கியாமத் நாள் எப்படி சாத்தியமாகும்?

, , No Comments
கியாமத் நாள் எப்படி சாத்தியமாகும்?




‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5)



அவர்கள் எதைப்பற்றி வினா எழுப்புகின்றனர்? அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனரோ அந்த மகத்தான செய்தியைப் பற்றியா (வினா எழுப்புகின்றனர்?) அவ்வாறன்று! அவர்கள் இனிமேல் அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.



நபி (ஸல்) காலத்து மக்கள் மறுமை நாளைப்பற்றி ஐயம் கொண்டிருந்தனர். அதுபற்றி அடிக்கடி கேள்விகள் எழுப்பி வந்தனர்.



1. அந்த நாள் எப்போது வரும்?



2. அது எப்படி சாத்தியமாகும்?



3. அப்படி என்ன தான் அந்த நாளில் நடந்து விடும்?



இவையே அவர்களின் கேள்விகள். இம்மூன்று கேள்விகளில் முதல் கேள்விக்கு இறைவன் அளித்த விடையை இதுவரை கண்டோம். ‘அதை பின்னர் அறிந்து கொள்வார்கள்’ என்று கூறி அது எப்போது வருமென்பதை தன்னைத் தவிர வேறெவரும் அறிய முடியாது என்று விளக்கினான்.



இரண்டாவது கேள்வி



மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகி விடுகிறான். அவனது எலும்புகள் உட்பட அனைத்தும் அழிந்து பின்னர் அவன் எப்படித் திரும்பவும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவான்? இதை எங்களால் நம்ப முடியவில்லையே? மறுமை நாள் குறித்து அவர்கள் எழுப்பிய இரண்டாவது கேள்வி இது!



இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பியதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றது.



மக்கிய இந்த எலும்புகளை யாரால் உயிர்ப்பிக்க இயலும்? என்று மனிதன் கேட்கிறான். (அல்குர்ஆன் 37:78)



நாங்கள் எலும்புகளாகவும், மக்கிய பொருட்களாகவும் ஆன பின்பு புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா என்ன? என்று அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன் 17:49, 17:98, 23:82, 37:15, 37:53, 56:47)



”நிச்சயமாக நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆனபின்னர் நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப் படுவீர்கள்’ என்று அவர் உங்களை எச்சரிக்கிறாரா? நீங்கள் எச்சரிக்கப்படுவது வெகு தூரம்! வெகு தூரம்!! நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. நாம் வாழ்ந்து மடிகிறோம். மீண்டும் நாம் எழுப்பப் படப்போகிறவர் அல்லர்’ (எனக் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன் 23:35,36,37)



நாம் நிச்சயமாக மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவோமா? மக்கிய எலும்புகளாக நாங்கள் ஆகிவிட்டாலுமா? என்று அவர்கள் கேட்கின்றனர் (அல்குர்ஆன் 79:10,11)



அவனது எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறானா? (அல்குர்ஆன் 75:03)



இறந்தவன் உயிர்பிக்கப்படுவதும் அவன் விசாரிக்கப்படுவதும் சாத்தியமே இல்லை என்று அவர்கள் கருதியதால் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்பி வந்தனர்.



இந்த கேள்விக்கு திருக்குர்ஆனின் எனைய இடங்களில் விடையளித்திருக்கிறது! இந்த அத்தியாயத்திலும் விடையளிக்கிறது! இரண்டும் வௌ;வேறு விதமான விடைகள்!



மக்கிப்போய் ஒன்றுமில்லாமல் ஆன பின் எப்படி உயிர்ப்பிக்கப்பட முடியும்? என்பது உங்கள் கேள்வி என்றால் ஒரு காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்றுமில்லாமல் இருக்க வில்லையா? இன்ன பொருளாக இருந்தோம். இந்த இடத்தில் இருந்தோம். என்றெல்லாம் கூறமுடியாத நிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் இருந்ததில்லையா?



