மனிதர்களோடு பேசும் மிருகம்

, , No Comments
மனிதர்களோடு பேசும் மிருகம்




‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5)



யுக முடிவு நாள் மிகவும் அண்மித்து விடும் போது ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களில் ஒன்றான தஜ்ஜாலின் வருகை பற்றி ஓரளவு நாம் அறிந்து கொண்டோம். அவனது மரணம் ஈஸா (அலை) அவர்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதால் ஈஸா (அலை) அவர்களின் வருகையை விளக்கும் போது தஜ்ஜாலின் மரணம் பற்றி விரிவாக அறியலாம். இனி ஏனைய அடையாளங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.



அதிசயப் பிராணி



யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அதிசயப் பிராணி ஒன்றை இறைவன் படைத்து மக்களிடையே அதை நடமாட விடுவான். அத்தகைய பிராணியின் வடிவம் பற்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் விபரம் காணப்படா விட்டாலும் அத்தகைய பிராணி ஒன்று யுக முடிவு நாளின் நெருக்கத்தில் தோன்றும் என்பதற்கு திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஆதாரங்கள் கிடைக்கின்றன.



அவர்களுக்கெதிரான தீர்ப்பு உறுதியாகும் போது இப்பூமியிலிருந்து ஒரு பிராணியை நாம் அவர்களுக்காக வெளிப்படுத்துவோம். அப்பிராணி அவர்களுடன் பேசும். (இதற்குக் காரணம்) மக்கள் நமது வசனங்களை நம்பாமல் இருந்தது தான். (அல்குர்ஆன் 27:82)



இறை வசனங்களை மக்கள் நம்பாத மோசமான காலகட்டத்தில் அந்தப் பிராணி தோன்றும் எனவும் அது வானிலிருந்து இறக்கப்படாத இந்தப் பூமியிலேயே தோன்றும் எனவும் தஜ்ஜால் போன்று முன்பே படைக்கப்பட்டு அப்பிராணி மறைத்து வைக்கப்பட வில்லை, இனிமேல் தான் அது தோன்றவிருக்கின்றது எனவும் இந்த வசனத்திலிருந்து அறியலாம்.



எத்தனையோ பிராணிகள் உலகில் உள்ளன. அவற்றிலிருந்து இப்பிராணி வித்தியாசப்படுகின்றது. எந்தப் பிராணியும் மனிதர்களுடன் பேசுவதில்லை. இந்த அதிசயப்பிராணியோ மக்களுடன் பேசக்கூடியதாகப் படைக்கப்படும் என்பதையும் இந்த வசனத்திலிருந்து நாம் அறிய முடியும்.



பத்து அடையாளங்களில் ஒன்றாக இந்த அதியசப்பிராணியும் உள்ளது என்ற ஹதீஸை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.



சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதும் நண்பகல் நேரத்தில் அந்தப் பிராணி மக்களுக்குக் காட்சி தருவதும் ஆரம்ப அடையாளங்களாகும். இவ்விரண்டில் எது முதலில் தோன்றினாலும் அதைத் தொடர்ந்து அடுத்ததும் தோன்றிவிடும் என்பது நபி மொழி. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: முஸ்லிம்)



இவற்றைத் தவிர அப்பிராணி பற்றி மேலதிகமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் நாம் காணமுடியவில்லை.



மனிதர்களின் கற்பனைக்கு எட்டக்கூடிய வடிவில் முன்பே மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்ற ஏதேனும் மிருகத்தின் வடிவில் அப்பிராணியின் வடிவம் அமைந்திருக்குமென்றால் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ நமக்கு கூறியிருப்பார்கள். மனிதர்கள் இதுவரைக் கண்டிராத ஒரு வடிவில் அது அமைந்திருகக் கூடும் என்று நாம் ஊகிக்க முடியும். அதன் வடிவம் தான் நமக்கு கூறப்படவில்லையே தவிர அது வந்து விட்டால் சட்டென்று கண்டு கொள்ளக் கூடிய முக்கியமான தன்மையை அல்லாஹ் கூறிவிட்டான்.



மனிதர்களுடன் பேசக் கூடியதாக அப்பிராணி அமைந்திருக்கும் என்பதை விட வேறு அடையாளமும் தேவையில்லை. அப்படி ஒரு பிராணி தோன்ற விருக்கிறது என்று நம்புவதே நமக்குப் போதுமானதாகும் என்பதாலேயே அதுபற்றி அதிக விபரம் நமக்குக் கூறப்படவில்லை.



