நிலைகளாகப் பார்க்கப்படுகிறது.

முதல் நிலையில் மார்பகத்தில் மட்டுமே கேன்சர் இருக்கும். இரண்டாம் நிலையில் மார்பகம் தவிர அக்குகளிலும் பரவி இருக்கும். மூன்றாம் நிலையில் கேன்சர் பாதிப்பு மார்பகத்திலிருந்து நெஞ்சு…… அக்குள் என்று மிக பலமாகப் பரவிட்டிருக்கும். நான்காவது நிலையில், மார்பகம் அருகேயுள்ள மற்ற உடற்பாகங்களை நுரையீரல், எலும்புகள் மற்றும் ஈரல் போன்றவற்றிலும் கேன்சர் ஊடுருவி பரவியிருக்கும்!

என்ன ட்ரீட்மெண்ட் தரப்படும்?

நிலை 1 : பாதிப்பைப் பொறுத்து அறுவை சிகிச்சையோ அல்லது கீமோதெரபியோ கொடுக்கப்படுகிறது.

நிலை 2 : அறுவை சிகிச்சைக்குப் பிறகு கீமோதெரசி கொடுக்கப்படும்.

நிலை 3 : முதலில் கீமோதெரபி சிகிச்சை கொடுத்த பின்பு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு மீண்டும் கீமோ தெரபி சிகிச்சையும் சில சமயங்களில் கதிரியக்க சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது.

நிலை: 4: இந்த நிலையில் நோயாளிக்கு கீமோ தெரபி சிகிச்சை மட்டும் அளிக்கப்படுகிறது.

இதில் முதல் மற்றும் இரண்டாம் நிலை மார்பகக் கேன்சர் உள்ள பெண்கள் எனில் 95 சதவீதத்திற்கு மேல் அவர்களை பூரணமாகக் குணப்படுத்திவிட முடியும் மூன்றாம் நிலை எனில் 50 சதவீதம் குணப்படுத்த முடியும்.

நான்காம் நிலையில் புற்று நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாது! ஆனால் நோயின் தன்மையை கட்டுப்படுத்தி வலியில்லாமல் வாழ வைக்கலாம்!

கேன்சர் கட்டி, கடுகு அல்லது மிளகு சைஸில் இருக்கும்… கண்டுபிடித்து ட்ரீட்மெண்டுக்கு வந்தால், அறுவை சிகிச்சையினால் கட்டி… மட்டுமே அகற்றப்பட்டு பெண்களின் மார்பகம் காப்பாற்றப்படும்.

ஆனால், நம் நாட்டில் பெண்கள், பெரும்பாலும் தன் உடல்நிலை பற்றிய அக்கறையின்மையால் கவனிக்காமல் விட்டு கட்டி பெரிதான பின்பு தான் மருத்துவரிடமே வருகிறார்கள்! அதனால், பலருக்கு மார்பகத்தையே எடுக்கும் சூழ்நிலை உருவாகிறது! மார்பகத்தை எடுத்தப் பின்பு கேன்சர் மீண்டும் வராதபடி நெஞ்சுக் கட்டியும் கதிரியக்க சிகிச்சை கொடுக்கப்படும் இது, வலியில்லாத சிகிச்சைதான்! சிலருக்கு கீமோ தெரபி எனப்படும் கேன்சர் மருந்துகள் மூலமாகவும், இதற்காக மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியும் சிகிச்சைக் கொடுக்கப்படுகிறது.

இந்தச் சிகிச்சையில் முடிகொட்டுதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட்டாலும் சிகிச்சை முடிந்த பின்னர் அந்தப் பெண் பழைய நிலைக்கு திரும்பி விடுவார்! அதனால், நோயை அறிந்து, அதிலும் முதலிலேயே அந்நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது நேரமும், சிரமும் பணமும் மிச்சமாகிறது. குணப்படுத்துவதும் நூறு சதவீதம் எளிதும் என்கிறார் டாக்டர் ராமனாதன்.

லட்சத்தில் ஒரு ஆணிற்கு மார்பக புற்று நோய் வரலாம். அதனால் ஆண்களுக்கு பெண்களைக் காட்டிலும் மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணம் குழந்தை பருவத்தில் மார்பகம் வளர்ந்திருந்து அவர்கள் இளைஞர்களான பின்னும் மார்பக வளர்ச்சி குறையாமல் அப்படியே இருந்தாலும், இத்தகையானவர்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் இருந்து அந்த ஜீன் மகனுக்கு இருந்தாலும் இதற்கான வாய்ப்பு அதிகம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வந்தால் மிகச் சீக்கிரமாக வலுவாக வளரும்.

0 comments:

Post a Comment