ஒன்றுமில்லாத நிலையிலிருந்து தான் நீங்கள் ஆரம்பமாகப் படைக்கப்பட்டீர்கள்! ஒன்றுமில்லாமல் இருந்தால் கூட படைக்கப்பட முடியும் என்பதை இது உணர்த்த வில்லையா? ஒன்றுமில்லாத நிலையிலிருந்து முதன் முதலில் படைப்பது ஆச்சரியமானதா? ஒரு முறை படைத்து பின்னர் அழித்து அதையே மறுபடியும் படைப்பது ஆச்சரியமானதா? என்றெல்லாம் பொட்டில் அறைந்தாற்போல் ஏனைய இடங்களில் திருக்குர்ஆன் இந்த கேள்விக்கு விடையளித்தது.



இந்த அத்தியாயத்தில் மனிதனின் சிந்தனையை தூண்டி நம்ப முடியாத அற்புதங்களை நினைவூட்டி மனிதன் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என பதிலளிக்கப்படுகிறது!



நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:06)



மலைகளை முளைகளாக நாம் ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:07)



மேலும் உங்களை ஜோடி ஜோடியாக நாம் படைக்க வில்லையா? (அல்குர்ஆன் 78:08)



மேலும் உங்களின் தூக்கத்தை இளைப்பாறுதலாக நாம் ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:09)



இன்னும் இரவை உங்களுக்கு ஆடையாக நாம் ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:10)



மேலும் பகலை வாழ்க்கை வசதிகளைத் தேட ஏற்றதாக ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:11)



உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களை நாம் அமைக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:12)



ஒளி வீசும் விளக்கையும் நாம் ஏற்படுத்தவில்லையா? (அல்குர்ஆன் 78:13)



மேலும் கார்மேகங்களிலிருந்து மழையை நாம் இறக்கவில்லையா? (அல்குர்ஆன் 78:14)



அதன் மூலம் தானியங்களையும், தாவரங்களையும் அடர்ந்த சோலைகளையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 78:15,16)



அவர்களின் கேள்விக்கு இந்த கேள்விகளையே இறைவன் பதிலாகத் தருகிறான்.



மக்கி மண்ணோடு மண்ணாக கலந்து விட்டவர்களை உயிருள்ள மனிதனாகப் படைப்பது உங்களால் முடியாது தான், உங்களில் மிகவும் பலசாலிகளாலும் முடியாதுதான். வரம்புக்குட்பட்ட ஆற்றலுள்ள மனித சமுதாயம் முழுவதும் முயன்றால் கூட அது முடியாதுதான்.



உங்களை விட பன்மடங்கு பெரியதான இநதப் பூமியை படைத்து அதை உருண்டை வடிவமாக்கி, அந்தரத்தில் மிதக்க விட்டு, அதைப் படுவேகமாக சுழலவிட்டு அதைவிடவும் வேகமாக அது சூரியனைச் சுற்றி வருமாறு அமைத்து, அந்தச் சுழற்சியையும், சுற்றுதலையும் நீங்கள் உணரமுடியாத வகையில் – தொட்டிலில் ஆடும் குழந்தை அந்த ஆட்டத்தை உணராதிருப்பது போன்று – அமைந்திருக்கின்ற சர்வ சக்தனுக்கு உங்களைத் திரும்பப் படைப்பது இயலாத ஒன்றாகி விடுமா? இதைச் செய்யப் போகிறவன் யார்? அவனது வல்லமை எத்தகையது என்பதை நீங்கள் அறிந்தால் இவ்வாறு ஆட்சேபனை எழுப்புவீர்களா?



நீங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அதே பூமியின் சில பகுதிகளை மிருதுவாகவும் சில பகுதிகளை அடர்த்தியாகவும் சில பகுதிகளை மண்ணாகவும் மற்றும் சில பகுதிகளை தண்ணீராகவும் படைத்து அதை சமன் செய்வதற்காக மலைகளையும் ஆங்காங்கே முளைக்கச் செய்த இறைவனுக்கு இது சாத்தியமாகாது என்கிறீர்களா?