மேற்கில் சூரியன் உதிப்பது



நடக்க முடியாத விஷயத்தைக் குறித்து ‘சூரியன் மேற்கே உதித்தாலும் இது நடக்காது’ என்று கூறப்படுவதுண்டு. சூரியன் மேற்கே உதிப்பது சாதாரணமாக நடக்கக் கூடியதன்று என்றாலும் யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் நடக்க முடியாத இதுவும் நடக்கவுள்ளது. உலகம் தோன்றியது முதல் கிழக்கிலிருந்து உதித்து வரும் சூரியன் திடீரென மேற்கிலிருந்து உதிக்கும் இந்த நிலை ஏற்பட்ட பின் ஈமான் கொள்வதோ பாவமன்னிப்பு கேட்பதோ இறைவனால் ஏற்கப்படாது.



சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன் கியாமத் நாள் ஏற்படாது. அதைக் கண்டவுடன் மக்கள் (இறைவனை) நம்புவார்கள். ஆயினும் அதற்கு முன்பே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அந்த நம்பிக்கை பயனளிக்காது என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)



சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதைச் சாதாரணமான ஒன்றாகக் கருதிவிடக் கூடாது. அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும்.



கோள்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருக்கின்ற விபரங்களினடிப்படையில் இதை சிந்தித்தால் இதன் பயங்கரத்தை நாம் எளிதாக உணர முடியும்.



பூமி சூரியனைச் சுற்றி வருவதால் இரவு பகல் ஏற்படுகிறது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் இந்த பூமி சுழன்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இத்தகைய பூமியில் கிழக்கே உதித்து வரும் சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழற்சியைத் திடீரென நிறுத்தி உடனே எதிர்த் திசையில் சுழல வேண்டும். அப்போது தான் மேற்கில் சூரியன் உதிக்க முடியும்.



நாற்பது மைல் வேகத்தில் செல்லக்கூடிய ஒரு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டால் அதில் பயணம் செய்தவர்கள் தூக்கி எறியப்படுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். திடீரென நிறுத்தப்பட்டதுடன் மட்டுமின்றி உடனேயே பின்புறமாக அதே வேகத்தில் இந்தப் பேருந்து செல்வதாக கற்பனை செய்து பாருங்கள்! இது இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.



அப்படியானால் ஆயிரம் மைல் வேகத்தில் சுழலும் இந்தப் பூமி திடீரென நிறுத்தப்பட்டு எதிர்த் திசையில் அதே வேகத்தில் சுழன்றால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.



நினைத்துப் பார்த்திராத விதத்தில் இந்தப் பூமி குலுங்கும். கட்டிடங்கள் தகர்ந்து விழும். மலைகளும் கூட பெயர்த்து எறியப்படும். இவ்வளவு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.



யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை



நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.



இந்த இரண்டு கூட்டத்தினரும் இனிமேல் தான் பிறந்து வருவார்கள் என்பதில்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர்.



(துல்கர்னைன் அவர்கள்) இரண்டு மலைகளுக்கு இடையிலமைந்த (பகுதியை) அடைந்த போது அவ்விரு மலைகளுக்கு முன்னே ஒரு கூட்டத்தினரைக் கண்டார்கள். இவர்கள் பேசுவதை அவர்கள் விளங்கிக் கொள்பவர்களாக இல்லை. துல்கர்னைன் அவர்களே! யஃஜுஜ் மற்றும் மஃஜுஜ் கூட்டத்தினர் இந்தப் பூமியில் குழப்பம் விளைவித்து வருகின்றனர். எனவே எங்களுக்கும் அவர்களுக்குமிடையே நீங்கள் தடுப்புச் (சுவர்) ஏற்படுத்துவதற்காக உங்களுக்கு நாங்கள் வரி செலுத்தட்டுமா? என்று அவர்கள் கேட்டனர்.



‘என் இறைவன் எனக்களித்துள்ள வசதி எனக்குச் சிறந்ததாகும். எனவே (உடல்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவுங்கள்! அவர்களுக்கும் உங்களுக்குமிடையே ஒரு தடுப்பை நான் ஏற்படுத்துகிறேன்’ என்று (துல்கர்னைன்) கூறினார்.



என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்! (என்றும் கூறினார்) இரு மலைகளுக்கிடையே (உள்ள இடைவெளி) மட்டமானதும் ஊதுங்கள் என்றார். அது நெருப்பாக (பழுத்ததாக) ஆனதும் (செம்பை) என்னிடம் கொண்டு வாருங்கள்! இதன் மீது அதை நான் ஊற்றுகிறேன் என்று கூறினார்.



அதில் ஏறவும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். அதில் துவாரமிடவும் சக்தி பெற மாட்டார்கள்.



இது என்னுடைய இறைவனின் அருட்கொடையாகும். (எனினும்) என் இறைவனின் வாக்கு வரும்போது இதை அவன் தூளாக்குவான். என் இறைவனின் வாக்கு உண்மையானதாகும் என்றும் அவர் கூறினார்.