நீங்கள் பல்கிப் பெருகுவதற்காக உங்களை ஆண்-பெண் என ஜோடிகளாகப் படைத்து அவ்விருவரும் ஒருவரை ஒருவர் ஈர்க்கக்கூடிய நிலையை ஏற்படுத்தி, அந்த ஈர்ப்பினால் இருவரையும் இணையச் செய்து, அந்த இணைப்பில் வார்த்தையில் வடிக்க இயலாத இன்பத்தை வைத்து, கண்ணுக்குத் தெரியாத சிறுதுளியை ஒருவரிடமிருந்து மற்றவருக்குச் செலுத்தி உங்களை படைத்த கடவுளுக்கு இது இயலாது என்று கூறுகிறீர்களா?



எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்று கருதும் எண்ணத்தைக் கொடுத்து, அந்த எண்ணத்தினால் சுறுசுறுப்பாக மனிதனை இயங்க வைத்து, அந்த இயக்கத்திற்கு ஏற்றவாறு பகல் பொழுதைப் படைத்து, அந்தச் சுறுசுறுப்பு வரம்பு மீறிப்போய் ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து மனநோய்க்கு ஆளாகாமலும், உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாமலும் இருப்பதற்காக இரவை ஏற்படுத்தி அந்த இரவில் ஓய்வைத் தேடக் கூடிய உணர்வையும் ஏற்படுத்திய அந்த நுண்ணறிவாளனுக்குக் கூட இந்த ஆற்றல் இருக்காது என்கிறீர்களா?



மனிதன் எட்டிப்பார்க்க இயலாத உயரத்தில் பலமான வானங்களை மிகவும் பிரம்மாண்டமான கூரைகளை ஏற்படுத்தி அதனால் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்திய ஆற்றலுடையவனுக்குக் கூட இது சாத்தியமற்றது என்கிறீர்களா?



உங்களுக்கு வெளிச்சத்தைத் தருவதற்காக சூரியனைப் படைத்து, மனிதனும், தாவரங்களும் வாழவும், வளரவும் வழி ஏற்படுத்தி மனிதன் பயன்படுத்தும் கழிவு நீரை உறிஞ்சி சுத்தமாக்கி நீராவியாக உயரே கொண்டு சென்று தூய நீராக மீண்டும் பூமிக்குத் திருப்பி அனுப்பி அதன் மூலம் பயிர்களை வளரச் செய்த வல்லமை மிக்கவனுக்கு இது இயலாத காரியமா?



வரண்டு செத்து விட்ட பூமிக்கு உயிர் கொடுப்பதும் இங்கிருந்த தண்ணீரை இல்லாமலாக்கி மறுபடியும் வரச் செய்வதும் மனிதன் உயிர்ப்பிக்கப்படுதல் சாத்தியம் என்பதை உங்களுக்கு விளக்கவில்லையா?

மேற்கண்ட வசனங்கள் மூலம் இத்தகைய கேள்விகளை எழுப்பி இது சாத்தியமான ஒன்றே என இறைவன் பிரகடனம் செய்கிறான்.



இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டால், அந்த இறைவன் எல்லாவிதமான பலவீனங்களிலிருந்தும் தூயவன் என்பதையும் அறிந்து கொண்டால், அவனது அதிகாரத்திற்கும், ஆற்றலுக்கும் எந்த எல்லையும் கிடையாது என்பதை விளங்கிக் கொண்டால், தனது வல்லமையை உலகறியச் செய்யும் வகையில் அவன் படைத்து வைத்திருக்கின்ற அதியசயங்களைப் பற்றி சிந்தித்தால் ‘எப்படி உயிர்ப்பிக்க முடியும்’ என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள். எப்படி என்பதைச் சிந்திப்பதை விட இதைச் செய்யக் கூடியவன் எத்தகையவன் என்பதை சிந்தியுங்கள்!



அவ்வாறு சிந்தித்தால் மனிதன் மண்ணோடு மண்ணாக மக்கி ஒன்றுமற்றுப் போனாலும் அந்த வல்லவனால் மீண்டும் அவனை உருவாக்க முடியும் என்பதை ஐயமற உணர்வீர்கள்!



மேற்கண்ட வசனங்கள் மூலம் இதைத்தான் அவர்களின் இரண்டாவது கேள்விக்குரிய விடையாக இறைவன் தருகிறான்.






0 comments:

Post a Comment