அந்நாளில் அவர்களில் சிலரை மற்றும் சிலருடன் அலைமோத விடுவோம். மேலும் ‘சூர்’ ஊதப்பட்டதும் அவர்களை ஒன்று திரட்டுவோம். (அல்குர்ஆன் 18:94-99)



முன்பே அக்கூட்டத்தினர் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது. யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்றெல்லாம் இந்த வசனங்களிலிருந்து நாம் அறியலாம்.



இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல) ஒவ்வொரு மேட்டிலிருந்து விரைந்து வருவார்கள். (அல்குர்ஆன் 21:96)



யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அவர்களுக்கு வழி திறக்கப்படும் என்பதை இந்த வசனமும் அறிவிக்கின்றது.

அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.



நவீன கருவிகளைக் கண்டு பிடித்துள்ள இந்தக் காலகட்டத்தில் – ஆகாய விமானங்கள் உள்ள கால கட்டத்தில் – தொலை நோக்கிக் கருவிகள் உள்ள காலகட்டத்தில் – அப்படி ஒரு கூட்டம் அடைக்கப்பட்டிருந்தால் உலகத்திற்குத் தெரியாமல் இருக்குமா? செம்பு உருக்கி ஊற்றப்பட்டால் அதன் பளபளப்பை வைத்து இனம் காணலாமே என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். பல காரணங்களால் அந்தக் கேள்விகள் தவறானவையாகும்.



மனிதனிடம் இத்தகைய நவீன சாதனங்கள் இருந்தாலும் அவை முழு அளவுக்கு இன்னமும் பயன்படுத்தப்பட வில்லை. பூமியை விட்டு மிக உயரத்திலிருந்து கொண்டு பூமியைப் படம் பிடித்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறார்களே தவிர பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏன் ஒவ்வொரு ஏக்கரையும் கூட மனிதன் இந்தக் கருவிகள் மூலம் இதுவரை ஆராய வில்லை. பூமியிலேயே இருக்கும் சில பகுதிகளை இப்போதும் கூட கண்டு பிடித்ததாக செய்திகள் வருவதிலிருந்து இதை உணரலாம்.



இந்த மண்ணுலகில் மனிதனின் கால் படாத நிலப்பரப்புக்கள் ஏராளம் உள்ளன. ஆகாயத்தில் வட்டமடித்து சக்தி வாய்ந்த தொலை நோக்கிக் கருவிகள் மூலம் ஒவ்வொரு ஏக்கராக ஆராய முற்பட்டாலும் மரங்கள், காடுகள் போன்ற தடைகள் இல்லாவிட்டால் தான் பூமியில் உள்ளவர்களைப் பார்க்க முடியும். தடைகள் இருந்தால் அந்தக் காடுகளைத்தான் பார்க்க முடியும்.



குறிப்பிட்ட காட்டில் தான் வீரப்பன் இருக்கிறான் என்று தெளிவாகத் தெரிந்த நிலையில் அவனது இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாததற்கு இது தான் காரணம். காடுகளும், குகைகளும் தொலைநோக்கிக் கருவிகள் மூலம் பார்ப்பதை தடுத்து விடுகின்றன.



இலங்கையில் பிரபாகரனும் அவரது புலிகளும் இந்திய இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட முடியாமல் போனதற்கும் கூட அடர்த்தியான காட்டுப் பகுதியை அவர்கள் தேர்வு செய்ததுதான். இலங்கையில் இராணுவத்தினர் மரங்களை வெட்டி வீழ்த்தி வருவதும் இந்தக் காரணத்துக்காகவே.



மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ அல்லது குகைகளிலோ யஃஜுஜ் மற்றும் மஃஜுஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்த சாதனங்கள் மூலமும் அவர்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியாது.



செம்பு எனும் உலோகம் விரைவில் பாசிபடிந்து பச்சை நிறத்துக்கு மாறிவிடுவதால் அதன் பளபளப்பை வைத்தும் கண்டு பிடிக்க முடியாது. தொலைவிலிருந்து பார்க்கும் போதும் அருகிலிருந்து பார்க்கும் போதும் கூட மலைகளில் புல் வளர்ந்திருப்பது போன்ற தோற்றமே தென்படும்.



எனவே எவரது கண்களுக்கும் புலப்படாமல் இந்தக் கூட்டத்தினர் இந்தப் பூமியின் ஒரு பகுதியில் வாழ்ந்து வருவது சந்தேகப்பட வேண்டியதன்று.



இனி வருங்காலத்தில் மனிதன் முயன்று நெருங்கலாம். அந்த நேரம் அவர்கள் வெளியே வரவேண்டிய காலமாக யுக முடிவு நாளின் நெருக்கமாகத்தான் இருக்க முடியும்.



இந்தக் கூட்டத்தினர் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய சில விபரங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.



யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் அகன்றதாகவும் கேடயம் போல் (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும் முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள் என்பது நபி மொழி. (அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ், நூல்கள்: அஹ்மத், தப்ரானி)

இந்தக் கூட்டத்தினர் தனியான இனத்தவர் அன்று ஆதம் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றியவர்களே என்பதைப் பின்வரும் நபி மொழி அறிவிக்கின்றது.



யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாகவும் அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரளி), நூல்: தப்ரானி)



ஒவ்வொருவரும் ஆயிரம் சந்ததிகளைப் பெற்றெடுப்பார்கள் என்பதிலிருந்து அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கும் என்று கருத முடிகின்றது.



யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்களில் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக் கண்டு அதன் நீரைப் பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும் போது (தண்ணீர் இராது என்பதால்) அந்த இடத்தில் ஒரு சமயத்தில் தண்ணீர் இருந்தது என்று கூறுவார்கள். பின்னர் பைத்துல் முகத்தஸில் உள்ள மலையை அடைவார்கள். ‘பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள்! வானில் உள்ளவர்களைக் கொல்வோம் எனக் கூறுவார்கள். தங்கள் அம்புகளை வானை நோக்கி எய்துவார்கள். அவர்களின் அம்புகளில் இரத்தம் பூசப்பட்டதாக இறைவன் திருப்பியனுப்புவான். ஈஸா நபியையும் அவரது தோழர்களையும் முற்றுகையிடுவார்கள். ஒரு மாட்டின் தலை இன்றைக்கு நூறு தங்கக் காசுகள் உங்களுக்கு எவ்வளவு மதிப்பு மிக்கதோ அதைவிட மதிப்பு நிறைந்ததாக இருக்கும். பின்னர் ஈஸா (அலை) அவர்களும் அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். அல்லாஹ் அவர்களிடம் புழுக்களை அனுப்புவான். அந்தப் பழுக்களின் தாக்குதலால் அனைவரும் ஒரேயடியாக செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா (அலை) அவர்களும் அவர்களின் தோழர்களும் (மலையிலிருந்து) தரைக்கு இறங்குவார்கள். அவர்களின் (பிணங்களின்) நாற்றமும் நெருக்கடியும் அப்பகுதியின் ஒரு சாண் இடத்தைக்கூட விடாது பிடித்துக் கொள்ளும். பின்னர் ஈஸா (அலை) அவர்களும் அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். உடனே அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துக்கள் போன்ற வடிவில் சில பறவைகளை அனுப்புவான். அப்பிணங்களை அவை சுமந்து சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் போட்டு விடும் என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), நூல், முஸ்லிம்)



(யஃஜுஜ், மஃஜுஜ் மடிந்தபின்) அவர்களின் அம்புகளையும், விற்களையும், அம்பராத் துணிகளையும் ஏழு ஆண்டுகளுக்கு முஸ்லிம்கள் விறகாகப் பயன்படுத்துவார்கள். பின்னர் அல்லாஹ் மழையை அனுப்புவான். அனைத்து இல்லங்களையும் அம்மழை அடையும். பூமியை கண்ணாடி போல கழுவிவிடும். பின்னர் பூமியை நோக்கி ‘உன் கனிகளை முளைக்கச் செய்! உன்னிடமிருந்த பரக்கத்தையும் திரும்ப வழங்கு’ எனக் கூறப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு கூட்டத்தினர் உண்பார்கள். அதன் தோலில் நிழல் பெறுவார்கள். (அந்த அளவு பெரியதாக இருக்கும்). பாலிலும் பரகத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் ஒரு முறை கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்தினருக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் ஒரு முறை கறக்கும் பால் ஒரு கோத்திரத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு ஆட்டில் ஒரு முறை கறக்கும் பால் ஒரு குடும்பத்துக்குப் போதுமானதாக இருக்கும். மக்கள் இவ்வாறு இருக்கும் நிலையில் அல்லாஹ் சுகமான காற்றை அனுப்புவான். அக்காற்று அக்குள் வரை செல்லும். அனைத்து முஃமின்கள், அனைத்து முஸ்லிம்களின் உயிர்களும் கைப்பற்றப்படும். கழுதைகள் வெருண்டோடுவது போல் வெருண்டோடும் கெட்ட மனிதர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்கள் மட்டும் இருக்கும் போது தான் கியாமத் நாள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), நூல்: திர்மிதி)



ஈஸா (அலை) அவர்களின் வருகைக்குப் பின்னரே அக்கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் அழிந்த ஏழு ஆண்டுகளில் உலகமும் அழியும் என்ற விபரங்களையும் யஃஜுஜ், மஃஜுஜ் சம்பந்தமான போதுமான விபரங்களையும் இந்த ஹதீஸ்களில் அறியலாம்.






0 comments:

Post a Comment